வியாழன், 14 ஏப்ரல், 2016

அறுபதில் பாதியாய் அமைந்த துன்முகியே!-காரஞ்சன்(சேஷ்)



நீர்வளம் பெருகி ஏர்நிலை உயர்ந்திட
உறுதுயர் களைய உள்ளங்கள் உருகிட
ஊர்கள் அனைத்தும் உயர்நிலை அடைந்திட
வருவாய் பெருகி வறுமை அகன்றிட
ஊறிடும் பாசத்தால் உறவுகள் பெருகிட
பேரொடு புகழும் பெருவாழ்வும் பெற்றிட
அறுபதில் பாதியாய் அமைந்த துன்முகியே
பேரருள் வழங்கி பெருமைகள் சேர்த்திடுவாய்!
அனைவருக்கும் இனிய துன்முகி ஆண்டு சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!
-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

வியாழன், 14 ஜனவரி, 2016

பொங்கல் வாழ்த்து!-காரஞ்சன்(சேஷ்)





பொங்கலோ பொங்கல்!

 
 
செங்கரும்பின் சுவையுடனே
பொங்கட்டும் புதுப்பொங்கல்!
மங்கலங்கள் பலபெருகி
மக்களெலாம் மகிழ்வுறுக!

தலையாய உழவெங்கும்
தழைக்கட்டும் தரணியிலே!
மாசிலாச் சுழல்
மலரட்டும் புவியெங்கும்!

எல்லோர்க்கும் மகிழ்வளிக்கும்
இயற்கைவளம் காப்போம்!
பொங்கல் திருநாளில்
பொங்கட்டும் மகிழ்வெங்கும்!

பொங்கலோ பொங்கலென
மங்கலக் குரலெழுப்பி
மகிழ்ந்திடுவோம் இந்நாளில்!
பொங்கலோ பொங்கல்!

--காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!