திங்கள், 31 ஆகஸ்ட், 2020

யானை!

 


யானை!

ஆனை!ஆனை!அழகர் ஆனையென 

மழலைப் பருவத்தில் மனதில் பதிந்தாய்நீ!

அப்பாவும் தாத்தாவும்  ஆனையென தாம்மாறி  

அம்பாரி விளையாட எனைஅமர்த்திடுவார் தம்முதுகில்!


காட்டு விலங்காம் களிறினைக் காணும்

வேட்கை என்னுள் விளைந்தது அன்று!

விழைவை அறிந்ததோ  வேழம் ஒன்று?

கழுத்துமணி யொலிக்க கைம்மா(ன்) வந்தது!

 

தூணெனக் கால்களும், தூக்கியத் துதிக்கையும்

சேம்பின் இலைபோல் செவிகள் அசைய

பெருத்த உருவம் பெற்ற அக்கரிமுகம்

பாகனின் சொல்லுக்கு பணிந்து நடந்தது!


அரிசியொடு வெல்லம் அளித்தனர் பெற்றோர்!

வாரி உண்டு வாழ்த்தியது என்னை!

ஏற்றி அமர்த்தினர் என்னை அதன்மேல்

கதறிநான் பயந்தது காலமெலாம் நினைவில்!

 

இலக்கியங்கள் பலவற்றில் இடமுண்டு யானைக்கும்

சிலவற்றை  மட்டுமிங்கே செப்பிட விழைகின்றேன்!

காற்றில் அலையும் கார்முகில்  கூட்டத்தைக்

களிறுகளின் விளையாட்டாய்க் கண்டனன் காளிதாசன்!

 

 முழக்கம் எழுப்பும்  முகில்களின் மோதலை

வேழங்களின்  போரெனவே விளம்பினான் வால்மீகி!

நிலவின் பிறையென நீண்ட மருப்பால்

புலியையும் வீழ்த்திடும் பலமிகு வேழமும்!

 

உருவில் பெருத்தோர்க்கு உவமையும் யானையே!

பெரும்பசிக்கு  இட்ட பெயரிலும் யானையே!

செருவினில் வெற்றிகளைச் சேர்த்தது யானையே!

முருகனுக்கு மூத்தவனின் முகவடிவும் யானையே!

 

உணர்ச்சிகளில் மனிதனுக்கு ஒத்ததது  யானை!

வாழிடம் செல்லும் வழிமறவாது யானை!

பெருமையும் புனிதமும் நிறைந்த இவ்விலங்கினை

அருகிடாமல் காப்பது அனைவரின்  கடமையன்றோ?


                                                                                                    -காரஞ்சன்(சேஷ்)

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

பல்லுயிர் பாமாலை!


வலைப்பூ அன்பர்களுக்கு வணக்கம்!

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் என்னுடைய வலைப்பக்கத்தின் மூலம் உங்களை சந்திக்க வருவதில் மகிழ்வடைகிறேன்! என் படைப்புகளைப் பகிர விழைகிறேன்.
படைப்புகள் குறித்து தங்களின் கருத்துரைகளை அறிய ஆவல் கொண்டுள்ளேன்!

புதுவை அரசின் சுற்றுச் சூழல் துறை  நடத்திய கவிதைப் போட்டியில் 
மூன்றாம் பரிசுக்குத் தெரிவு செய்யப்பட்ட என்னுடைய கவிதையினைப் பகிர்ந்துள்ளேன்.                   

                         பல்லுயிர் பாமாலை!

 

உயிர்கள் அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்தநிலை

சுழலும் இப்புவியில் சுழற்சியென நிலைப்பதுவே!

 

சுற்றுச் சூழலிலே சுயநலத்தால் மனிதனவன்

மாற்றம் விளைவித்தால் மன்னுயிர்கள் என்னாகும்?

 

நெகிழிப் பயன்பாட்டால் நிலமகளின் நெஞ்சடைத்தோம்!

வான்நீரை அவள்பருக வழியின்றிப் போனதுவே!

 

அடுக்குமாடி குடியிருப்பால் ஆக்கிரமிப்பில் நீர்நிலைகள்!

நீர்வாழ் உயிரினங்கள் வேறெங்கு போய்வாழும்?

 

வனங்களை அழிப்பதனால் வாழிடமின்றி காட்டுயிர்கள்

ஊருக்குள் புகுந்து உண்டாக்கும் பெருஞ்சேதம்!

 

இயற்கைஉரம் தவிர்த்து இடுகின்றார் நஞ்சதனை!

விளைநிலங்கள் கெடுவதுடன் விரைந்தழியும் நல்லுயிர்கள்!

 

மின்மினியும், பொன்வண்டும், கருடனும் பருந்தினமும்

காணக் கிடைக்காத காரணம் இவையன்றோ?

 

வாகனப் பெருக்கத்தால் வான்முட்டும் பேரிரைச்சல்!

கரும்புகை கலப்பதினால் காற்றுவெளி மாசாகும்!

 

ஆலைக் கழிவுகள் நீர்நிலை சேர்வதனால்

ஆழியும் நஞ்சாகி அருகிடுதே கடலுயிர்கள்!

 

உறைந்திருந்த பனிப்பாறை உருகத் தொடங்குவது

காலநிலை மாற்றத்தால் கவலைதரும் நிலையன்றோ?

 

உறைநிலையில் ஒளிந்திருந்த கிருமிகளால் நோய்பலவும்

உருவாக சாத்தியங்கள் உண்டெனெவே அஞ்சிடுவோம்!

 

இயற்கையின் முன்னே எள்ளளவு மனிதரெலாம்!

இயைந்து வாழ்ந்தால் இன்பமுண்டு எந்நாளும்!

 

பல்லுயிர் ஓம்புதலில் பங்கெடுப்போம் மகிழ்வுடனே!

அடுத்தடுத்த தலைமுறைக்கு அளித்திடுவோம் நற்புவியை!

 

                                        -காரஞ்சன்(சேஷ்)