சனி, 25 ஜூலை, 2015

இசையெனும் அமுதினில் இவரொரு பாகம்! எமனுக்கும் ஏனோ இவரிடம் மோகம்? -காரஞ்சன்(சேஷ்)

                                      இசையெனும் அமுதினில் இவரொரு பாகம்!

                 எமனுக்கும் ஏனோ இவரிடம் மோகம்?

குப்தர்கள் காலம் பொற்காலம்
       இந்திய வரலாற்றில் !
உந்தன் காலம் பொற்காலம்
      இசையுலக வரலாற்றில் !

எங்கிருந்தோ வந்தாய்!
   இசைக்கலைஞன்    நான் என்றாய்!
இங்குனையே நாம்பெறவே
   என்னதவம் செய்தோமோ!

செந்தமிழ் வரிகளுக்கு
    செவிகுளிரும் இசைசேர்த்துத்
தெவிட்டாத தெள்ளமுதைத்
    தேன்மழையாய்த் தவழவிட்டாய்!

இன்றைய தொழில்நுட்பம்
    இல்லாத காலத்தே
நுட்பங்கள் பற்பலவும்
    நும் இசையில் நுழைத்தவரே!

வளர்ந்த நிலையில்- நீர்
   வடிவமைத்த பாடல்கள்
வளரும் பருவத்தே- நாங்கள்
     வாயாரப் பாடியவை!

எதார்த்த வாழ்வியலை
எடுத்துரைத்த காலத்தில்
இசைக்குத் தளமிருந்தது!
கவிஞர்க்குக்  களமிருந்தது!

மெல்லிசையின் வருடலிலே
சொல்லாட்சிக் கவிஞர்கள்
சொக்கிநின்ற தாக்கத்தில்
ஆக்கினரே அரும்பாடல்!

காதலோ, ஊடலோ, சாடலோ
மோதலோ, தேடலோ,ஆடலோ
ஏற்ற  பலபாடல்கள்
சாற்றின உம் திறத்தை!

உந்திய சிந்தனையால்
உருவான பாடலுக்கும்
சந்தம் பலதந்து
விந்தை புரிந்தவர் நீர்!

இறவாப் பாடல்கள்
இரட்டையரின் கைவண்ணம்!
தனித்து நின்றும் -நீர்
தணியாத  இசைவெள்ளம்!

மயக்கமா!கலக்கமா! பாடல்
மற்றொரு கவிஞனை
பெற்றெடுத்துத் தந்தது!
பேரெடுக்க வைத்தது!

பாடிய குயில்களுக்கு
பண்ணமைத்துத் தந்தவர் நீர்!
எண்ணங்களுக்கெல்லாம்
இசைவடிவம் தந்தவர் நீர்!

நினைத்தாலே இனிக்கும்!
நெஞ்சமெலாம் நிறைந்திருக்கும்!
இசைவானில் உன்பாடல்
திசையெங்கும் ஒலித்திருக்கும்!

தமிழ்த்தாய் வாழ்த்து
தரணியிலே ஒலிக்கும்வரை
உந்தன் புகழும்
உலகெங்கும் நிலைத்திருக்கும்!

என்னுளம் கவர்ந்த
மென்னுளம் கொண்டவனின்
ஆன்மா அமைதிபெற
அருளாயோ இறைவா நீ!

 -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

ஞாயிறு, 12 ஜூலை, 2015

கவிதைப்போட்டியில் முதற்பரிசு! -காரஞ்சன் (சேஷ்)

வணக்கம் நண்பர்களே!

திருவாளர்கள் ரூபன் மற்றும் யாழ்பாவாணன் அவர்கள் இணைந்து நடத்திய “உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி 2015”ல் எனக்கு முதற் பரிசு கிடைத்துள்ளது என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இருவருக்கும், மற்றும் எனது கவிதையை பரிசுக்கு தெரிவுசெய்த நடுவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்! பரிசினை வென்றுள்ளவர்களுக்கும், கலந்துகொண்டோர்க்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!


பரிசு அறிவிற்பிற்கான இணைப்பு இதோ
http://www.trtamilkkavithaikal.com/2015/06/2015.html

பரிசிற்குத் தெரிவுசெய்யப்பட்ட எனது கவிதை கீழே!
 
இணையத் தமிழே இனி!
தொட்டில் பருவத்தே தொடங்கியதே தமிழுணர்வு!
மட்டிலா மகிழ்வுடனே மழலைக்குத் தமிழமுதை
ஊட்டிடுவாள் அன்னையவள் ஊற்றெடுக்கும் தாலாட்டால்!
எம்மொழிகள் செம்மொழியாம் என்றாய்ந்து பார்க்கையிலே
எம்மொழிதான் செம்மொழியே-- ஏற்புடைத்த பழமையினால்!
 
மூவேந்தர் காலத்தை முத்தமிழால் உணர்ந்தோம் நாம்!
ஐம்பெரும் காப்பியங்கள் அணிந்திட்டாள் தமிழன்னை!
தோய்ந்ததமிழ்ப் புலவரெலாம் தொண்டாற்றி தமிழ்வளர்த்தார்!
தேய்கின்ற திங்களுமே திரும்பிடுதே முழுநிலவாய்!
தேயாமல் தீந்தமிழை திக்கெட்டும் வளர்த்திடுவோம்!
 
ஒற்றெழுத்துப் பிழையாலே உருக்குலையும் தமிழ்ச்சொல்போல்
ஒற்றுமை குன்றியதால் உருவிழந்தோம் தமிழினமே!
தாய்மொழியைக் கற்றிடவே தயங்குவதும் சரிதானோ?
சேய்களின் நாவெல்லாம் செந்தமிழும் தவழாதோ?
 
பைந்தமிழைப் பயிற்றிட பற்பல வழி செய்வோம்!
 
தேன்தமிழ்ப் பாடல்கள் திரையிசையில் நாம்கேட்டோம்!
இன்றைய தலைமுறைக்கு இல்லையந்த பேரின்பம்!
இன்றைய கவிஞர்களே! இயற்றுங்கள் நற்பாடல்!
சேய்களின் செவிகளிலே செந்தமிழைச் சேர்த்திட்டால்
தாய்மொழியும் வளராதோ? தமிழரினம் மகிழாதோ
 
கணிணிகளில் பல்வகையும் கைப்பேசி வகைகளுமே
பிணையத்தில் இணைந்து இணையமான இந்நாளில்
அனைத்திலும் தமிழ்தவழ ஆக்கிடுவோம் மென்பொருட்கள்!
இணையத்தில் தமிழ்வளர்த்து இசைபட வாழ்ந்திடுவோம்!
இணைத்திடுமே தமிழர்களை- இணையத்தமிழே இனி!
                                                              -காரஞ்சன்(சேஷ்)