ஞாயிறு, 25 மார்ச், 2012

நிலா!- காரஞ்சன்(சேஷ்)

                                                                   நிலா!

பெற்றவளைச் சுற்றி
பிள்ளை வருவதுபோல்
கற்காலம் தொட்டு
கணிணிக்காலம் வரை
நிற்காமல் நீள்புவியை
நீ சுற்றி வருகின்றாய்!

சுழலும் இப்புவியைச்
சுற்றிவரும் வெண்ணிலவே!
என்னுடைய முன்னோரை
என்றோ பார்த்தவள் நீ!
அன்றுமுதல் இன்றுவரை
அனைத்தும் அறிந்தவள் நீ!
உன்னிடம் சிலகேள்வி
உண்மை உரைத்திடுவாய்!

பண்டைநாளில்..
படைகொண்டு மன்னர்கள்
சண்டையிட்டு மாண்டகதை
சரித்திரம் பறைசாற்றும்!

இந்நாளில்..

ஆறடி மனிதருக்குள்
அரையடிக்கு தினம் சண்டை!
விண்வெளியில் உன்னுடனே
எண்ணிலா விண்மீன்கள்
சண்டையிலா நிலை
சாத்தியமானதென்ன!

காரிருளைக் களைந்து
பேரொளி தருபவளே!
பாரில் மாந்தரின் மன இருளைப்
போக்கிட ஏன் மறந்தாய்?

கிண்ணம் நிறைய
உண்ணச் சோறிருந்தும்
தின்ன அடம்பிடிக்கும்
சின்னக் குழந்தைக்கு
அன்னையர் உன்னை
அழைக்கிறார் அமுதூட்ட!

ஓட்டை விழுந்த
ஒவ்வொரு குடிசையிலும்
அழையாமலே புகும் நீ
ஆறாத பசியால்
அங்கு அழும் குழந்தைக்கும்
கொஞ்சம் கொண்டுவந்து
கொடுக்க ஏன் மறந்தாய்?

சங்கப் பாடல்களில்
அங்கம் வகிப்பவளே!

பாடும் கவிஞர் உனைப்
பலவாறாய் அழைக்கின்றார்!

காட்சி பல அமைத்து
சாட்சி நீ என்கின்றார்!

பிரிவால் தவிப்பவர்கள்
ஏன் நிலவே? என்கின்றார்!
திருமணத் தம்பதியர்
தேன்நிலவே என்கின்றார்!
எல்லோர் கேள்விக்கும்
என்னபதில் சொல்கின்றாய்?

சேர்த்த செல்வத்தை சேமித்து வைக்காமல்
வாரியிரைத்து வள்ளலாக நினைத்தாயோ?
தழலை விழுங்கி தண்ணொளியாய்த் தருபவளே!
ஒருசில நாட்கள் ஓடி ஏன் மறைகின்றாய்?

ஓடும் நதியில், உவர் கடலில்
உன்முகத்தைப் பார்ப்பவளே!
மாறாது நீயிருக்க -புவி
மாற்றம் கண்டது ஏன்?
ஆர்ப்பரிக்கும் கடல்
ஆவேசம் கொள்வதும் ஏன்?

வாழ வழியிருந்தால்
வந்துவிடும் மாந்தரினம்
நிலவிவரும் சூழல்
நிம்மதியும் கெடுமெனவே
நீரையும் காற்றையும் நீ
நிரந்தரமாய்த் துறந்தாயோ?


                                                     -காரஞ்சன்(சேஷ்)
படம்:கூகிளுக்கு நன்றி!

19 கருத்துகள்:

  1. நல்ல கவிதை...

    இப்போதும் அமுதூட்ட நிலவைத் துணைக்கு அழைக்கிறார்களா என்ன....

    நிறைய பேர் மாறிவிட்டனர்.... :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே!
      ஏதோ அந்த நாள் நினைவுகள்!
      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி நண்பரே!
      -காரன்சன்(சேஷ்)

      நீக்கு
  2. //ஓட்டை விழுந்த
    ஒவ்வொரு குடிசையிலும்
    அழையாமலே புகும் நீ
    ஆறாத பசியால்
    அங்கு அழும் குழந்தைக்கும்
    கொஞ்சம் கொண்டுவந்து
    கொடுக்க ஏன் மறந்தாய்?
    //

    அருமையான சிந்தனையுடன் கூடிய அழகிய வரிகள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாரட்டுக்களுக்கும் நன்றி ஐயா!

      -காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி!
      -காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  4. கொஞ்சம் பெரிய கவிதையாக இருந்தாலும் வரிகள் நெஞ்சுக்கும் பதியும் படி அழகாய் உள்ளது ... என் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!
      -காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  5. வாழ வழியிருந்தால்
    வந்துவிடும் மாந்தரினம்
    நிலவிவரும் சூழல்
    நிம்மதியும் கெடுமெனவே
    நீரையும் காற்றையும் நீ
    நிரந்தரமாய்த் துறந்தாயோ?//
    மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டிய வரிகள் அருமை .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!
      -காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  6. "fantastic poem!"

    Shanmugasundaram

    பதிலளிநீக்கு
  7. your have once again proved that you have extrodinary talent in the field of poetic world tooooooooo god bless you more

    anthuvan cuddalore

    பதிலளிநீக்கு
  8. good flow. so serious. hats off.ramanans

    பதிலளிநீக்கு
  9. ஓட்டை விழுந்த
    ஒவ்வொரு குடிசையிலும்
    அழையாமலே புகும் நீ
    ஆறாத பசியால்
    அங்கு அழும் குழந்தைக்கும்
    கொஞ்சம் கொண்டுவந்து
    கொடுக்க ஏன் மறந்தாய்?
    அருமை! ரசித்தேன்!

    பதிலளிநீக்கு