ஞாயிறு, 30 டிசம்பர், 2012

வருக புத்தாண்டே! வருக! வருக! -காரஞ்சன் (சேஷ்)


அனைவருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


வருக புத்தாண்டே! வருக! வருக!
 
ஈராறுடன்  இன்னும் ஒன்றிணைந்திட

வருக புத்தாண்டே! வருக! வருக!

மைதி நல்கிடும் ஆண்டென வருக!

ற்றொணாத் துயர்களை அகற்றிட வருக!

ன்சொல் எங்கும் எதிரொலித்திடுக!
 

கைக்குணம் எங்கும் நிறைந்திட

ழவும் தொழிலும் உலகினில் ஓங்கிட

ற்றாய் எங்கும் உவகை பொங்கிட

ங்கும் மங்கலம் என்றும் தங்கிட

ற்றம் அளிக்கும் ஆண்டென வருக!
 

யம் போக்கி அறங்கள் தழைத்திட

ற்றுமை உணர்வு உலகெலாம் உதித்திட

ரணி நின்று வன்முறை ஒழித்திட

ஒளடதம் பெருகி உறுபிணி அகற்றிட

உறுதியும் திறனும் அருள்க புத்தாண்டே!

                                                            - காரஞ்சன் (சேஷ்)

சனி, 29 டிசம்பர், 2012

எச்சம்!-காரஞ்சன்(சேஷ்)


எச்சம்!


காட்டிக் கொடுக்கும்
கறுப்பு ஆடல்ல இது!

காலார ஓய்வெடுக்கும்
கருப்பு ஆடு!

எங்கிருந்தோ பறந்துவந்து

இதன்மேல் ஏன் அமர்ந்தாய்?

சிலையென நினைத்து நீ
சென்றமர்ந்தாயோ?
 
இடங்கொடுத்தவர்மேல்
எச்சமிடாமல்
எழுந்துபற காகமே!

                 -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி:கூகிளுக்கு நன்றி!

வியாழன், 27 டிசம்பர், 2012

அணைத்திட வருவாயோ?- காரஞ்சன்(சேஷ்)


                                                                     அணைத்திட வருவாயோ?

ஆற்றின் கரையினிலே
அந்திப் பொழுதினிலே
சந்தித்த பொழுதுகளென்
சிந்தையில் தோன்றுதடி!
 
வளைந்தோடும் நீர்காட்டும்
வண்ணமிகு வான்நிறத்தை!
கண்ணிரண்டின் நீர்காட்டும்
கவலையுறும் என்னுளத்தை!

சுழித்தோடும் நீர்போல
சுற்றுதடி உன்நினைவு!
பகையாச்சு பொழுதெல்லாம்
பாவை உன் பிரிவாலே!

கழித்திட்ட காலமெலாம்
கனவென வரும்வேளை
விழிக்கிறதே விழியிரண்டும்
விழிக்கையில் நீயின்றி!
 
கோடையில் மழையொருநாள்
குடைக்குள் இருவருமாய்
பிடித்த கதைகளெலாம்
பேசியே நடந்திட்டோம்!
நனைந்தன உடைகளொடு
நம்மிருவர் இதயமுமே!

கூடிடத் துணைதேடி
கூவிடும் குயிலொன்று
இழையோடும் சோகத்தை
இன்னிசையாய் மீட்டுதடி!

மதிற்மேல் படர்ந்தகொடி
மனதினை வாட்டுதடி!
ஏக்கம் எனும்தீயை
என்னுள்ளே மூட்டுதடி!

ஏக்கப் பெருந்தீயை
என்றணைக்க வருவாயோ?

                       -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
வலைச்சரத்தில் பகிர்ந்த கவிதை
 

புதன், 26 டிசம்பர், 2012

இடம்பிடித்தாய்!-காரஞ்சன்(சேஷ்)




      
                                                          இடம்பிடித்தாய்!
வாலாட்டி நன்றிகாட்டும்
வளர்ப்புப் பிராணிக்கு
இடத்தோளில் இடமளித்தாள்!

உள்ளத்தில் இடமுண்டு
உந்தனுக்கு என்றாளோ?

இடம்பிடித்த களிப்பு
இருக்கிறதே அதன்முகத்தில்! 
 
இடமளித்து வலம்வரும் நீ
இடம்பிடித்தாய் என்னுள்ளும்!

-காரஞ்சன்(சேஷ்)
          
பட உதவி: கூகிளுக்கு நன்றி

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

வலைச்சர ஆசிரியர் பொறுப்பு!

வணக்கம் நண்பர்களே!


வலைச்சரத்தில் வரும் 17-12-2012 ( நாளை முதல்) 23-12-2012 ஞாயிற்றுக்கிழமை வரை ஒருவார காலத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க திரு சீனா ஐயா அவர்களின் அழைப்பினை ஏற்று இசைந்துள்ளேன்! என்னைத் தொடர்ந்து இதுநாள் வரையில் பின்னூட்டமளித்து ஊக்கப்படுத்தி வரும் உங்கள் அனைவருக்கும் இத் தருணத்தில் நன்றி தெரிவித்து இந்த வாரத்தில் என் பொறுப்பை சிறப்பாகச் செய்து முடிக்க தங்களின் நல்லாதரவை நல்கிட வேண்டுகிறேன்!
நன்றி!
வலைச்சரத்தில் நாளை முதல் சந்திப்போம்!
வருக!
என்றும் அன்புடன்
காரஞ்சன்(சேஷ்)

வியாழன், 6 டிசம்பர், 2012

பிடிப்பு!-காரஞ்சன்(சேஷ்)


பிடிப்பு!


பிடித்தார்…
பிடித்ததனால் பிடிக்கின்றார்!
பிடிப்பதனால்
பிடித்தவர்க்கும்
பிடிக்காதவர் ஆகின்றார்!
பிடிப்பவரைப் பிடித்திட்டால்
பிடித்திடுவாரோ இனி?
பிடிப்பதனால்
பீடிக்கும் பிணிகள் பல!
பிடிக்காதீர்- புகை!
 
 




-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

திங்கள், 3 டிசம்பர், 2012

எது ஊனம்? -காரஞ்சன்(சேஷ்)

                                                             
                                                                எது ஊனம்?
03-12-2012

உலகமெங்கும் அனுசரிக்கும்
ஊனமுற்றோர் தினம் இன்று!

அவர்படு துயரம்
அடுத்தவர் உணர்ந்து
அரவணைத்திடவே
அமைந்த தினமிது!

உலகளவில்
 ஊனமுற்றோர்
மொத்த மக்கள் தொகையில்
பத்து சதவீதமாம்!

ஆனால் உண்மையில்...

கண்ணிருந்தும் கல்லாதோர்
கண்ணிழந்தோரே!

செல்வம் நிறைந்திருந்தும்
எள்ளளவும் ஈயாதார்
கையிழந்தோரே!

உடல் ஊனம்
 ஒரு பொருட்டல்ல என
உழைப்பவர் மத்தியில்
உடல் பலமிருந்தும்
உழைக்க மறுத்து
முடங்கிக் கிடப்பவர்
முடவரன்றோ!

அடுத்தவர் படுதுயர்-செவி
மடுத்திட மறுப்பவர்
செவிடரன்றோ?

நாடி வந்தோர்க்கு
ஓடி உதவாக்
கால்களும் ஊனமன்றோ?

வாய்மை உரைக்காத
வாயும் ஊமையன்றோ?

பிறர் உயர்வைப்
பொறுக்காத பலரின்
மனமும் ஊனமன்றோ?

இத்தனை ஊனம்
நம்மிடம் இருப்பதை
இனியேனும் உணர்ந்து
உதவிக்கரம் நீட்டுவோம்
ஊனமுற்றோர்க்கு!

முடங்கிக் கிடக்கும்
முக்கியத் திட்டங்கள்
விரைந்து செயல்பட
வேண்டியன செய்வோம்!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!