வியாழன், 31 அக்டோபர், 2013

தீபாவளிச் சிந்தனைகள்! -காரஞ்சன்(சேஷ்)



சிறுவயதில்..

அடைகாத்த ஆசைகளுக்கு
விடைகிடைக்கும் நாளாய்
அடைமழை ஐப்பசியில்
அமைந்திடும் தீபாவளி!

புத்தாடை  உடுத்தி
மத்தாப்பு கொளுத்தி
இருப்பதைப் பகிர்ந்து
இனிப்பொடு காரம்
இணைந்துண்ட மகிழ்வுக்கு
ஈடில்லை உலகினிலே!

இருண்ட வானம்
இடையிடையே வெளிவாங்கி
வறுமை நிலையல்ல
வளம்பெறுவீர்! என்றுணர்த்தும்!

தூறலில்லா வேளைகளில்
ஈரம் உலர்த்திட
இருக்கும் பட்டாசை
விரிந்தகன்ற தாம்பாளம்
முற்றத்தின் மூலைதனில்
கூடல் வாய் பகுதியிலே
குச்சிமேல் சுமந்திருக்கும்!

காலை விடிவதற்குள்
கலசமும் மத்தாப்பும்!
சரமாய் வெடித்தால்
சட்டென முடியுமென்று
சரங்களைப் பிரித்து
சரிசமமாய்ப் பகிர்ந்திடுவோம்!

எட்டுப் பிள்ளைகளும்
விட்டு விட்டு வெடிப்பதனால்
இடைவேளையின்றி
வெடிச்சத்தம் கேட்டிருக்கும்!

அந்நாளில்
தீபாவளி இரவில்
இறுதியாய் ஒலிக்கும்
பட்டாசின் வெடிச்சத்தம்
இவ்வளவு விரைவாக
இந்நாள் முடிந்ததே
எனும் தாக்கத்தை
என்னுள் விதைத்தது!

இப்போதெல்லாம்..

இறுதியாய் ஒலிக்கும்
ஒற்றை வெடிச்சத்தம்
பட்டாசுத் தொழிற்சாலையில்
திரியாய்க் கருகிய
உயிர்களின் சோகத்தை
உணர்த்துவதாய்த் தோன்றுகிறது!

வெடிக்கும்போது
வெளிப்படும் புகையோ
காற்றில் நஞ்சை
ஏற்றிச் செல்கிறது!
மாசுபடும் காற்றாலே
மனிதர்க்குப் பலநோய்கள்!

தீபஒளித் திருநாளில்
ஒளியேற்றி
வெடி தவிர்ப்போம்!
இணைந்து கொண்டாடி
இன்புற்று வாழ்ந்திடுவோம்!

                                                                -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

செவ்வாய், 29 அக்டோபர், 2013

காலம்! உறவுப்பாலம்!



நாட்கணக்கில் காத்திருந்து
கடிதம் கண்டவுடன்
கவலை மறந்தது
ஒரு காலம்!

அவசரத்திற்கு மட்டுமின்றி
அனைத்திற்கும் தந்தி என
அடுத்தொரு காலம்!
 
வரிவடிவம் மட்டுமின்றி
குரல்கேட்டு குதூகலிக்க
தரைவழித் தொலைபேசி
தடம்பதித்த தொருகாலம்! 

படமெடுக்கும்! பாட்டிசைக்கும்!
பண்பலைகள் பலஒலிக்கும்!
செல்லுமிடமெங்கும்
செய்திகளைச் சேர்க்கும்!

செல்வந்தர் கைகளிலே
“செல்”லிருந்த நிலைமாறி
எல்லோர்க்கும் பொதுவாகி
செல்லுமிடமெங்கும்
செல்லுடனே செல்லும்
செல்வாக்கு பெற்றது- இக்காலம்!

 உலகைச் சுருக்கி ஊராக்கி
ஆசைமுகம்பார்த்து
அளவளாவும் வசதிகளை
இணையம் அளிப்பதுவும்- இக்காலம்!

 காலமாற்றத்தில்
பாலமாய்ப் பலவடிவில்
பயனளிக்கும் தொழில்நுட்பம்
வாழிய வாழியவே!
                                                      -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

அழகோ அழகு! -காரஞ்சன்(சேஷ்)


 
 
 அழகு!
 
 
 
 
 
 
 

அமைதி தவழும் அதிகாலைப் பொழுதழகு!

அலர்ந்த பூக்களில் அமர்கின்ற வண்டழகு!

அத்தனை புற்களிலும் முத்தான பனிஅழகு!

மாலைப் பொழுதின் மங்கிய ஒளி அழகு!
 

நீலவானத்தில் நீந்தும் முகில் அழகு!
 
பிறைநுதலில் விண்மீனாய் பிரியாத பொட்டழகு!

ஓடும் நதி அழகு! ஊர்க்குளத்தில் மீனழகு!

தளிர்கள் உரைத்திடும் தாய்மொழி தனியழகு!
 

வான்மீது விழுகின்ற வளைவான வில்லழகு!

கருத்த மேகத்தை  கடக்கின்ற கொக்கழகு!

சக்கரத்தின் சுழற்சியிலே மட்பாண்ட பிறப்பழகு!

முழுநிலவை மூடி முத்தமிடும் முகிலழகு!

 
விடிகின்ற வேளைதனில் விரைகின்ற புள்ளழகு!

வெள்ளம் வடிந்தபின்னே வெண்மணல் ஆறழகு!

வெண்மணலில் தடம்பதித்து விரைவதும் ஓரழகு!

கால்களை வருடும் கடலலையும் ஓரழகு!

 
தென்றல் சுமந்துவரும் தெம்மாங்குப் பாட்டழகு!

பள்ளமில்லாச் சாலையிலே பயணிப்பதோர் அழகு!

இருபுறமும் மரமிருக்கும் தார்ச்சாலை தனிஅழகு!

மழையில் குளித்தபின்னர் மரங்களெல்லாம் அழகு!

 
வான்மழையில் நனைந்த வாடிய பயிரழகு!

காற்றின் திசையினிலே நாற்றசைவும் நல்லழகு!

நற்றமிழின் சொற்களினால் நவில்கின்ற கவிஅழகு!

இயற்கையை இரசிப்பவர்க்கு எந்நாளும் உலகழகு!

                                                                                                -காரஞ்சன்(சேஷ்)

 பட உதவி: கூகிளுக்கு நன்றி!

வியாழன், 24 அக்டோபர், 2013

இனியொரு விதி செய்வோம்! -காரஞ்சன்(சேஷ்)



வெண்முத்து வெண்டைகளை
நீதி கேட்டு வீதியில் இறைத்தனரோ?

விளைவித்தது குற்றமா?
விளைந்தது குற்றமா?

விழலுக்கா நீரிறைத்தோம்?
விளைவதற்கே உழைத்தோம்!
விலைபோகவில்லையெனில்
வீதியில் இறைத்தல் நன்றோ?

பாலின்றிப் பலகுழந்தை
பாரினில் பரிதவிக்க
பாலின் விலையுயர்த்த
சாலையில் சாய்க்கின்றார்!

ஆதரவற்றோர் இல்லங்களுக்கு
அளித்திடலாம் இலவசமாய்!
உண்பொருள் ஈந்ததினால்
உவகை பிறக்காதோ?

பசியாறிய உள்ளங்கள்
பரிமாறும் வாழ்த்திற்கு
பாரினில் விலையேது?

விலைபோக வில்லையென
விளைந்த பொருட்களை
வீணாக்கல் தடுத்திடவே
இனியொரு விதிசெய்வோம்!
எந்நாளும் அதைக்காப்போம்!

  -காரஞ்சன்(சேஷ்)

செய்தி: நன்றி தினமலர்.

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

நாம் சிரிக்கும் நாளே திருநாள்!- காரஞ்சன்(சேஷ்)

நாம் சிரிக்கும் நாளே திருநாள்!


 
திருவுடையோர் நாளாக திருநாள்கள் இல்லாமல்
வறுமைநிலை அகன்று வளம்பெறும்நாள் திருநாள்!

கற்றறிந்தோர் ஒளியேற்ற கல்லாமை இருளெங்கும்
இல்லாமற் போனதென இனிக்கும் நாள் திருநாள்!

விண்முட்டும் விலைவாசி! விளைநிலமும் மனையாச்சு!
நிலத்தடி  நீருமிங்கே   நீளாழம் போயாச்சு!

போராடி விளைத்தபொருள்   போறாத விலைபோச்சு!
மண்ணை நம்பிவாழ்வோர்   மனமுடையும் நாளாச்சு!

வான்மழையின் கருணையினால்  வளமான பயிர்விளைய
உழவன் மகிழும்நாள் உலகிற்கே திருநாள்!

பெண்ணினத்திற் கெதிரான வன்முறைகள் ஒழிந்திங்கு
அண்ணல் விழைவுதனை அடையும்நாள் திருநாள் !

அண்டை நாடுகளின் சண்டை நிலையகன்று
இன்னலின்றி மக்களெங்கும் இன்புறும்நாள் திருநாள்!

வேற்றுமையால் விளைந்திடும் வீணான கலவரங்கள்
ஒற்றுமையால் ஒழிந்ததென உவக்கும்நாள் திருநாள்!

மொழியாலும் மதத்தாலும் பழித்திடும் நிலைமாற
எழுச்சியுடன் நாம்முயலும் எந்நாளும் திருநாள்!

ஊழல் ஒழித்திடவும்   உழைத்தே உயர்ந்திடவும்
அழையாமல் முன்வந்தால் அந்நாளே திருநாள்!

தந்திரத்தை நம்பாமல் தம்திறத்தை நம்பி
விந்தைகள் விளைவிக்க விழையும் நாள் திருநாள்!

நன்மைகள் பெருகி நாடு வளம்பெற்றதென்று
சிந்தை குளிர்ந்து “நாம் சிரிக்கும்நாளே திருநாள்!”

                               -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!


திரு ரூபன் அவர்களின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டிக்கான கவிதை!

வெள்ளி, 18 அக்டோபர், 2013

களை- காரஞ்சன்(சேஷ்)





களை!

கரிபடிந்த 
அடுக்களைச்சுவர்
கணக்குப்போட  
கரும்பலகையாய்!

வெள்ளையடித்த 
உட்சுவர்
கிறுக்கி விளையாடும்
குழந்தைகட்கு
வெள்ளைக் காகிதமாய்...

வண்ணக் கிறுக்கல்கள்
வாசல் சுவரெங்கும்!
வாத்தியாரான
வாண்டுகளின்
விளையாட்டால்!

உயரத்தை ஒப்பிட
அப்பா அம்மாவுடன்
ஒட்டி நின்று
வரைந்த கோடுகள்!

இவையாவும்
உயிரோவியங்களாய்
ஓட்டு வீட்டுச் சுவர்களில்!

வண்ணச்சுவர்களில்
வாங்கி வந்த ஓவியங்கள்
தொங்கவிடப்பட்டும்
கிறுக்கல்கள் ஏதுமின்றி
"களை" குறைந்தே 
காண்கிறது
க(ஒ)ட்டிய புதுவீடு!

                       -காரஞ்சன்(சேஷ்)


திங்கள், 14 அக்டோபர், 2013

விஜயதசமி நல்வாழ்த்துகள்! -காரஞ்சன்(சேஷ்)



     வெண்தாமரைமேல் வீற்றிருக்கும் கலைமகளே!

      எந்நாவில் எழுந்தருள்வாய்; இன்கவிகள் இயற்றிடவே!

      உன்பாதம் பணிகின்றேன்! உவந்தருள் புரிந்திடுவாய்!
              
      உள்ளம் உயர்வடையும் உன்னருள் துணையிருந்தால்!
 
      ஞானம் அருளிடுவாய் ஞாலம் தழைத்திடவே!
                                                                                             
                                                                                     -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

சனி, 12 அக்டோபர், 2013

பார்த்தேன்! இரசித்தேன்! படம் பிடித்தேன்! -காரஞ்சன்(சேஷ்)

                                                                                                           


                                                    
                                                              ஒரு இனிய உதயம்!


                                                 
                                                    மரமே மயிலோ?!


வெண்பஞ்சு மேகங்கள்!


தீபாவளி!

பூவரசங்குப்பம் லக்‌ஷ்மி நரசிம்மர்!
காண ஆயிரம் கண் வேண்டும்!

வெள்ளி, 4 அக்டோபர், 2013

தாயுள்ளம்!- காரஞ்சன்(சேஷ்)



வெண்ணிற மலர்தேடி
வண்டினம் பாடிவர
திகட்டாத தேனுண்ண
தேன்சிட்டும் தேடிவர
காகமொடு அணிலும்
களிப்புடன் கனிஉண்ண
வெயில் வேளைதனில்
விரிக்கின்றாய் நிழற்குடையை!

பறித்து பழம்தின்ன
சிறுவர்கள் பலர்கூட
இரவினில் வெளவால்கள்
பழமுண்ண உனைநாட

படைப்பின் நோக்கம்
பயன்பட வாழ்தல்
என்றுணர்த்தவோ
இத்தனையும் தாங்கி

சர்க்கரைப் பழமரமே-நீ
புத்தம் புதுமலர்களுடன்                                                                                                           புன்முறுவல் பூக்கின்றாய்?

-காரஞ்சன்(சேஷ்)
படங்கள்: காரஞ்சன்(சேஷ்)