வெள்ளி, 30 மே, 2014

களிப்பூட்டும் விளையாட்டு! -காரஞ்சன்(சேஷ்)




களிப்பூட்டும் விளையாட்டில் கவலை மறந்திடலாம்!
வெளிப்படும் உன் திறத்தால் விண்முட்டும் புகழ்பெறலாம்!              
உளிபட்ட கல்லில்தான் உயிர்சிற்பம் உருவாகும்!
தோல்வி அடைந்தாலும் துவளாமல் முயன்றிடு!              
தாளாத் துயரினை தாங்கிடும் திறன் வரும்!
ஒளிந்து விளையாடு! ஒளிக்காதே பிறர்பொருளை!
அளித்து மகிழ்தலில் ஆனந்தம் என்றுணர்வாய்!
பள்ளிப்படிப்போடு வாழ்க்கைப் பாடமும் கற்றிடுவாய்!

  --காரஞ்சன்  (சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!          

புதன், 28 மே, 2014

ஓடிவிளையாடு! -காரஞ்சன்(சேஷ்)

 
        ஓடிவிளையாடு!


புத்தகச் சுமைக்குள்ளே 
புதைந்து மூழ்காமல்,
ஒத்த சிறுவருடன் 
ஓடியாடி விளையாடு!

கத்தும் கடலையும், 
கால்வருடும் அலைகளையும்,
வித்திட்டு விளைகின்ற 
வெவ்வேறு பயிர்களையும்,  
            
எத்தனையோ வண்ணத்தில் 
எழில்கொஞ்சும் மலர்களையும்,
உதிக்கின்ற கதிரையும், 
உவந்து பாடும் குயிலையும்,

சத்தமின்றி தேன் உறிஞ்சும், 
வண்டினங்கள் வாழ்வினையும்,
நித்தமும் பார்த்து மகிழ்! 
நீ கற்பாய் ஏராளம்!
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

ஞாயிறு, 25 மே, 2014

ஜாதிப்பூ- சிறுகதைக்கான விமர்சனத்திற்குப் பரிசு!

மதிப்பிற்குரிய திரு  வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதைப் போட்டியில் "ஜாதிப்பூ" கதையின் விமர்சனத்திற்கு எனக்கும்
என் மனவிக்கும் பரிசு கிடைத்துள்ளது. 
 
சரிசமமாகப் பரிசு பெறும் ஆறு பேர்களில் நாங்கள்இருவரும் இடம்பெற்றுள்ளோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

 
வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும், தெரிவு செய்த நடுவர் ஐயாவிற்கும் என் மனமார்ந்த நன்றி!


"ஜாதிப்பூ" கதைக்கான இணைப்பு:

பரிசுபெற்றதற்கான அறிவிப்புக்கு இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2014/05/vgk-16-equal-prize-winners-list-3-of-3.html



என் மனைவி எழிலியின் விமர்சனம் இதோ ....


கோயில் வாசலில் கதை தொடங்குகிறது. பூ வியாபரம் செய்யும் பாட்டி, அவளுக்குப் போட்டியாக ஒரு பருவவயதுப் பெண் புதுவரவு என அருமையான காட்சி கண்முன் விரிகிறது. “பூக்களை விட அந்த பூக்காரி நல்ல அழகு” என்று  உரைப்பதிலேயே அவள் அழகைக் கண்முன் நிறுத்தி விடுகிறார். அதற்கேற்ப படங்களும் மிக அழகு!. கடைக்கண் பார்வைக்குக் காத்திருக்கும் இளைஞர்கள் பாழும் நெற்றியில் திருநீற்றுப் பட்டை அணிவதாகக் காட்டியது அருமை! யதார்த்தமும் கூட!

பருவமங்கையோ படு சுட்டி. வியாபாரத்தில் கெட்டி! அவளின் சாதுர்யத்தால் பூக்களை சீக்கிரம் விற்றுத் தீர்ப்பதும், பாட்டியின் வியாபாரம் படுத்துப் போவதாகக் காண்பித்ததும் போட்டியான புதுவரவு யார்? ஏன்? என்ற கேள்வியை நம்முள் எழுப்பிச் செல்கிறது. என் பிழைப்பைக் கெடுக்க வந்தது போல் இருக்கிறது என பாட்டி சொல்வது நம் எதிர்பார்ப்பை மேலும் தூண்டுகிறது.

பூக்களை விற்றுத்தீர்த்ததும், பாட்டியைப் பார்த்து கண்சிமிட்டி “வரட்டுமா பாட்டி?”எனக் கூறி அந்தப் பெண் செல்வதாய்ச் சித்தரிக்கும்போதும், பார்த்து ஜாக்கிரதையாய்ச் செல்லும்படி பாட்டி சொல்வதாகக் குறிப்பிடும்போதும் கதையில் இருவருக்கும் இடையில் ஏதோ ஒரு உறவு இருக்குமோ என்ற எண்ண மாற்றம் ஏற்படுகிறது.
இனி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்தான் அவள் வருவாள் என பாட்டி கூறியதும், அவளை இனிமேல் செவ்வாய், வெள்ளிகளில் கூட வரவேண்டாம் எனக் கூறிவிடுமாறு ஒரு இளைஞன் (நம் கதையின் நாயகன் உரிமையுடன் குறிப்பிடுவதாக) அறிமுகமாகிறார். நாயகனுக்கு அவளைப் பலரும் மொய்ப்பது போல் சூழ்வது பிடிக்கவில்லை என்று காண்பித்து அந்தப் பெண்ணின் மேல் அவனுக்கு ஒரு ஈர்ப்பு இருப்பதை உணர்த்திவிடுகிரார்.,
பாட்டிக்கும் அவனுக்கும் என்ன உறவு? எனும் கேள்வியை நம்முள் எழுப்பி, அதற்கான விடையைத் தந்தது இன்னும் சிறப்பு. பாட்டி அவனைப் “பேராண்டி” என உரிமையாக அழைப்பதும், அவ்விளைஞன் தன் சிறுவயது முதல், படிப்பை முடித்து வேலையில் சேர்ந்துள்ளவரை, அனைத்து நிகழ்வுகளையும் பாட்டியிடம் ஒளிவு மறைவின்றிப் பகிர்ந்து வருவதாகக் குறிப்பிட்டு, அவர்களுக்குள் ஒரு ஒட்டுறவு இருப்பதை வெளிப்படுத்தி விடுகிறார்.
  
சிறுவயதில் அவனுக்கு அனைத்துப் பூக்களையும் அறிமுகம் செய்து வைத்த பாட்டியிடம், “பூக்களிலுமா ஜாதிப்பூ என்று ஒரு ஜாதி தனியாக இருக்காப்பாட்டி?” என்று கேட்பதாக அமைத்து, அதன் மூலம், அவன் மிகவும் புத்திசாலி, விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்ற பழமொழிக்கு ஏற்ற பண்பாளன் எனப் பாத்திரத்தை மெருகேற்றிவிடுகிறார்.

மேலும் உடல்நலம் குன்றியிருந்த பாட்டியை ஒருநாள் மழையில் நனையாமல் காத்து, அவளது உறைவிடத்தில் கொண்டு சேர்த்ததாக அமைத்து அவன் இரக்ககுணமும், முதியோரிடத்தில் பற்றும், பொறுப்புணர்வும் கொண்டவன் என்பதை உணர்த்திவிடுகிறார்.

புத்தம்புது வரவான அந்த ஜாதிப்பூவை விரும்பி மாலையிட்டு மணமுடிக்க எண்ணி, பாட்டியிடம் அந்த எண்ணத்தைப் பக்குவமாய்ப் பகிர்ந்துகொண்டவிதம் அருமை. அவ்வேளையில் ஆலய மணி ஒலித்திட, அதை நல்ல சகுனமாய் பாட்டியும் அவனும் நினைத்து மகிழ்வதிலிருந்து, இறைநம்பிக்கை மிகுந்த அவர்கள் இருவரும் நிச்சயம் அவ்வெண்ணம் ஈடேறும் என நம்பிக்கை கொண்டதில் வியப்பில்லை.

பாட்டியிடம் ஆசிர்வாதம் கேட்கும்போது, கதையின் திருப்பம் விளைகிறது. வெளியூரிலிருந்து வந்த தன் பேத்தி ஒருவாரத்திற்கு அவளுடனேயே பூ வியாபாரம் செய்யப் போவதாகவும், ஆனால் தான் யார் என்பதை யாருக்கும் சொல்லிவிடக்கூடாது என வாக்குறுதி பெற்றுக்கொண்டதால் தன் பேத்திதான் அவள் என்பதை அவனிடம் கூற இயலாமல் தவிக்கையில் அவள் கொடுக்கும் வாக்கை நிச்சயம் காப்பாற்றுவாள் என்பது உறுதிசெய்யப்படுகிறது.

“எல்லாம் உன் மனசுப்படியே நல்லபடியாகவே நடக்கும்டா மாப்ளே!” என ஆசீர்வதிக்கையில் பாட்டியின் மனதில் பேராண்டியை மாப்பிள்ளையாக்கிக் கொள்ள முடிவு செய்தது வெளிப்படுகிறது. கோயிலில் மங்கல் இசை முழங்குவதாகக் காட்டி கதைக்கு சுபமான முடிவுதான் என்பதைக் குறிப்பால் உணர்த்தி, அதற்கேற்ப மணமாலை படங்களையும் இணைத்து அருமையாக முடித்துள்ளார்.

மொத்தத்தில் “ஜாதிப்பூ” நறுமணம் கமழும் பூ தான். ஜாதிப்பூவை கையோடு கைசேர்த்து சூடிப்பார்க்கும் நேரம் விரைவில் நெருங்கட்டும். பூமாலைகள் அவர்களின் தோள்சேரட்டும்!. நல்லுளங்கள் இணைந்து பாட்டிக்கு தம் நன்றிகளைச் செலுத்தட்டும்!
எளிய குடும்பத்தில் ஏற்படும் காதலை சித்தரிக்கும் விதம் அருமை! பருவப்பெண், பாட்டிக்குப் பழக்கமான இளைஞன், பூ விற்கும் பாட்டி  என எளிமையான, எதார்த்தமான பாத்திரங்களைத் தெரிவு செய்து, நல்லுளங்களாய் அவர்களைக் காட்டி, நல்ல முடிவைத் தந்த கதாசிரியருக்கு ஒரு சபாஷ் சொல்லத் தோன்றுகிறது. நன்றி!


என்னுடைய விமர்சனம்:

ஆலய வாசலில் அறிமுகம் ஒரு பருவப்பூ!
பருவமங்கையின் தோற்றத்தில் வனப்பு!
அமர்க்களமாய் ஆசிரியரின்  வர்ணிப்பு!
அதற்கேற்ப அனைத்துப் படங்களும் சிறப்பு!
 
இளைஞர்க்கு அவளிடம் ஏதோ ஓர் ஈர்ப்பு!
பலாப்பழம் நாடும் ஈக்கள்போல் மொய்ப்பு!
கோயிலுக்கு வரும் கூட்டம் அதிகரிப்பு!
பூக்காரப் பாட்டியின் வியாபாரம் குறைப்பு!
பாழும் நெற்றிகளில் திருநீறும் அதன் பாதிப்பு!
 
மங்கையின் திறனால், பூக்கள் விரைவில்விற்றுத்தீர்ப்பு!
பாட்டிக்குப் பொறாமை இல்லாதது கதையில் பிடிப்பு!
பலர் வந்து அப்பெண்பற்றி பாட்டியிடம் விசாரிப்பு!
யாரென்று அறியேனென பாட்டியின் பதிலிறுப்பு!
செவ்வாய் வெள்ளி இனி வருவாள் என உரைப்பு!
கேட்டதும் ஓர் இளைஞனின் பதைப்பு!
அவளைப் பலரும் சூழ்வதில்  வெறுப்பு!
அவளை  வாராதிருக்க பாட்டி மூலம் கண்டிப்பு!
 
 அறியாப் பருவம் முதல் அவனைஅறிந்ததால்
“பேராண்டி” என அன்புடன்அழைப்பு!
பக்தியில் அவனுக்கோ மிகவும் விருப்பு!
அன்றாடம் ஆலயம் வருவதில் லயிப்பு!
உழைத்துப் பிழைப்பதில் பாட்டியின் பிடிப்பு
உண்டாக்கியது நாயகனுக்கு அவள்மேல் விருப்பு!
பாட்டியின் நலனில் அவனுக்குப் பொறுப்பு!
மழையில் நனையாமல் காத்தது சிறப்பு!
பட்டியல் நீளும் பூக்களின் தொகுப்பு
சிறுவயதில் அவனுள்ளே பாட்டியின் விதைப்பு!
பூக்களிலும் ஜாதியுண்டோ? கேள்வியின் தொடுப்பு!
கேட்டதும் பாட்டி அடைந்தாள் மலைப்பு!
பாட்டிக்கு அவன் திறனில் மதிப்பு!

வாழ்வின் நிகழ்வுகள் அனைத்தும் உரைப்பு!
ஏதும்  அதிலில்லை ஒளிப்பு, மறைப்பு!
இருவருக்கும் இது அன்றாட நடப்பு!

 
ஜாதிப்பூவை மணந்திட விருப்பு!
பாட்டியிடம் அதை உரைப்பதும் சிறப்பு!
ஆலய மணியும் அவ்வேளையில் ஒலிப்பு!
அதனால் அவனுள் விளைந்தது களிப்பு!
 
சேதியை அறிந்ததும் பாட்டிக்கும் வியப்பு!
பேத்திக்கு ஏற்ற வரனென நினைப்பு!
அவளும் அடைந்தாள் அளவிலாப் பூரிப்பு!
பேத்திதான் அவளென உரைத்திடத் துடிப்பு!
கொடுத்த வாக்கைக் காப்பாற்றத் தவிப்பு!
அப்படியே நடக்கும் என ஆசீர்வதிப்பு!
அவ்வேளை மங்கல இசையும் ஒலிப்பு!
இருவரைச் சேர்ப்பது இனி பாட்டியின் பொறுப்பு!
அன்புளம் இணைவது அனைவரின் எதிர்பார்ப்பு!
யாருக்கும் இல்லையதில் எதிர்ப்பு!

விடுப்பரோ அனைவருக்கும் அழைப்பு!
இதுவன்றோ கதையின் உயிர்ப்பு!
ஜாதிப்பூ ஒரு அருமையான படைப்பு!
 
சிறுகதைகளின் அணிவகுப்பு!
சிந்திக்க வைக்கும் முனைப்பு!
சமுதாயச் சூழல்கள் சித்தரிப்பு!
சிறந்த நடையில் படைப்பு!
கோர்வையாய் எடுத்துரைப்பு!
அத்தனையும் தித்திப்பு!
இவையே கதாசிரியரின் சிறப்பு!
எல்லோர் மனங்களிலும் இடம்பிடிப்பு!
வைகோ அவர்களுக்கு வழங்கிடுவோம் இனிப்பு!
நல்ல தீர்ப்பு  இனி நடுவரின் பொறுப்பு!
---------------------------------------------------------------
-காரஞ்சன்(சேஷ்)

சனி, 17 மே, 2014

நீர் அறிய!- காரஞ்சன்(சேஷ்)


கல்லிடையே தேங்கியநீர்
கவலைமுகம் காட்டுதிங்கே!
கடல்கடந்து சென்றவர்தான்
காலத்தில் திரும்பாரோ?

பொருளின்றி வாழ்வில்லை!
பொருளொன்றே வாழ்வில்லை!
ஏக்கத்தின் தாக்கத்தை
எப்போது அறிவாரோ?

ஆறுதல் மொழிசொல்லி
அணைப்பாரோ கரங்கொண்டு?
இணைந்தமர்ந்த காட்சியுமே
இந்நீரில் தெரியாதோ?

காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

புதன், 14 மே, 2014

உன்னிலும் நான்மேல்தான் -காரஞ்சன்(சேஷ்)

                                   
                                              உன்னிலும் நான்மேல்தான்!
மண்டபத்தைக் கட்டிவைத்த
மன்னவன் யாரோ?
என்நிலையில் இருப்பவர்க்கு
இதுதான் வீடோ?
                      
இறுகிய கருங்கல்லும்
இடம்விடுதே செடிவளர!
இடம்பிடித்தேன் இவைகளுடன்
நானுமிங்கு நடைதளர!
                                 
எலிகளும் கொசுக்களுமே
என்னுடன் வாசம்!             
இரக்கப்படும் தென்றல்வந்து
என்மேல் வீசும்!
                      
வளர்ந்து தேய்ந்தவர்க்கு
வாழ்வில் துயருண்டு!
தேய்ந்து வளர்ந்தவர்க்கோர்
திருப்தியும் அதிலுண்டு!
                      
இரண்டு நிலைகளுக்கும்
என்வாழ்வில் இடமில்லை!
இருப்பதுபோதுமென்றால்
எந்நாளும் துயரில்லை!

வெளிச்சமிட்டு எந்நிலையை
வெளிக்காட்டும் வெண்ணிலவே!
உன்னைவிட நான்மேல்தான்
உடுத்தியுள்ளேன் கந்தையினை! 
-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

செவ்வாய், 13 மே, 2014

தூணில் உதித்த தூயோனே போற்றி! -காரஞ்சன்(சேஷ்)


தூணில் உதித்த தூயோனே போற்றி! -
(200 ஆவது பதிவு)
காலைக் கதிரவனும்
கடலிடை எழுகின்றான்!

சோலை மலர்களெலாம்
மாலையாய்த் தோள்சேர
மலர்ந்தெங்கும் சிரிக்கிறதே!

அதிகாலைப் புள்ளினங்கள்
துதிபாடித் துயிலெழுப்ப 
திருவடி தொழுதிடவே
தேடிவந்து தினந்தோறும்
நின்ஆலய வாசலிலே
நிற்கின்றோம் அனைவருமே!

ஆணவத்தை அழிக்க
அவதரித்த திரு உருவே!
தாமரைக் கண்திறந்து
தயை புரிவாய் எங்களுக்கே!

ஒருகண்ணால் உனைநோக்கும்
உத்தமியின் திருவிழிகள்
நித்தமும் எங்களுக்கு
நிம்மதியை அருளாதோ?

நாளை என்பதே
நரசிம்ம ரிடமில்லை!
எங்கும் உறைபவன் நீ!
இல்லாத இடமில்லை!

காண்பவர் கவலையெலாம்
களைந்திடும் மாமணியே!
நான்காம் அவதாரமே!
நாங்களெலாம் நின்பிள்ளை!

என்ன பிழை யாம் செய்தோம்?
ஏனிந்த பெரும் துயரம்!
நாடிவந்தோம் நின்னருளை
நல்கிடுவாய் நரசிம்மா!
  
சேயாம் எங்களுக்கு
தாயாய் அருள்பவன் நீ!

எந்தை முன்னோரும்
ஏத்திட்ட தந்தை நீ!

வேள்வித் தீயினிலே
விளைந்தெழும் உருவில் நீ!

எங்கும் நிறைந்தவன் நீ!
எதிலும் உறைபவன் நீ!

வரத்தில் அடங்காத
வடிவம் பெற்றவன் நீ!

கருணைக் கடலும் நீ!
காப்பாற்ற வந்தவன் நீ!

சரணாகதி யென்றோர்க்கு
சகலுமும் அருள்பவன் நீ!

நின்திருவிழிகள் அருளாலே
தீவினைகள் அகலாதோ?

விண்ணளந்த பெருமாளே!
விழைந்தெமக்கு அருள்செய்வாய்! 

-காரஞ்சன்(சேஷ்)


 படம்: பூவரசங்குப்பம் அருள்மிகு அமிர்தவல்லி நாயிகா சமேத ஶ்ரீ லக்‌ஷ்மி நரசிம்மர்.

ஞாயிறு, 11 மே, 2014

அன்னையர் தின வாழ்த்து! -காரஞ்சன்(சேஷ்)


                                                 அன்னையர் தின வாழ்த்து!


'அ" வை அறியுமுன்னே
அம்மாவை அறிந்திட்டோம்!

பத்துமாதம் சுமந்தெடுத்து
பாலூட்டி, தாலாட்டி
காலூன்றி நடப்பதை
களிப்புடன் பாராட்டி
தேவை அறிந்து
சேவை செய்வதிலே
அன்னையைப் போல்
ஆரிருப்பார் அவனியிலே!

செவிக்குணவாக
சிறந்த கதை பல சொல்லி
சீரிய சிந்தனைகள் நம்
சிந்தையில்  விதைத்திடுவாள்!
வீரத்தை ஊட்டுவதில்
விஞ்சிநிற்பாள் அன்னையுமே!

வளர்த்து ஆளாக்கி
வாழவைத்த அன்னைக்கு
அன்னையர் தினமான
இந்நாளில் வாழ்த்துரைப்போம்!


-காரஞ்சன்(சேஷ்)

ஓவிய உதவி: கூகிளுக்கு நன்றி!

சனி, 10 மே, 2014

கதைகேளூ! கதைகேளூ! -காரஞ்சன்(சேஷ்)


கதைகேளூ! கதைகேளூ!



கடந்தகாலமெல்லாம்
கண்முன்னே நிக்குதய்யா!
நடந்தகதை நான்சொல்ல
நாட்கள் பல ஆகுமய்யா!

சேத்து வயல்களிலே
நாத்து நடப்போவோம்!
சிறப்பாநெல் விளைய
சேர்ந்து உழைச்சிடுவோம்!

இலைதழை புண்ணாக்கு
இயற்கை உரமிடுவோம்!
மருந்தடிக்கும் இந்நாளில்
மருந்தே உணவாகுதய்யா!

நாலெழுத்துப் படிச்சிருந்தா
நல்லா இருந்திருக்கும்!
பேரெழுதத் தெரிஞ்சுகிட்டேன்!
பெரிசா ஏதுமில்லை!
 
கட்டாயக் கல்விக்கு
சட்டம் அப்ப இல்லை!
காலணா காசுக்கு
காலைமுதல் உழைச்சிருப்போம்!

கூத்தும் நாடகமும்
கும்பலா பார்த்திடுவோம்!
நல்ல சில விஷயங்கள்
நானறிஞ்சேன்  அப்படிதான்!

படிப்பும் அவசியந்தான்
பட்டபின்னே உணர்ந்துகிட்டேன்!
இந்நாளில் படிக்கவைக்க
எம்மாஞ் செலவாகுதய்யா!

காலம் மாறிடுச்சி!
காடுநெலம் கொறைஞ்சிடுச்சி!
மாறி வரும் மழை போல
மனுஷ மனம் மாறிடுச்சி!

கம்ப்யூட்டர் வழியாவும்
கல்யாணம் நடக்குதுங்க!
ஆன சிலநாளில்
அதுக இரண்டும் பிரியுதுங்க!

புதுவாழ்க்க தொடங்கிப்புட்டா
புரிஞ்சுக்க வேணுமுங்க!
விட்டுக் கொடுப்பதிலே
வெளையும் பல நன்மையுங்க!

இலையெல்லாம் சருகாகும்
இயற்கை விதி இதுவாகும்!
இளக்காரம் செய்யாம
எம்பேச்சைக் கேட்டுக்கோங்க!

படிச்ச புள்ளைகளா-ஒரு
பாடம் சொல்லித்தாரேன்!

பெத்து வளத்தவங்க
பேசும் தெய்வமுங்க!
கடைசி காலம்வர
காப்பாத்த வேணுமுங்க!

கம்ப்யூட்டர் உள்ளாற –என்
கதையக் கொஞ்சம் போட்டுடுங்க!
கதையப் படிச்சவங்க
கருத்த கொஞ்சம் போடுங்களேன் !
 -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

வெள்ளி, 9 மே, 2014

பூத்தமலர் காத்திருக்க! -காரஞ்சன்(சேஷ்)


பூத்தமலர் காத்திருக்க!


கதவருகில் காத்திருந்து
கண்ணிரண்டும் பூத்ததய்யா!
தொடுத்த மலர்ச்சரமும்
துவளுதய்யா கூடையிலே!
கொடியிடையாள் பாரமதை
கொள்ளையன் நீ அறியாயோ?
மனக்கதவை திறந்தவன் நீ!
மாலையிட வாராயோ?
விரும்பிய சேதியொடு
விரைவில் நீ வந்துவிடு!
அரும்பிய புன்னகையின்
அர்த்த’மது’ கண்டுவிடு!
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

வியாழன், 8 மே, 2014

தூக்கணாங் குருவிக்கூடு! -காரஞ்சன்(சேஷ்)



தூக்கணாங் குருவிக்கூடு

ஏட்டுப் படிப்பின்றி
கூட்டைஅமைத்தாயோ?

பசுமை வீடமைக்க
பாடம் தந்தாயோ?


உல்லாச ஊஞ்சலென
உன்கூட்டில் அமர்ந்தாயோ? 


அறைகள்பல பிரித்து
அதற்குள் வைத்தாயோ?

வாய்ப்பந்தல் நபர்களையும்
வாய்பிளக்க வைத்தாயோ?

பிறவிஞானம் இயற்கையின் கூறு!
சிறப்பாய் விளக்குது உந்தன் கூடு!

-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

புதன், 7 மே, 2014

வரை!- காரஞ்சன்(சேஷ்)


வரை!

வரையறுத்த தொகை   
வரைவதால் கிடைக்குமெனில்
வரையளவு உயரங்கள்
வரைபவர்க்குப் பொருட்டல்ல!
 
பார்ப்பவர் கண்களை
ஈர்த்திட வேண்டி
பாவையின் கண்களை
பாங்காய் வரைகின்றார்! 

தொங்கி வரைந்தாலும்
தொய்வில்லை ஓவியத்தில்!
எங்கிருந்து பார்த்தாலும்
பார்ப்பவரைப் பார்ப்பதுபோல்
பாவையவள் தோற்றம்!

 நாலடி உயரத்தை
நாற்பதாக்கி வரைந்தாலும்
ஏற்ற இறக்கங்கள்      
என்றும் இவர்வாழ்வில்!

 வரைதலில் சிகரம்
தொட்ட இவர்-தம்
வாழ்வில் உயர்ந்திட
வாழ்த்துரைப்போமே!
-காரஞ்சன்(சேஷ்)
 
பட உதவி: மாயவரத்தான் எம்.ஜி.ஆர். வலைப்பூ

செவ்வாய், 6 மே, 2014

வாயில்லாப் பூச்சி!…-காரஞ்சன்(சேஷ்)




 வாயில்லாப் பூச்சி!

வண்ண மலரென்று

வாயருகே சென்றாயோ?

உண்ண முயன்றிடுதே

வண்ணப் பறவை உனை!

வலியோர் முன் எளியோர்

வாயில்லாப் பூச்சிகளோ?

எளியோரின் வலியதனை

வலியோர் அறியாரோ?

 -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!