ஆனந்த அலைகள்!
அந்தப் புறநகர்ப்பகுதிக்குள் செல்லும்போதெல்லாம்
ஆனந்த நினைவலைகள் என்னுள்!
சிறுவயது
மகளுடன்
சிறுவனாய்
மாறி
மழையை
இரசித்த தருணங்கள்!
வாசலில் இருந்த வேப்பமரம்
விரித்த
குடையாய்
வெயிற்காலத்தில்!
அவளுக்குப் பறவைகளின்
அறிமுகம்
அங்குதான்!
மாலைநேரத்தில்
மரத்தில்
கூடும்
மனம்கவரும்
பறவைகளின்
மழலை
மொழிகள்!
அவ்வப்போது
கடந்து
செல்லும்
இரயில்
வண்டியின் கூவல்கள்!
தலையாட்டிய பூம்பூம் மாட்டையும்,
வேட்டிசட்டை கேட்ட
குடுகுடுப்பைக்
காரரையும்,
மகுடி
ஊதிய பாம்பாட்டியையும்
கூடையிலிருந்து
வெளிவந்து
ஆடிய
பாம்பையும்
மாடியிலிருந்து
மகள் இரசித்தாள்!
வண்ண
வண்ண பலூன்களை
வாங்கித்
தர அடம்பிடித்து
அழுத்தி
வெடித்துவிட்டு
அதற்கும்
அழுது நிற்பாள்!
நீங்கா
நினைவுகளில்
என்னுள்
சொந்தமாய்
முன்னம்
நாங்கள் குடியிருந்த
அந்த
வாடகை வீடு!
-காரஞ்சன்(சேஷ்)




