ஞாயிறு, 30 மார்ச், 2014

ஆனந்த அலைகள்! -காரஞ்சன்(சேஷ்)


 ஆனந்த அலைகள்!


அந்தப் புறநகர்ப்பகுதிக்குள் செல்லும்போதெல்லாம்
ஆனந்த நினைவலைகள் என்னுள்!


சிறுவயது மகளுடன்
சிறுவனாய் மாறி
மழையை இரசித்த தருணங்கள்!


வாசலில் இருந்த வேப்பமரம்
விரித்த குடையாய்
வெயிற்காலத்தில்!
 




அவளுக்குப் பறவைகளின்
அறிமுகம் அங்குதான்!


மாலைநேரத்தில்
மரத்தில் கூடும்
மனம்கவரும் பறவைகளின்
மழலை மொழிகள்!

அவ்வப்போது
கடந்து செல்லும்
இரயில் வண்டியின் கூவல்கள்!




தலையாட்டிய  பூம்பூம் மாட்டையும், 



வேட்டிசட்டை கேட்ட
குடுகுடுப்பைக் காரரையும்,

மகுடி ஊதிய பாம்பாட்டியையும்
கூடையிலிருந்து வெளிவந்து
ஆடிய பாம்பையும்
மாடியிலிருந்து மகள் இரசித்தாள்!


வண்ண வண்ண பலூன்களை
வாங்கித் தர அடம்பிடித்து
அழுத்தி வெடித்துவிட்டு
அதற்கும் அழுது நிற்பாள்!

 
நீங்கா நினைவுகளில்
என்னுள் சொந்தமாய்
முன்னம்  நாங்கள் குடியிருந்த
அந்த வாடகை வீடு!

-காரஞ்சன்(சேஷ்)

வெள்ளி, 28 மார்ச், 2014

வெள்ளி எழும்வரை.... காரஞ்சன் (சேஷ்)


                                                       வெள்ளி எழும்வரை!
வெள்ளிஅலைதனை  
வீசி மகிழ்ந்திடும்
நீலக்கடல் பாரம்மா!
 
நீல நிறத்தினில் 
நெஞ்சம் நிறைத்திடும்
வங்கக்கடல் தானம்மா!
 
நம்மை வளமுடன்
வாழ வழிசெயும்
நம்குலத் தெய்வமம்மா!
 
வீசும் அலைவந்து
நேசமுடன் நம்மின்
பாதம் வருடுமம்மா!
 
சீற்றம் மிகுந்திடின்
சேனைபோல் வந்து
சேதம் விளைக்குமம்மா!

திங்கள் ஒளியினில்
எங்கள் பயணங்கள்
நெஞ்சில் நிலைக்குதம்மா!
 
கட்டுமரம் கொண்டும்
கொட்டும் மழையிலும்
எட்டி வலைவிரிப்போம்!

வெள்ளி எழுந்திட
விரித்த வலையொடு
வாரியில் காத்திருப்போம்!

துள்ளி மறைந்திடும்
வெள்ளி மீன்வகை
அள்ளித் திரும்பிடுவோம்!

சீறும் அலையுடன்
வாரி வழங்கினும்
சேதம் அதற்கிலையே!

எல்லை கடந்திடின்
இன்னல் இழைப்பது
இன்னமும் ஓயலையே!

உந்தன் தலைமுறை
இந்தக் கடலினை
சொந்தமெனக் கொள்ளுமே!

இன்னல் அகற்றிட
ஏற்ற வழிகண்டு
இன்ப வெள்ளம் பொங்குமே!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

புதன், 26 மார்ச், 2014

வகுத்தல் பிழை! -காரஞ்சன் (சேஷ்)


                                                            வகுத்தல் பிழை!



கழித்த பொருட்களை
கண்டெடுத்துப் பொதியாக்கி
வயிற்றைக் கழுவ
வழிதேடி வைத்துள்ளார்!
 
கட்டிவைத்த பொதிமீது
கண்ணுறங்கும் இவருக்கு
உறைவிடம் குறித்து
ஒருபோதும் கவலையில்லை!

இருப்பைப் பெருக்கிட
இருப்பவர் தாம்முயன்று
உறக்கம் தொலைந்(த்)து
உலகில் உழல்கின்றார்!

பகுத்தல் இல்லா
வாழ்க்கைக் கணக்கில்
வகுத்தல் பிழையோ?

                                               -காரஞ்சன்(சேஷ்)

பட உதவிக்கு நன்றி: மாயவரத்தான் எம்.ஜி.ஆர்

செவ்வாய், 25 மார்ச், 2014

உனக்குள் ஆயிரம்! -காரஞ்சன்(சேஷ்)





உருப்பெருக்கி மூலம்

உயிரினத்தைக் காண்கையில்

உனக்குள் ஆயிரம் கேள்விகள்!

அகக்கண் திறந்திடு!

அகிலம் புலப்படும்!

படைப்பின் மகத்துவம்

பளிச்செனப் புரிந்திடும்!
                                                         -காரஞ்சன்(சேஷ்)

திங்கள், 24 மார்ச், 2014

படைப்பு! காரஞ்சன்(சேஷ்)

 
படைப்பு!
 

படைப்பின் பிழையாய்

இவள்!

ஆனால்…

இவள் படைப்பில்

பிழை இல்லை!

எல்லாப் படைப்பிலும்

இறைவன் உறைகின்றான்!
   
                                         -காரஞ்சன்(சேஷ்)
 
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

ஞாயிறு, 23 மார்ச், 2014

உந்துசக்தி! -காரஞ்சன்(சேஷ்)

                               உந்து சக்தி!
இழந்ததை எண்ணி
உழன்று சுருளாமல்
இருப்பதைக் கொண்டு
இய(ங்)க்கும் இவர்
உந்து சக்தியை
உற்பத்தி செய்து
தளர்ந்த மனங்களில்
தன்னம்பிக்கையை
விதைக்கின்றார்!

தன்னைத் தான்நம்பி
தடைகளைத் தகர்த்தெறிய
நம்பிக் கையேந்தும் கோல்
நம்பிக்கையின் அளவுகோல்!

விஞ்சிய நெஞ்சுரத்தால்
விந்தை புரியுமிவர்
தளரா மனத்திற்கென்
தலைதாழ்ந்த வணக்கங்கள்!
                             -காரஞ்சன் (சேஷ்)

பட உதவிக்கு நன்றி: மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.

சனி, 22 மார்ச், 2014

"அமுதைப் பொழியும் நிலவே" (VGK 08) சிறுகதை விமர்சனத்திற்கு மூன்றாம்பரிசு!


மதிப்பிற்குரிய திரு  வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதைப் போட்டிக்கான விமர்சனத்திற்கு எனக்கு மூன்றாம் பரிசு கிடைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும், தெரிவு செய்த நடுவர் ஐயாவிற்கும் என் மனமார்ந்த நன்றி!

கதைக்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2014/03/vgk-08.html

பரிசுபெற்றதற்கான அறிவிப்புக்கு இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2014/03/vgk-08-03-03-third-prize-winner.html

என் விமர்சனம்:
மின்வெட்டு நேரத்தில் காலாற நடந்து, பேருந்தில் ஏறி, காற்று வாங்கப் பயணம் மேற்கொள்ளும் விதம் புதுமை! காற்று வாங்கப் போய் கனவில் மிதந்த கதை! மின்வெட்டு நேரத்தில் மின்சாரம் பாய்ச்சிய வெளிச்சப்பூவை விவரிக்கும் விதம் அருமை!

கதாநாயகனின் வயது எங்கும் குறிப்பிடப் படவில்லை. பில்டிங் கான்ட்ராக்ட் தொடர்பான பணி செய்பவர் என்றே குறிப்பிடப் பட்டுள்ளது. பேருந்தில் இளவயதுப் பெண்கள் பலர் ஏறியவுடன் இவரது கனவு ஆரம்பித்திருக்கிறது.

ஆழ்மனதில் காதல் ஏக்கம் குடிகொண்டிருந்ததின் வெளிப்பாடாய் அந்த கனவு அமைந்திருக்குமோ? கனவு ஏன் வந்தது? காதல் தான் வந்தது! அதன் கோல வடிவங்களில் கோடி நினைவுகள் தந்தது.

கதாநாயகியின் அறிமுகம் திரைப்படத்தில் காண்பது போலவே கனவிலும் அமைத்தவிதம் அருமை! கதாநாயகி மலையாளம் கலந்த தமிழில் பேசும்  மிக அழகான பருவ வயது மங்கை! அவர் பாலக்காட்டைச் சேர்ந்த 19 வயது அமுதா என்பதும், வெல்டிங் சம்பந்தமாக பயிற்சி பெற வந்திருப்பதாகவும் அழைப்புக் கடிதத்தைப் பார்த்து அறிந்துகொள்வதாக அமைத்தது அருமை!

கதாநாயகியுடன் உரையாடி அவருக்கு உதவத் துடித்தது, பாதுகாப்பாக அவரைத் தங்க வைக்க நினைப்பது, அவருக்கு உதவி தேவைப் படும்போதெல்லாம் தன்னை தொடர்புகொள்ளலாம் எனக் கூறுவதாக அமைத்து இவரைப்பற்றிய விவரங்களை அவளுக்குத் தெரிவிப்பதாக அமைத்தது எல்லாம் அருமை! நவீனமயக் காதலில் செல்போன் இடம்பெறுகிறது. மறக்காமல் செல்போன் எண்ணையும் பதிவு செய்து கொள்வதாகக் காட்டிய விதம் அருமை!

பேருந்தைப் பற்றி விவரிக்கும் போதும், கதாநாயகிக்கு உதவுவதன் மூலம் அவர் உள்ளத்தில் இடம்பிடித்து, அவருடன் தன்னை வெல்டிங் (அ) வெட்டிங் செய்து முயற்சிப்பதாகக் கூறும் இடத்திலும், கனவு கலையும் போது கர்ண கடூரமாகக் கிழவியின் குரல் ஒன்று ஒலிப்பதாக முடிப்பதும்,  அக்குரல் மூலம் அவரின் அருகில் அமுதாவிற்கு பதில் ’ஆயா அமுதா’ அமர்ந்திருந்ததாக அமைத்ததும் ஆசிரியரின்  நகைச்சுவை உணர்வை நன்கு வெளிக்காட்டுகிறது!

விடுமுறை நாளில் வீட்டில் மின்வெட்டு!
காற்று வாங்கக் காலையில் ஒரு பயணம்!

கண்ணிமைகள் மூடவைத்த காற்றின் வேகம்!

காற்றின் குளிர்விப்பில் கனவில் மிதந்த தேகம்!

இளமங்கை அருகிருக்க இவர் மனதில் மோகம்!

இளமனதில் இடம்பிடிக்க இவருக்கோர் தாகம்!

இதற்கான காட்சிகளில் பளிச்சிடும் விவேகம்!

கனவென்று அறிந்தவுடன் கவலைதரும் சோகம்!

கதையெங்கும் மிளிர்கிறதே நகைச்சுவையின் பாகம்!

--------------------------------------
 
வாழ்த்திய/வாழ்த்தப்போகும் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி!

காரஞ்சன் (சேஷ்)

வெள்ளி, 21 மார்ச், 2014

விளை(லை)நிலம்! -காரஞ்சன்(சேஷ்)


விளை (லை) நிலம்!

 
விளைச்சலின்றிப்போன
விளைநிலம்
மேய்ச்சல் நிலமானது!

வீட்டுமனைக்காக
விற்பனை ஆனது!

புதுமனை புகுவிழாவிற்கு
விவசாயி தன் பசுவுடன்!

வீட்டுற்குள் சென்றுவந்த
பசுமாட்டின் கண்களில் கண்ணீர்!

மேய்ச்சல் நிலத்தின்
மேலெழுந்த வீடென்பதாலோ?


-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

புதன், 19 மார்ச், 2014

விடியலைத்தேடி..... காரஞ்சன்(சேஷ்)


விடியலைத்தேடி!


கொள்வார்க்குக் கடைவிரிக்க
குடைதாங்கும் மிதிவண்டி!

குடைநிழலில் ஓய்வெடுக்க
குத்திட்டு அமர்ந்தவளின்
நெஞ்சத் திரையினிலே
நினைவலைகள் மோதுதம்மா!

வறுமை இருள்நீங்க
பொறுமையுடன் காத்திருக்க
விடியல் தருபவன் ஏன்
விழ்கின்றான் கடலிடத்தே
                                                   -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

செவ்வாய், 18 மார்ச், 2014

ஒற்றைப் பறவை! - காரஞ்சன் (சேஷ்)

 
ஒற்றைப் பறவை!

தனிமைநாடும் வேளைகளில்

சுற்றித் திரியும்

ஒற்றைப் பறவையிடம்

ஒட்டிக் கொள்கிறது மனம்!

 


வெளிச்சம் பரவிய விரிந்த வானில்

விருப்பம்போல் வட்டமிடும்

ஒற்றைப் பறவை!

வழி மாறியதோ?

 
 

மோனநிலையில்

முள்மரத்தின் மீது ஒரு பறவை!

வலி மிகுந்ததோ?

 


பட்டமரக் கொம்பில்

பரிவுடன் ஒரு பறவை!

வாழ்ந்த இடம்தேடி

வந்தமர்ந்ததோ?

 


கிளை மீதமர்ந்து -சோக

கீதம் பாடும் ஒரு பறவை!

துணை ஒன்றைத்தேடி

துயரம் கொண்டதோ?

 


இவற்றை மறந்து

பறக்கத் துணிந்தால்..

எந்தப் பறவைக்கும்

இரையுண்டு உலகினிலே!

 


பாடம் தந்திடும்

பறவைப் பார்வை!

                                                       -காரஞ்சன்(சேஷ்)


படங்கள்: கூகிளுக்கு நன்றி!

வியாழன், 6 மார்ச், 2014

உன்கையில் பொம்மையன்றோ? -காரஞ்சன் (சேஷ்)


உன்கையில் பொம்மையன்றோ?

 
 உரலிலே      கட்டுண்டாய் அன்று!    என்
 விரல்வண்ணம் ஏற்றிடவே வந்தாயோ இன்று!  
                
 மண்ணுண்ட மாயவனோ
 மண்பொம்மை வடிவினிலே!
 உன்கையில் பொம்மையன்றோ
 உயிர்களெலாம் உலகினிலே!
 
 உருவாக்கும் பொம்மைகளில்
 உன்னுருவம் காணும்
 பிறவிப்பயன் தனையே
 பெற்றுவிட்டேன் நானும்! 
 
  விரலேந்தும் குழலினிலே
  பிறக்கின்ற நாதம்
  ஈரேழு உலகினையும்
  இயக்குகின்ற கீதம்!
 

  மயக்கம் தெளிவிக்கும்
  மறைபொருளாய் நீயும்!
  அறியாதோர் செய்யும்பிழை
  பொறுத்தருள்வாய் நாளும்!
 

  -காரஞ்சன்(சேஷ்)

 

1954ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் வெளிவந்த இந்த  ஒவியத்திற்கு எளியவன்  என் சொல்வண்ணம்!
  
வித்திட்ட விகடனுக்கு நன்றி!