ஞாயிறு, 29 ஜூன், 2014

சிறுகதை விமர்சனத்திற்குப் பரிசு!

VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில் இரண்டாம் பரிசு!
மதிப்பிற்குரிய திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதை விமர்சனப் போட்டியில்
VGK 22 – ‘வடிகால்'
சிறுகதையின் விமர்சனத்திற்கு எனக்கு
இரண்டாம் பரிசு
 கிடைத்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! 

 வாய்ப்பளித்த திரு வை.கோ சார் அவர்களுக்கும்  விமர்சனத்தை பரிசுக்கு தெரிவு செய்த நடுவர் அவர்களுக்கும்  எனது மனமார்ந்த நன்றிகள்!

VGK 22 – ‘வடிகால்'
சிறுகதைக்கான இணைப்பு இதோ


பரிசு பெற்றதற்கான அறிவிப்புடன் என்  விமர்சனம் வெளியான இணைப்பு இதோ

http://gopu1949.blogspot.in/2014/06/vgk-22.html

-----------------------------------------------------------------------------------------------------------------
 
 
VGK 21 – ‘மூக்குத்தி'
சிறுகதையின் விமர்சனத்திற்கு என் மனைவிக்கு
இரண்டாம் பரிசு
 கிடைத்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! 

 வாய்ப்பளித்த திரு வை.கோ சார் அவர்களுக்கும்  விமர்சனத்தை பரிசுக்கு தெரிவு செய்த நடுவர் அவர்களுக்கும்  எங்களது மனமார்ந்த நன்றிகள்!

VGK 21 – ‘மூக்குத்தி'
சிறுகதைக்கான இணைப்பு இதோ


பரிசு பெற்றதற்கான அறிவிப்புடன் என் மனைவியின் விமர்சனம் வெளியான இணைப்பு இதோ

http://gopu1949.blogspot.in/2014/06/vgk-21-02-03-second-prize-winners.html

வாழ்த்திய / வாழ்த்தப்போகும் நல்லிதயங்களுக்கு எங்களின் உளமார்ந்த நன்றி!
-காரஞ்சன்(சேஷ்)

திங்கள், 16 ஜூன், 2014

என் மனைவிக்கு சிறுகதை விமர்சனத்தில் இரண்டாம் பரிசு!-காரஞ்சன்(சேஷ்)

VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில் இரண்டாம் பரிசு!
மதிப்பிற்குரிய திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதை விமர்சனப் போட்டியில்
VGK 20 – ‘முன்னெச்சரிக்கை முகுந்தன்'
சிறுகதையின் விமர்சனத்திற்கு என் மனைவிக்கு
இரண்டாம் பரிசுடன் ஹாட்ரிக் வெற்றி
 கிடைத்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! 

 வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும்  விமர்சனத்தை பரிசுக்கு தெரிவு செய்த நடுவர் அவர்களுக்கும்  எனது மனமார்ந்த நன்றிகள்!

VGK 20 – ‘முன்னெச்சரிக்கை முகுந்தன்'
சிறுகதைக்கான இணைப்பு இதோ


பரிசு பெற்றதற்கான அறிவிப்புடன் என் மனைவியின் விமர்சனம் வெளியான இணைப்பு இதோ

http://gopu1949.blogspot.in/2014/06/vgk-20-02-03-second-prize-winners.html

வாழ்த்திய / வாழ்த்தப்போகும் நல்லிதயங்களுக்கு எங்களின் உளமார்ந்த நன்றி!

-காரஞ்சன்(சேஷ்)

வியாழன், 12 ஜூன், 2014

ஒளிப்படக் கவிதைக்குப் பரிசு! -காரஞ்சன்(சேஷ்)

வலையுலக நண்பர்களுக்கு வணக்கம்!

"நம் உரத்த சிந்தனை" இதழுக்கு ஒளிப்படக் கவிதைப் போட்டிக்கு நான் எழுதி
 
அனுப்பிய கவிதை பரிசுக்குத் தெரிவாகி இம்மாத இதழில் வெளிவந்துள்ளது
 
என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,
 
அந்தக் கவிதையை  என் வலைப்பூவில் பகிர்ந்துள்ளேன்.
 
கவிதைக்கான இணைப்பு இதோ:
 
 
 
ஒரு வெண்பா எழுத ஆசைப்பட்டு  "உத்தம வாழ்வென்  றுணர்" எனும்
 
ஈற்றடிக்கு நான் எழுதிய வெண்பா.


நித்தமும் சோறுண்டு  நீட்டிக்  கதைபேசி

இத்தனை நாட்கள்  கழிந்தன -இத்தலத்தில்

எத்தனை பேர்க்கு பயன்தந்தோம் என்பதுவே

உத்தம வாழ்வென் றுணர்!

வெண்பா அறிந்தவர்கள் குறையிருப்பின் சுட்டுக. பிழையிருப்பின் பொருத்தருள்க.

நன்றி!

-காரஞ்சன்(சேஷ்)

சனி, 7 ஜூன், 2014

எட்டாக்க(ன்)னிகள்! சிறுகதை விமர்சனத்திற்கு என் மனைவிக்கு இரண்டாம் பரிசு!



மதிப்பிற்குரிய திரு  வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதைப் போட்டியில் "எட்டாக்க(ன்)னிகள்" சிறுகதையின் விமர்சனத்திற்கு  என் மனவிக்கு இரண்டாம்  பரிசு கிடைத்துள்ளது. 
 
VGK 19 - ’ எட்டாக்க(ன்)னிகள்  ’

http://gopu1949.blogspot.in/2014/05/vgk-19_23.html

பரிசுபெற்றதற்கான அறிவிப்புக்கு இணைப்பு இதோ:

http://gopu1949.blogspot.in/2014/06/vgk-19-02-03-second-prize-winner.html

வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும், தெரிவு செய்த நடுவர் ஐயாவிற்கும் என் மனமார்ந்த நன்றி!


என் மனைவியின் விமர்சனம்!


எட்டாக்க(ன்)னிகள் - விமர்சனம்


பாரதிராஜா அறிமுகப்படுத்தும் கிராமம் போன்று முதலிலேயே ‘எட்டாக்க(ன்)னிகள்’ கதை தொடங்குகிறது. சாதாரணமாகக் கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகளில் கும்பல் இருக்காது. தற்போது தொழிற்சாலைகள் மற்றும் கல்லூரிகள் அவ்விடங்களில் பல பெருகி வருவதால் அதிக கும்பல் (குறிப்பாக இளம்பெண்கள்) ஒன்று வேலை நிமித்தமாகவோ (அ) கல்லூரிப் பிராஜெக்ட் (அ) டிரைனிங் எனப் பயணப்படுவது வாடிக்கையாகிவிட்டது. பெண்கள் என்றாலே மலர்கள்; மணமுடைய மலர்கள் பயணத்தில் வாசம் ஏற்படுத்தியதில் வியப்பில்லை.
 
கதாநாயகன் வாயிலாக கதாநாயகியைப் பற்றிய வர்ணனை, அந்த இளம் வயதுபெண்கள் கூட்டத்தில் ஒருத்தி மட்டும் ஒட்டடைக்குச்சி போல அசாதாரண உயரம். குதிரை முகம். மோட்டு நெற்றி. அதில் சோடாபுட்டி மூக்குக்கண்ணாடி வேறு. எலி வால் போன்று குட்டையாகக் கொஞ்சூண்டு தலைமுடி மட்டுமே. ஒரே நிதான உயரமுள்ள மற்ற பெண்களுடன் இவள் சேர்ந்திருப்பது, ஏதோ அழகிய வாத்துக்கூட்டங்களின் நடுவே, கொக்கு ஒன்று நிற்பது போலத்தோன்றியது எனக்கு. .


இத்தகைய வர்ணனையைப் படித்தவுடன் இயல்பாகவே படிப்பவரின் ஊகத்திற்கு கதாநாயகனின் உருவ அமைப்பை ஓடவிட்டு, ஆறடி உயரத்தில் அழகான அரவிந்த்சாமியைக் கண் முன் நிறுத்துகிறார்.
 
இதற்கு வலு சேர்க்கும் வகையில் கதாநாயகியை வர்ணித்ததுடன் இப்படியும் ஓர் அழகற்ற படைப்பா? என அனுதாபப்பட வைத்தது வேறு.
பின், ”அவள் வலிய வந்து உரையாடியதில் ஒரு வித இரசாயன மாற்றம் ஏற்பட்டு“ என முப்பத்து ஐந்து வயது என அனுமானிக்கமுடியாத ஐ.எஸ்.ஐ பிரும்மச்சாரி விவரிக்கையில் சற்றும் ஐயமே எழவில்லை அந்த உருவம் குறித்து.
 
மணிகேட்டு, காவிரி நதி நீர் பிரச்சினை பற்றி பேசி, என மிகவும் இயல்பாக நட்பு வளர்ந்து காதலாகி பரிணமிக்கும் வேளை அதைக் கதாநாயகன் கோடிட்டு காட்டியது பொங்கியெழும் இளமை உணர்ச்சிகளையும், ஓடிவரும் நதி நீரையும் ஒருவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. அது கட்டுக்கடங்காமல் வெள்ளமாய்ப் பாய்ந்து வரும். தாகமும் மோகமும் தீர அனுபவிப்பது அனைவரின் பிறப்புரிமையே” மிகவும் சிறப்பு.
 
அழகற்ற ஒருவருக்கு அனுதாபத்தினால் தான் வாழ்வளிக்க வந்ததாக எண்ணியதுடன் அவளும் அதை ஆமோதிப்பதாய் எண்ணி “ஒரு கை ஓசையை” எழுப்ப எண்ணியது இயல்பே. அவள் பஸ்ஸில் சில்லரை கொடுத்து உதவியதும் தன் காதலை ஆமோதிப்பதாய் உணரப்பட்டு கடிதம் எழுத வைத்தது என ஒவ்வொன்றிலும் மிகவும் படிப்படியாய் வெகு இயல்பாய் அமைத்த விதம் அழகு.
 
“அவள் வருவாளா?” என விழிமேல் வழி வைத்து பார்க்கையில் அவள் வராமல் போன போது வருந்தும் எண்ண ஓட்டங்கள் எல்லாமே இயற்கையாய் கதையோடு ஒன்றி விடுகிறது.

 
இயற்கையாகவே எண்ணங்களைக் கடிதம் வாயிலாக வெளிப்படுத்துவது என்பது சற்று எளிதாகத் தோன்றுவதால் முத்து முத்துக் கையெழுத்தில் எழுத எத்தனித்ததில் அவருடைய சிரத்தை தெரிகிறது. ஆனால் அந்தக் கடிதத்தைச் சேர்க்கமுடியாமல், மீண்டும் மீண்டும் தானே படித்து ஆனந்தப்படுவதும் பின் கசங்கியதால் வேறு பிரதி எடுத்து பத்திரமாய் கவரில் வைத்து எடுத்துச் செல்வதும் அழகிய நடையில் விரிகிறது.

 
அவளது வாத்துக் கூட்டத்தில் ஒரு வாத்து அவளுடைய கடிதத்தை அளித்தபோது அதைப் பத்திரப்படுத்தி, முத்தமிட்டு அவளது நிச்சயதார்த்த விழா அழைப்பைப் பார்த்து, அழகே இல்லாத அவளை அவளது அத்தைப் பையன் மணக்க இருப்பதாக அறிதல்
“உருவு கண்டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னா ருடைத்து”
என உணர்த்துகிறது.
நமக்குள் ”ஐயோ பாவம்” இவ்வளவு நல்ல மனதுடன் அழகற்ற அவளுக்கு வாழ்க்கை அளிக்க வந்தவர் முன்பே,
“Make hay while the sun shines”
(அ) 
அவள் நெகிழ்ந்ததாய் இவர் கருதிய தருணத்தில்
“Strike while the iron is hot”
என்று செயல்பட்டிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. 

  ஒருவேளை கதாநாயகியின் முடிவே வேறாக இருந்திருக்கலாம்?
ஆனால் எல்லாவற்றிற்கும் மணிமகுடம் வைத்தாற்போல் மூன்று அடி மூன்று அங்குல உயரமே உள்ள ஒருவரின் படத்தையும் போட்டு அவர் நம்மை இந்த அளவு பீடிகையின் விளிம்பிற்கே அழைத்துச் சென்று ஒரே போடாய் உடைத்த விதம் “Highly Commendable” எனலாம்.

 
இனி பிரும்மச்சாரி பற்றிய விளக்கம் மிக அருமை; இனி நான் சொல்ல விழைவதெல்லாம் அனுதாப அலையை காட்சிப் பேழையைச் சற்றே கதாநாயகன் புறம் நகர்த்தி 
“கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும்
கல்யாண மாலை!
இன்னார்க்கு இன்னார் என்று எழுதிவைத்தானே
தேவன் அன்று!”
என்பதே!!

எட்டிய MONEYகள் விமர்சனம்

கோடிக்கணக்கில் பணம் சேர்த்து விட்டு நோய்வாய்ப்பட்ட நிலையில், இப்பவோ அப்பவோ காலன் வரும் வேளை காகிதப்பணம் குறித்தக் கவலை கணவனுக்கு.
 
“காசு, பணம், துட்டு, money, money”, அது படுத்தும் பாடு வியக்க வைக்கிறது.

 
தான் இறக்கும்போது தன்னுடனேயே புதைக்கும் படி கணவன் கேட்டதற்கிணங்க கோடியை ஆயிரம் ரூபாய்களாக மாற்றி அவருடைய பழைய டைரிகள் என ஏமாற்றி அவரைப் புதைத்த குழியிலேயே புதைத்து விட்டு வந்தவுடன் மனைவியிடம் அவளுடைய தம்பி சந்தேகமாய் கேட்டதற்கு


”நானா பணத்தின் மதிப்புத் தெரியாதவள்?
நானா பைத்தியக்காரி?
போடா போக்கத்தவனே .....
நான் அவருடன் சூட்கேஸில் அனுப்பியுள்ள தொகை
By way of Cheque  மட்டுமே;
அதுவும் ’Account Payee only’ என்று ’Special Crossing’ செய்யப்பட்டது.
அதுவும் Payable .... in favour of 'MY BELOVED HUSBAND', only ;
அவரைத்தவிர அந்தப்பணத்தை யாருமே வங்கியிலிருந்து
எடுக்க முடியாது;
ஏன் அவரே கூட இனி அந்தப் பணத்தை எடுக்க முடியாது;
பைத்தியக்காரா, நான் உன் அக்கா.......டா;
உனக்கு முன்னாலேயே பிறந்தவளாக்கும்” என்றாள்.

 
இதை படித்தபோது எதை நொந்துகொள்வது என்றே புரியவில்லை!!
“போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைப் படைத்தானே” எனப் பாடத் தோன்றுகிறது.

 

“சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”!!

 

கதை- படைப்பு அருமை!!
நன்றி!!
-எழிலி சேஷாத்ரி

புதன், 4 ஜூன், 2014

என்னுயிர்த்தோழி கேளொரு சேதி!- காரஞ்சன்(சேஷ்)

 
என்னுயிர்த்தோழி கேளொரு சேதி!

என்னுயிர்த்தோழி கேளொரு சேதி!
இதுதானோ சில மனிதர்கள் நீதி?

தன்னலம் ஒன்றே நினைவினில் கொள்வார் -தன்
தலைமுறை செழிக்க வழிவகை செய்வார்
மக்கள் நலனை மனதினில் கொள்ளார்
எப்பழி வரினும் ஏற்றிடத் துணிவார்!

மனைவிலை அறிவார்! மணல்விலை அறிவார்!
இயற்கை வளங்களை அழித்திடத் துணிவார்-வருகிற
தலைமுறை செழிப்புடன் வாழ இருக்கும்
வளங்களைக் காத்திட நினையார்!

கழிவுநீரினை ஆற்றினில் கலந்தால்
அழிவு நேர்ந்திடும் என அறியாரோ?
இனியேனும் இவர் இதை உணர்வாரோ?
வளங்களைக் காக்க வழி வகுப்பாரோ?
  
கரைபுரண்டோடிய காவிரி ஆறு -நீரின்றிக்
காய்கின்ற நிலையினைப் பாரு!
புதுப்புனல் பொங்கும் நாள் வருமோடி?
எங்கும் மகிழ்வினைத் தான் தருமோடி?
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

ஞாயிறு, 1 ஜூன், 2014

ஏமாற்றாதே! ஏமாறாதே சிறுகதைக்கு என் மனைவியின் விமர்சனம்!

மதிப்பிற்குரிய திரு  வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதைப் போட்டியில் "ஏமாற்றாதே! ஏமாறாதே" சிறுகதையின் விமர்சனத்திற்கு  எனக்கும் என் மனவிக்கும் முதற் பரிசு கிடைத்துள்ளது. 
 
 

"ஏமாற்றாதே! ஏமாறாதே" கதைக்கான இணைப்பு இதோ:


பரிசுபெற்றதற்கான அறிவிப்புக்கு இணைப்பு இதோ:

http://gopu1949.blogspot.in/2014/06/vgk-18-01-03-first-prize-winners.html

வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும், தெரிவு செய்த நடுவர் ஐயாவிற்கும் என் மனமார்ந்த நன்றி!


என் மனைவியின் விமர்சனம்!

தலைப்பிலேயே தொடங்கிவிடுகிறது நம் ஆசிரியரின் தனித்துவம். ஒரு சினிமாப் பாடலை நினைவுறுத்தும் இந்தக் கதையின் தலைப்பு “ஏமாற்றாதே.. ஏமாறாதே”.

தாரணமாக ஒரு சிறிய நடைபாதைக் கடை. ஒரு கிழவி கடைவிரிக்கும் விதம், அவளுடைய மன ஓட்டம், தளர்வான வயோதிக நிலை, அதனால் முன்பு போல் அதிக தேங்காய்களைக் கொண்டுவர இயலாமை, அதனால் வருமானக் குறைவு, ஆனாலும் அத்தகு சூழலிலும் “தன் கையே தனக்குதவி” என்று தன்னால் இயன்றதை உழைத்துப் பெறும் உறுதியான மனநிலை இத்தனையையும் கண்முன்னே நிறுத்தி வேலையில்லா வாலிப நெஞ்சங்களுக்கு ஓர் படிப்பினையை அறிவுறுத்தும் முதல் படி முதல் பகுதி. உழைப்பே உயர்வு என்பது உண்மையன்றோ? அது நன்மையன்றோ?

தேங்காய் விலை கேட்பவரிடம் விலையைச் சொல்லி, எடுத்துக்கொள்ளுங்கள் எனக் கூறி, தான் சற்று விலையைக் குறைத்துக் கொடுப்பதாகவும், இன்முகத்துடன் உரைத்து, பின் அடிமாட்டு விலைக்குப் பேரம் கேட்கப் படும்போது, கட்டுப்படி ஆகாது எனக் கூறுவதும், அழகாய் அந்த மூதாட்டியின் உள்ளக்கிடக்கையை, நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாய் உணர்த்துகிறது.

எப்படித்தான் ஆசிரியரின் ஒரு சாதாரண மனிதனின் ஒவ்வொரு செயலையும், உணர்வையும் தனிமனித நியாயங்களையும் அருகிருந்து பார்த்தது போல் அழகாய்க் கோர்வையாய் படம்பிடித்துக் காட்டமுடிகிறதோ? வியப்பில் விரிகின்றன விழிகள்.

ஒரு பெரிய ஷாப்பிங் மாலிலோ அல்லது நிறுவனங்களிலோ பொருள் வாங்க நேர்கையில், தம்மைக் கவுரவக் குறைவாய் மதிப்பிட்டு விடுவார்களோ என்ற போலியான முகத்திரை கிழிபடாமல் இருக்கும்படி, அவர்கள் சொன்ன விலைகொடுத்து, ஒரு பைசா கூட பேரம் பேச முடியாமல் பொருட்களை வாங்கி வரும் நபர்கள் குறித்து வருணித்த விதம் அற்புதம் என்று சிலாகிக்க வைக்கிறது.

அதேசமயம், நடைபாதைக் கடை வயோதிக வியாபாரிகளோ அல்லது வாலிப வயதினரோ, யாராய் இருந்தாலும் அவர்களிடம் பேரம் பேசத் துணிவதும், என்னதான் அவர்களின் வறுமையும் வாழ்வியலும், இந்த வியாபாரம் ஒன்றே அவர்களின் வாழ்வாதாரம் என்ற நிதர்சன உண்மை தெரிந்திருந்தாலும், நமது கதாநாயகன் போன்றவர்களின் அல்பத்தனமான சிந்தனை நம்மைத் தலைகுனிய வைக்கிறது.

 ஓரிரண்டு ரூபாய் அதிகமாய்க் கொடுத்து, நடைபாதைக் கடையினரிடம் பொருள் வாங்கும்போது அவர்கள் அடையும் ஆனந்தமே அலாதி! அவர்கள் பரிவாய், பாசமாய் அள்ளித் தரும் காயோ அல்லது பொருளோ நமக்குக் கண்டிப்பாய் ஒரு உன்னதமான செயலைச் செய்த உணர்வை, அவர்களுடைய வாழ்க்கைக்கு நம்மால் ஆன சிறு உதவி செய்த ஆனந்தத்தை (அணில் அணை கட்ட உதவிய விதமாய்) அளிக்கும் என்ற உண்மையை உணர்த்த முயன்ற ஆசிரியரின் முயற்சி மிகுந்த பலனளிக்கும் என்பதும், அவரது ஆதங்கத்தின் வெளிப்பாடு, இனி நடைபாதைக் கடையில் பொருள் வாங்கும் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நிமிடமாவது யோசித்துச் செயல்படக்கூடிய ஒரு படிப்பினையை உண்டாக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ஆசிரியரின் ஒவ்வொரு கதையும் அவரைப்பற்றி அவரது சுருக்கமான விமர்சனமான “சாதாரணமானவன் ஆனால் சாதிக்க நினைப்பவன்” என்பது உண்மைதான் என்பதை ஆணித்தரமாய் நிரூபிக்கிறது.

ஒருவழியாய்த் தேங்காய்களைத் தட்டிப் பார்த்து, முற்றியதாய் இருக்கிறதா என்று ஆட்டிப் பார்த்து கொள்முதல் செய்பவரின் செயல்களைப் படம் பிடித்துக் காட்டியது அருமை. தேங்காய் வாங்குவதிலும் விலையைக் குறைத்ததோடு, ஒரு தேங்காயை லவட்டிக்கொண்டு ஆனந்தப்பட்டதும் ஏனோ மனதைப் பிசையும்படி அமைக்கப்பட்டுள்ளது. “To top it all off”  என்று ஆங்கிலத்தில் ஒரு சொலவடைபோல் முதலிலேயே (15 ஆண்டுகளுக்கு முன்பே) இந்தப் பிரார்த்தனைக்கான தேங்காயை வாங்கி, நிறைவேறியிருந்தால் 12 ரூபாயில் அடங்கிவிட்டிருக்குமே என்று கதாநாயகன் எண்ணிய விதம் அவரது அற்பமான மனநிலையை வெளிக்காடுவதாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் “போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே! அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து இந்த பூமியைக் கெடுத்தானே ” என்ற பாடல் வரிகளும், “மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது” என்ற பாடல்வரிகளை நினைவூட்ட சிந்தனை விரிந்ததுவோ என எண்ணத் தோன்றுகிறது.

ஒரு வழியாக, கிழவியை ஏமாற்றிய வெற்றிக்களிப்போடு வீறு நடை போட்டு, எல்லாப் பிள்ளையார்களுக்கும் விக்னமின்றி சூரைக்காய் விட்டபின் மகிழ்வுடன் இல்லத்திற்குச் சென்று நிம்மதிப் பெருமூச்சும், பூரிப்புமாய் நிற்கும்போது, உணவு பரிமாறத் தயாராய் இருந்த மனைவி, திருடிய தேங்காயை ( அது திருடியது என அறியாமல்) அவரிடமிருந்து வாங்கி, இலேசாகப் பிளந்து, இளநீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து அவரிடம் அருந்தக் கொடுத்துவிட்டு, தேங்காயை உடைத்தவுடன் அது அழுகியிருப்பதைக் கண்டு, பார்த்து வாங்கியிருக்கக் கூடாதா? மற்ற தேங்காய்கள் எல்லாம் நன்றாக இருந்ததா? என வினா எழுப்பிய வினாடியில் தன் வாயில் ஊற்றிய இளநீரை வாஷ்பேசினுக்கு ஓடிச்சென்று துப்பியதும், உடைத்த தேங்காய் மூடியை உற்று நோக்கும்போது அதில் அந்த கிழவியின் முகம் தெரிவதாகக் காட்டியதும் மிகவும் பிரமாதம் என எண்ண வைக்கிறது.
“தன்நெஞ்சறிவது பொய்யற்க, பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்” என்ற வள்ளுவரின் வாக்கு எத்தனை உண்மை! “தவறு என்பது தவறிச் செய்வது. தப்பு என்பது தெரிந்து செய்வது. தப்பு செய்தவன் வருந்தியாகணும்” என்ற வரிகள் நம் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே யிருக்கிறது.

தான் பிரார்த்தனை நிறைவேற்றிய அத்தனை பிள்ளையார்களும் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியது போல் கதையை அமைத்ததும், “நமக்கும் மேலே ஒருவனடா ! அவன் நாலும் தெரிந்த இறைவனடா” என்ற பாடல் வரிகளை நினைவூட்டுகிறது.

“வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்பது முதுமொழி. நாம் செய்யும் செயல்கள் அனைத்திற்கும் அறிவியல் வழிநின்று பார்த்தால் “ஒவ்வொரு விசைக்கும் அதற்குச் சமமான எதிர் விசை ஒன்று உண்டு” என்பது உண்மை எனப் புலப்படும். எனவே “பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற செய்யாமை செய்யாமை நன்று” என்று வள்ளுவம் விளித்த பொயா மொழிகள் எத்தனை உண்மை!.

இத்தனை சிறிய கதையில் இரண்டு மூன்று கதாபாத்திர படைப்புக்குள்ளேயே இன்றைய சூழல், மனிதர்களின் மனப்பாங்கு, சூழ்நிலைகளில் அவர்களின் மனக்கணக்குகள் அத்தனையும் அடிக்கோடிட்டுக் காட்டி, தீய எண்ணங்களைக் களைந்தெறிய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி, அவ்வாறு செய்யின், ஒவ்வொருவரும் பேருவகையை அடையலாம் என்பதை அருமையாக உணர்த்தியுள்ளார். ஆசிரியரின் அவா இனியாவது விளையட்டும்.

இனியொரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம் என்ற வகையில் நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்போம். ஏழை எளிய வியாபாரிகளுக்கு இயன்றவரை வியாபாரத்தில் ஒத்துழைப்பு நல்கி அவர்களின் மேம்பாட்டிற்கு உறுதுணையாய் நிற்போம். ஆசிரியரின் எளிமையான, வலிமையான கதைக்கு எளியவளின் விமர்சனத்தை ஏற்றிடுவீர்!  நன்றி! 

-இரா. எழிலி


சிறுகதை விமர்சனப் போட்டியில் முதற்பரிசு! -காரஞ்சன்(சேஷ்)

மதிப்பிற்குரிய திரு  வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதைப் போட்டியில் "ஏமாற்றாதே! ஏமாறாதே" சிறுகதையின் விமர்சனத்திற்கு  எனக்கும் என் மனவிக்கும் முதற் பரிசு கிடைத்துள்ளது. 
 
 

"ஏமாற்றாதே! ஏமாறாதே" கதைக்கான இணைப்பு இதோ:


பரிசுபெற்றதற்கான அறிவிப்புக்கு இணைப்பு இதோ:

http://gopu1949.blogspot.in/2014/06/vgk-18-01-03-first-prize-winners.html

வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும், தெரிவு செய்த நடுவர் ஐயாவிற்கும் என் மனமார்ந்த நன்றி!


கதையின் தலைப்பே யாரோ ஒருவர், யாரையோ ஏமாற்றியதால் ஏமாந்து போனாரோ? என்ற கேள்வியை நம்முள் எழுப்பி, வாசிக்க ஈர்க்கிறது.


என்னுடைய விமர்சனம்!

கதாசிரியர், தான் வலியுறுத்த எண்ணிய கருத்தை, நீதியை எளிய கதாபாத்திரங்களின் துணையோடு, மிகவும் வலிமையாகவும், உறுதியாகவும் வாசகர் அனைவரின் உள்ளத்திலும் “பசுமரத்து ஆணியாய்”ப் பதிய வைப்பதில் வெற்றி கண்டு விடுகிறார்.

இந்தக் கதையை, படக்கதையாக்கி, தொடக்கக் கல்வி மாணாக்கர்களுக்குப் பாடமாக வைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என எண்ணத் தோன்றுகிறது.


பிஞ்சுக் குழந்தைகளின் கையில் கிடைக்கக் கூடாத பொருட்களை அவர்கள் எடுக்க முற்படும்போது,  பெற்றோர்கள் அதை மறைத்து வைத்துவிட்டு, “எங்கே காணோம், காக்கா தூக்கிக் கொண்டு சென்றுவிட்டது” என  உரைப்பதில் ஆரம்பித்து விடுகிறது ஏமாற்றுதல்.

 
நாம் சிறுவர்களாக இருந்த நாட்களில் காக்காய் நரியிடம் வடை இழந்த கதையிலும், பாட்டி சுட்ட வடையை காக்காய் தூக்கிச் செல்வதும், நரி காக்காயை ஏமாற்றி வடையை எடுத்துக் கொள்வதாகவும் படித்துள்ளோம். ஏமாற்றுவது எப்படி என்பதும் சிறுவயதில் நம்மையறியாமலேயே நம்முள் விதைக்கப்பட்டதோ? எனும் எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது.

 
“உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வே மெனல் “ –இது வள்ளுவர் வாக்கு.


திருட்டு என்பது பிறருடைய பொருளை அவருக்குத் தெரியாமல் மற்றொருவர் எடுத்துக் கொள்வது ஆகும். ஊழல், பிறர் சொத்தை அபகரித்தல், ஏமாற்றுதல், வஞ்சகம், திருட்டு இவையெல்லாம் தீய செயல்கள். இவற்றை நாம் பின்பற்றக் கூடாது.

இதையே வள்ளுவர்

“தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்..” என்று எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார்.

இந்த உண்மைகளை, நீதியை, நம் உள்ளங்களில் பதிய வைக்க எழுதிய படைப்பு இது!

இன்றைய உலகில்   பலராலும் பலர் ஏமாற்றப்படுவது தொடர் கதையாகி விடுகிறது.   மக்கள் விழிப்புணர்வு பெறாத வரை ஏமாற்று வேலைகளும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும் என்பதையும் எடுத்துரைக்கத்  தவறவில்லை.


பாத்திரப் படைப்பில் வெற்றி!

1.தேங்காய் விற்கும் கிழவி.

எளியவளாக, உழைத்துப் பிழைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு, தள்ளாத வயதிலும், தளரா மனத்துடன் இயன்ற அளவு உழைத்து உண்பவராக, காலையில், சாலையோரத்தில் கடை விரிக்கும் பாட்டி நம் கண்முன் விரிகிறாள்.. தேங்காய் வியாபாரம் செய்யும் கிழவியின் வயோதிகத் தோற்றம், நீண்ட நாட்களாக அவள் உழைத்துப் பிழைப்பவள் என உணர்த்தும்  வகையில் 150 காய்களைச் சுமந்தவளால் தற்போது 50 காய்களை மட்டுமே சுமக்க முடிவதாகக் கூறியதிலிருந்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பாராட்டத் தக்கது.  சைஸ் வாரியாகத் தேங்காய்களை அடுக்கி அதற்கேற்றாற்போல் விற்பனை செய்யும் விலையை நிர்ணயிப்பது வரை அழகான படத்துடன், அருமையாக அருகிலிருந்து பார்த்தது போல் விளக்குகிறார்.


மேலும் அவள் மீது அனுதாபத்தைத் தூண்டும் விதமாக, அவள் வியாபாரத்தில் மனக்கணக்குப் போட முடியாமல் தடுமாறுவதும், பார்வைக் குறைபாட்டால் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நாணயங்களுக்கிடையில் வேறுபாட்டை அறிய முடியாமல் தவிப்பதாகவும் கண்பித்தது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கருத்து.

ஒரு தேங்காயை விற்றால் அவளுக்குக் கிடைப்பது மிகவும் சொற்பமான இலாபமே. அதுவும் பேரம் பேசுபவர்களின் திறமையைப் பொறுத்து மாறுபடும். இதில் தவறாகக் கணக்கு போட்டுவிட்டாலோ அல்லது தவறாகச் சில்லரை கொடுக்க நேர்ந்தாலோ பாட்டிக்கு மிகவும் நஷ்டம்தானே?

 
இந்த இரண்டு ரூபாய் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்ட சமயம், சென்னையில் நடைபாதைக் கடையில் பூவியாபாரம் செய்யும் மூதாட்டி ஒருவர் ஒரு வார இதழுக்கு அளித்திருந்த பேட்டி நினைவுக்கு வருகிறது. இரண்டு நாணயங்களுக்கும் வித்தியாசம் அறியாமல் அவசரத்தில் கொடுத்துவிடுவதால் நஷ்டமடைய நேர்வதாக அந்த மூதாட்டி சாடியிருந்தார். இன்னும் ஒருபடி மேலே போய் சிலர் அழுக்கு நோட்டுகள், செல்லாத நோட்டுகள், கிழிந்து ஒட்டப்பட்ட நோட்டுகளாகப் பார்த்து, இது போன்றவரிடம் ஏமாற்றித் தள்ளிவிட்டு ஏதோ உலக சாதனை ஒன்றைச் செய்து முடித்தது போல் எண்ணி அல்ப சந்தோஷம் அடைவார்கள்.

கிழவி வாங்கி வரும் காய்கள் அனைத்துமே நல்ல காய்களாக இருந்துவிட்டால் நன்று. இல்லாவிட்டால் அதன் மூலம் அவளுக்குச் சற்று நஷ்டம் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு.

இப்படி ஒரு கிழவியைக் கண்முன் நிறுத்தி, அவர்படும் துயரம்தனை விளக்கி, அந்நிலையிலும் உழைத்துப் பிழைப்பதில் உறுதியானவர் என்பதை வலியுறுத்தி அந்தப் பாத்திரத்திற்கு அனைவரின் நெஞ்சிலும் ஓர் உயர்வான எண்ணத்தையும், அனுதாபத்தையும் உண்டாக்குவதில் வெற்றி பெற்று விடுகிறார்.  

 
அடுத்த பாத்திரமாக

தேங்காய் வாங்க வரும் நம் கதையின் நாயகன், 15 வருடங்களுக்கு முன் வேண்டிக்கொண்ட, தன் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டி, தேங்காய்க் கடை விரித்துள்ள கிழவியிடம் வருவதும், தட்டிப் பார்த்து, நல்ல காய்களாகப் பார்த்து 12 காய்களாகத் தேர்ந்தெடுத்து, அல்பத்தனமாக ஒன்றைக் கிழவி அறியாமல் சுட்டுக்கொண்டு, அடிமாட்டு விலைக்குப் பேரம் பேசி, 78 ரூபாயைக் கொடுத்துச் செல்வதில் நம் அனைவரின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்கிறார்.

குமரகுருபரரின் நீதிநெறிவிளக்கத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல்,

 ““தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடமை அம்மா பெரிதென்று” இவர் அகமகிழ்ந்து, கிழவியிடம் அடிமாட்டு விலைக்கு பேரம் பேசாமல், பொருளுக்கேற்ற உரிய விலையைக் கொடுத்து வாங்கி அவரின் உழைப்புக்கு மதிப்பளித்திருக்க வேண்டாமா?

எல்லாவற்றிற்கும் மேலாக 15 ஆண்டுகளுக்கு முன்னர் வேண்டிக்கொண்ட பிரார்த்தனையை அப்போதே நிறைவேற்றியிருந்தால் எவ்வளவு மிச்சமாகி இருக்கும்? இப்போது இவ்வளவு செலவு செய்ய நேர்ந்ததே (அதுவும் சுட்டுக் கொண்ட காயின் மதிப்பைக் கழித்து) என கணக்குப் பார்ப்பதில் அவரது அற்பமான மனநிலை வெளிப்படுத்தப் படுகிறது.

 
உண்மையான, தூய்மையான பக்தியுடன், ஒரு சிறிய பூவை அர்ப்பணித்தாலும் இறைவன் அதை அகமகிழ்ந்து ஏற்கும் இயல்புடையவன் அல்லவா?. இதுபோன்று பிறரை ஏமாற்றும் எண்ணத்துடன் செயல்படுபவர்கள், நிறைவேற்றும் பிரார்த்தனை எப்படி உகந்ததாக அமையும் என்ற கருத்தை நம் அனைவருள்ளும் பதிய வைப்பதிலும், கதாநாயகன் மீது எரிச்சலையும், வெறுப்பையும் ஏற்படுத்துவதிலும் கதாசிரியர் அடுத்த வெற்றியை அடைந்துவிடுகிறார்.

 
சமுதாயத்தில் இதுபோன்ற எண்ணம் கொண்டவர்களைச் சாடும் விதமாக இவர் எடுத்துவைக்கும் கருத்துகள் அத்தனையும் நன்முத்துக்கள்.

 
இதுபோன்ற டிப்டாப் ஆசாமிகள்

  Ø மலிவான விலையில் தரமான பொருளை நேர்மையாக விற்கும் இது போன்ற ஏழை வியாபாரிகளிடம்தான் இவர்களின் பாச்சா பலிக்கும். அதுமட்டுமின்றி அல்பத்தனமாக, ஏதாவது ஒன்றைக் கடத்தி வந்து விடுவார்கள்.

   Ø பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளிலும், கடைகளிலும் நாம் வாங்கும் காய்கறிகளையோ, பழங்களையோ பொன்போல் நிறுத்து, ஒவ்வொரு கிராமுக்கும் உரிய விலையுடன், விற்பனைவரி, சேவை வரி முதலியவற்றைச் சேர்த்து வாங்கும் இடங்களில் தப்பித்தவறி பேரம் பேச நினைத்தாலும் பட்டிக்காட்டான் என்ற பரிகாசத்திற்கு ஆளாக நேருமே என்ற எண்ணத்தால், பயத்தால் வாய்மூடி மெளனியாக இருந்துவிடுகிறார்கள்.

  Ø “கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்” என்றுணர்ந்த காலத்தில், கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்ட இடங்களிலும் இவர்கள் செய்கை எடுபடாமல் போய்விடுகின்றது.


மேற்கண்ட நிகழ்வுகளைச் சாடி, அதற்கான தீர்வைத் தருவதிலும் தனித்து நிற்கிறார் கதாசிரியர்.

ü பார்க்க மனதிற்கு நிறைவாகவும், காய்கறிகள் பச்சைப்பசேல் என்று ஃப்ரெஷ் ஆகவும் இருந்து, சரியான எடையும் போட்டுக் கொடுக்கும் வியாபாரிகளிடம், அவர்கள் சொல்லும் விலை ஓரளவு நியாயமாக இருப்பின், அநாவஸ்யமாக பேரம் பேசுவதில் அர்த்தமே இல்லை. 

ü அப்படிப்பட்ட வியாபாரிகள் கூட இப்போதெல்லாம் தங்களுக்குள் சங்கம் அமைத்துக்கொண்டு ’ஒரே விலை - கறார் விலை’ என்று சொல்லி மிகவும் உஷாராகி வருகின்றார்கள்.  (இதில் ஆசிரியரின் மகிழ்ச்சி வெளிப்படுகிறது)

ü ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் முன்னபின்ன சொன்னால் தான் என்ன; நாமும் கொடுத்தால் தான் என்ன; குறைஞ்சாப்போய் விடுவோம்? பிறர் வயிற்றில் அடிக்காமல் நியாயமான விலை கொடுத்து வாங்கி வந்தால் அதன் ருசியே தனியாக இருக்குமே! பேரம் பேசி விலையைக் குறைக்காமல், அவர் கேட்ட பணத்தை அப்படியே கொடுத்த நமக்கு காய்கறிகளை, மனதார வாழ்த்தியல்லவா கொடுத்திருப்பார் .... அந்த வியாபாரியும். 

டிப்டாப் ஆசாமிகளுக்கு ஒரு சாட்டையடி கொடுத்து அறிவுரைகளையும் வழங்கிய கதாசிரியருக்கு ஒரு “ஓஹோ” போடலாம்.


 
 தன் தவறை உணர்ந்து வருந்தும் நாயகன்!

சதிர் தேங்காய் பொறுக்கும் சிறுவர்களுடன் சென்று 12 காய்களையும் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றிவிட்டு , திருடிக்கொண்டு வந்த 13வது காயுடன் வீடு திரும்பிய கணவனுக்கு, அவர் மனைவி அந்தத் தேங்காயை நன்றாக அலம்பி விட்டு, நாரையும் உரித்து விட்டு, அரிவாளால் லேஸாக ஒரு போடு போட்டு, தேங்காயின் இளநீரை கீழே சிந்தாமல் சிதறாமல் ஒரு சிறிய பாத்திரத்தில் பொறுமையாகப் பிடித்து, வெயிலில் அலைந்து திரிந்து விட்டு வந்துள்ளாரே எனக் குடிக்கக் கொடுத்து விட்டு, சமையல் அறைக்கு வந்து தேங்காயை அரிவாளால் மீண்டும் ஒரு போடு ஓங்கிப் போட்டு உடைக்கையில் ”என்னங்க இது; இந்தத்தேங்காய் அழுகலாக உள்ளதே! பார்த்து வாங்கியிருக்கக்கூடாது! ஸ்வாமிக்கு உடைத்ததெல்லாமாவது நன்றாக இருந்ததா?” என்று கேட்டவாறே அந்த அழுகின தேங்காயைத் தன் கணவனிடம் காண்பிக்கிறாள்.

மனைவி உரைத்தது உறைத்ததோ நாயகனுக்கு?

நம் கதாநாயகன் “மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாத நிலையடைந்து வாயிலிருந்த இளநீரை வாஷ்பேஸினில் துப்பிவிட்டு, சாமிக்கு உடைத்த காய்கள் அனைத்தும் நன்றாக இருந்தன என்று கூறி திருடனுக்குத் தேள் கொட்டிய நிலையை அடைகிறார். அழுகிய தேங்காய் மூடியில் அந்தக் கிழவியின் முகம் தெரிவதாகச் சித்தரித்தது மிக அருமை. தன்நெஞ்சே தன்னைச் சுட்டிருக்கும் அல்லவா. ஏளனமாகச் சிரித்தது அனைத்துப் பிள்ளையார்கள் மட்டும் அல்ல. நாமும் தான்.

இப்படி முடித்ததில் ஆசிரியர் தன் படைப்புத் திறனை  மீண்டும் நிலைநாட்டுகிறார்.

 இப்படி முடித்திருந்தால்…(என் தாழ்வான கருத்து)

அழுகிய தேங்காயில் அந்தக் கிழவி முகம் தெரிந்ததும், நம் கதாநாயகன் அந்தக் கிழவியிடம் அன்றோ அல்லது மறுநாளோ சென்று தான் செய்த களவுக்குப் பரிகாரமாக, “பாட்டி நேற்று என் வேண்டுதலை நிறைவேற்ற வாங்கிச் சென்ற 12 காய்களும் அருமை. சற்று விலைகுறைத்து வாங்கி விட்டேன் . அதற்காக வருந்துகிறேன் என்று கூறிவிட்டு, ஒரு 10 ரூபாயாவது வைத்துக்கொள்ளுமாறு அளித்திருந்தால் கதாநாயகருக்கு மன ஆறுதல் கிடைத்திருக்கும். நமக்கும் அவர்மீது எரிச்சல் சற்றுக் குறைந்திருக்கும்.

அல்லது

ஒருவேளை அந்தக்கிழவி அதை ஏற்க மறுத்து, தேடி வந்து பாராட்டியதற்கு நன்றி கூறி ஆசீர்வதிப்பதாக அமைத்திருந்தால், நம் அனைவரின் உள்ளத்திலும், இன்னும் உயர்வான நிலையில் நீங்கா இடம்பிடித்த பாத்திரமாக மாறியிருப்பார் என்பது என் தாழ்வான கருத்து.

மொத்தத்தில், கதைக்கான கரு, அதற்கேற்ற பாத்திரப் படைப்புகள், கோர்வையான நடை, இடையிடையே தவறான செயல்களுக்குத் தீர்வுகள் என அனைத்தும் நிறைந்த தரமான ஒரு சிறுகதையைப் படைத்த ஆசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். நன்றி!
-காரஞ்சன்(சேஷ்)