வெள்ளி, 18 அக்டோபர், 2013

களை- காரஞ்சன்(சேஷ்)





களை!

கரிபடிந்த 
அடுக்களைச்சுவர்
கணக்குப்போட  
கரும்பலகையாய்!

வெள்ளையடித்த 
உட்சுவர்
கிறுக்கி விளையாடும்
குழந்தைகட்கு
வெள்ளைக் காகிதமாய்...

வண்ணக் கிறுக்கல்கள்
வாசல் சுவரெங்கும்!
வாத்தியாரான
வாண்டுகளின்
விளையாட்டால்!

உயரத்தை ஒப்பிட
அப்பா அம்மாவுடன்
ஒட்டி நின்று
வரைந்த கோடுகள்!

இவையாவும்
உயிரோவியங்களாய்
ஓட்டு வீட்டுச் சுவர்களில்!

வண்ணச்சுவர்களில்
வாங்கி வந்த ஓவியங்கள்
தொங்கவிடப்பட்டும்
கிறுக்கல்கள் ஏதுமின்றி
"களை" குறைந்தே 
காண்கிறது
க(ஒ)ட்டிய புதுவீடு!

                       -காரஞ்சன்(சேஷ்)


32 கருத்துகள்:

  1. //வண்ணச்சுவர்களில் வாங்கி வந்த ஓவியங்கள் தொங்கவிடப்பட்டும்
    கிறுக்கல்கள் ஏதுமின்றி "களை" குறைந்தே காண்கிறது க(ஒ)ட்டிய புதுவீடு!//

    அருமை. மிகவும் அருமை. சிறு குழந்தைகளின் கிறுக்கல்களைவிட மிகச்சிறந்த ஓவியங்களே ஏதும் இல்லை என்பேன் நான்.

    என் பேரன் ’சிவா’ அவனுக்கு 4 வயதாக இருக்கும் போது, என் புத்தம் புதிய இல்லத்தின் மிக அழகான ஓர் சுவற்றில், அருமையாக ஓர் ஆண், பெண், மலைகள், குளம், வாத்து போன்ற படங்கள் வரைந்து வர்ணமும் கொடுத்து இருந்தான்.

    வீட்டில் உள்ள அனைவரும் அவனைத்திட்டிக்கொண்டிருந்தனர்.

    நான் மட்டும் ஆபீஸிலிருந்து வந்து பார்த்துவிட்டு, அசந்து போய் அவனைப் பாராட்டிக்கொஞ்சி மகிழ்ந்தேன். பிறகு பல வருஷங்கள் கழித்து, அதன்மேல் பெயிண்ட் அடிக்கவே எனக்கு என்னவோ இஷ்டமில்லை.

    அந்தப்படங்களை பத்திரமாக போட்டோ பிடித்துக்கொண்ட பிறகு, பெயிண்ட் அடிக்க சம்மதித்தேன்.

    அருமையான கவிதைக்கு என் பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. தங்களின் உடனடி வரவுக்கும் பாராட்டிற்கும் என் உளமார்ந்த நன்றி! சிறு வயதில் அனைவரம் செய்யக்கூடிய செயல் இது! கற்பனைத்திறனை கட்டுப்பாடின்றி வெளிப்படுத்தும் மழலைகள்! கலர் பென்சில், பென்சில், வண்ண சாக்பீஸ் போன்றவை கிடைத்தால் போதும்! அவர்கள் உலகம் தனி! எல்லோருக்கும் இப்படி ஓர் அனுபவம் இருக்கும் என எண்ணுகிறேன்! தங்களின் கருத்துரைக்கு மீண்டும் என் உளமார்ந்த நன்றி!

    பதிலளிநீக்கு
  3. சிறுவயது நினைவலைகளை மீட்டெடுத்த கவிதை! மிகவும் இரசித்தேன்! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  4. அவர்களின் கிறுக்கல்களை ரசிக்க வேண்டும்... அந்த சந்தோசமே தனி... ரசித்துப் படித்தேன்... வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  5. "களை"யும் வரப்பின் அழ்கே!!!

    பதிலளிநீக்கு
  6. களையப்படவேண்டிய களை அல்ல இது! களிப்படையச் செய்த களை! வளர வேண்டிய கலை! அருமை! தொடர்க! பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  7. தங்களின் கருத்துரை கண்டு மகிழ்ந்தேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  8. உயிரோவியங்களாய் களிப்படையச் செய்த
    மழலையின் கைவண்ணம் ரசிக்கவைத்தது..!

    பதிலளிநீக்கு
  9. தங்களின் கருத்துரை கண்டு மகிழ்ந்தேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  10. அற்புதமான கவிதை
    சில கிறுக்கல்கள் மாபெரும்
    காவியமாகி மகிழ்வூட்டுவது நிதர்சனம்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. குழந்தைகளின் கற்பனாத்திறனை வளர்ப்பவை இந்த சுவர்க்கிறுக்கல்கள்தாம். சொந்த வீடென்றால் காலமெல்லாம் ரசித்துக்கொண்டிருக்கலாம். வாடகை வீடுகளில் குடியிருப்போருக்குதான் அவதி. எவ்வளவுதான் விலையுயர்ந்த ஓவியங்கள் கொண்டு வீட்டை அழகு செய்தாலும் மழலையின் கிறுக்கலுக்கு இருக்கும் மகத்துவம் அதற்கேது? மிக அழகாக சொல்லிவிட்டீர்கள். பாராட்டுகள்.

    மழலைகளின் சுவர்க்கிறுக்கல் பற்றிய கவிதையொன்றை நானும் முன்பு எழுதியிருந்தேன். விரைவில் பதிவிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  12. தங்களின் கவிதையைப் படிக்க ஆவலாக உள்ளேன்! தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி!

    பதிலளிநீக்கு
  13. குழலும் யாழும் இனிமையில்லை தம் மக்கள் மழலைச்சொல்முன் என்றார் வள்ளுவர். மழலையின் கிறுக்கல்கள் மனம் கவர்ந்த ஓவியங்கள் என உரைத்தது அருமை! -தக்க்ஷி

    பதிலளிநீக்கு
  14. தங்களின் கருத்துரை கண்டு மகிழ்ந்தேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  15. சிறுவயதில் சுவரில் கிறுக்கி விளையாடிய ஞாபகங்கள் வருகிறது! அருமையான படைப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
  16. தங்களின் கருத்துரை கண்டு மகிழ்ந்தேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  17. "நமது மழலைச்செல்வங்களின் கிறுக்கல்கள் நமக்கு ஓவியங்கள்,வரலாற்று சின்னங்கள்!!!அது கலையோ!!!களையோ!!!நன்றி நண்பரே தூள்!!!"
    -Muthu Narayanan

    பதிலளிநீக்கு
  18. தங்களின் கருத்துரை கண்டு மகிழ்ந்தேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  19. வண்ணச்சுவர்களில்
    வாங்கி வந்த ஓவியங்கள்
    தொங்கவிடப்பட்டும்
    கிறுக்கல்கள் ஏதுமின்றி
    "களை" குறைந்தே
    காண்கிறது
    க(ஒ)ட்டிய புதுவீடு!//
    கவிதை முழுவதுமே மிக அருமை.
    குழந்தை விளையாட்டை அப்படியே கண்
    முன் கொண்டு வந்த கவிதை.
    சிறு குழந்தைகளின் கிறுக்கல்கள் இல்லாத வீடு களை இல்லை தான்.
    மிக பொருத்தமான படம்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  20. தங்களின் கருத்துரை கண்டு மகிழ்ந்தேன்! நன்றி! தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  21. பெரும்பாலான வீடுகளில் இந்த ஓவியங்களைக் கண்டு ரசித்ததுண்டு. அடுத்த முறை பெயிண்ட் செய்யும்போது கிறுக்காதே எனக் கெஞ்சும் பெற்றோர்களையும் கண்டதுண்டு! :)

    நல்ல கவிதை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  22. தங்களின் கருத்துரை கண்டு மகிழ்ந்தேன்! நன்றி! தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  23. ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்;
    மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

    பதிலளிநீக்கு
  24. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! லிங்க் அனுப்ப வேண்டுகிறேன்!

    பதிலளிநீக்கு