வியாழன், 29 நவம்பர், 2012

நீர் கொண்டுவா வெண்மேகமே!-காரஞ்சன்(சேஷ்)

                                       
                                                நீர் கொண்டுவா வெண்மேகமே!

நீசென்று  நீருண்டு

வேருண்ணத் தருவாயா

வெண்மேகமே!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி:  கூகிளுக்கு நன்றி!

புதன், 28 நவம்பர், 2012

நடந்ததும் நடப்பதும்! காரஞ்சன்(சேஷ்)




நடை திறந்ததும்……

நினைத்து நடந்தார்!
நினைத்தபடி நடந்ததும்
நினைத்தபடி நடந்தார்!
நடப்பதை மறந்தார்!

நடத்துவதும் நீ!
நடத்தப்போவதும் நீ!
நினைத்தது(ம்) நடப்பது
நின்னருளா லன்றோ?
நடந்ததை நினைப்பது
நம் கடனன்றோ?

                     -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

செவ்வாய், 27 நவம்பர், 2012

குழப்பமென்ன?- காரஞ்சன்(சேஷ்)




                                                         குழப்பமென்ன?



நகமும் சதையுமாய்
நாமிருப்போம் என்கிறதோ? 

சமாதானத் தூதாக
சம்மதிக்க வேண்டியதோ? 

குரங்கின் தலையில்
குழப்பமென்ன வெண்புறாவே? 

நிம்மதி நாடிவந்து
நின்மேல் சாய்கிறதோ?

                                   -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி:கூகிளுக்கு நன்றி!

ஞாயிறு, 25 நவம்பர், 2012

இனிக்கட்டும் எம்வாழ்வும்!


 
வளைந்த கரும்புகளே நீர்
வாயிற் காவலரோ?
வாய்க்கால்வழி நீர்ப்பாய்ச்ச
வழிவிடு செங்கரும்பே!

 
இனிப்பொடு கசப்பும் -உன்னில்
இருப்பதாய்ப் பாடலுண்டு!
உறிஞ்சிநீ நீர்குடித்தால்
உண்டாகும் நற்சாறும்!


விளைந்தபின் உனக்குரிய
விலையும் கிடைத்தால்தான்
இனிக்கும்  உன்னாலே
இனித்திடும் எம்வாழ்வும்!

                        -காரஞ்சன்(சேஷ்)
 
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

வியாழன், 15 நவம்பர், 2012

வாழவை! -காரஞ்சன்(சேஷ்)

                                                     
                                                                  வாழவை!


     விளைந்திடும் பயிருக்கு
     வேண்டிய நீரில்லை!
     களையான நெல்வயலைக்
     களையாக விடலாமோ?
     களைந்திடு துயரென்று
     கரம்நீட்டி வேண்டுகிறேன்!
 
     இப்புவியின் பரப்பினிலே
     முப்பங்கு நீர்படைத்தாய்!
     எப்(ம்)பங்கும் இல்லையெனில்
     முப்போகம் விளைவதெங்கே?
      இப்போகம் விளைந்திடவே
     இன்னருள் புரியாயோ?

     பெருகிடும் கண்ணீரில்
     உருகாதோ உந்தனுள்ளம்?
     நெல்விளையும் நிலங்களிலே
      கல்லறுக்கும் நிலைதகுமோ?
      கரையட்டும் கல்நெஞ்சம்-நின்
     கருணை மழையாலே!


                            -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி:கூகிளுக்கு நன்றி!

சனி, 10 நவம்பர், 2012

நலம் தருவாய் நரசிம்மா!-காரஞ்சன்(சேஷ்)



 நலம் தருவாய் நரசிம்மா!

அகந்தைக்கிழங்கை அழித்திடவோ
நகத்துடனும், சிங்கமுகத்துடனும்
நான்காம் அவதாரமென
நரசிம்மா நீ உதித்தாய்!

அகத் தாமரையில்
அமரவைத் துன்னை
அனுதினம் துதித்தவனின்
துயரினைக் களைந்திட
வானளந்த திருவுருவே
தூணினுள்நீ உதித்தனையோ!

தோன்றிய நாள்முதலாய்
தொடர்ந்து வரும் துயரம்
‘மா’வினுள் வண்டினைப்போல்
மனதுள்ளே வளருதப்பா!
பாதமலர் பற்றிநின்றேன்
பரந்தாமா துயர் களைவாய்!

வேதநெறி அறியேன்!
ஓதும் விதியறியேன்!
சாத்திரம் அறியேன்!
சாற்றுமுறை நானறியேன்!
அரிநாமமொன்றேதான்
அறுதுயர் களையுமென
போற்றித் துதிக்க வந்தேன்
ஏற்று எமக்கருள்வாய்!

நாவால் நின்திருநாமம்
நம்பி நவில்பவர்க்கு
நல்வினைகள் சூழ்ந்தென்றும்
நலம்பலவும் பெருகாதோ?
 
உதிக்கின்ற கதிரொத்த
உன்பார்வை பட்டாலே
பனிவிலகல் போலெந்தன்
பாபங்கள் விலகாதோ?
சங்கொடு சக்கரமும்
என்றுமிடர் அகற்றாதோ?
 
மன்னுபுகழ் மாயவனின்
மனங்குளிரச் செய்பவளே!
உலகளந்த திருவடியின்
உயர்மடியில் அமர்ந்தவளே!
செங்கமலக் கண்களினால்
சினம்தணியச் செய்பவளின்
அருட்பார்வை பட்டாலே
அகலாத துயருமுண்டோ?
 
அகிலத்தைக் காத்திட
ஆராய்ந்து அருள்பவனே!
படைப்புகள் அனைத்துள்ளும்
படைத்தநீ உறைகின்றாய்!
பிறவித்துயர் களைய-நின்
அருட்பார்வை அருளாயோ?
 
நரசிங்கா நின்நாமம்
நாவால் துதிப்பவர்தம்
எண்ணத்தில் உறைந்து
ஏற்றம் அருள்பவனே!
வாடி வருவோர்க்கு
ஈடில்லா பெருமகிழ்வை
என்றும் அருள்வாயே! 

தேரேறும் நின்னருளால்
நீரேறி நெல்விளையும்
பூவரசங் குப்பமுறை
புண்ணியன் நின்நாமத்தை
எண்ணித் துதிப்போர்க்கு
என்றுமினி துயருமிலை!

-காரஞ்சன்(சேஷ்)

 

வியாழன், 8 நவம்பர், 2012

அந்த மஞ்சள் நிறத்தவள்!....


இந்தச் சிறுவீட்டில்
இனிநனைய இடமுமில்லை.!
எவ்வளவு நேரம்தான்
அடுப்படியில் நான்
அடைந்து கிடப்பது?

அடுப்படியில் இருந்தால்
அடிவயிறு பசிக்காதா?
கடித்த துணி கிடக்க-எலி
காணாமற் போனதெங்கே?
கிடைத்தால் ஒரேஅடிதான்!
 
கிளியை வளர்த்தா
என் கையில் கொடுப்பார்கள்
என வெறுத்து வெளிவந்து
மரத்தடியில் பதுங்கிற்று-அந்த
 மஞ்சள் நிறப் பூனை!
          






-காரஞ்சன்(சேஷ்)

புதன், 7 நவம்பர், 2012

மாற்றம் தரும் மருந்தாவோம்! -காரஞ்சன்(சேஷ்)




மாற்றம் தரும் மருந்தாவோம்!


வாழ்விக்கும் மருந்திற்கும்
வாழ்நாள் வரையறுத்தோம்!

காலனின் ஓய்வினில்
கழிகிறது நம்வாழ்வு!

நற்சிந்தனைகளை
நாளும் விதைத்து
ஏற்றம் பெருக்கிட-மன
மாற்றம் தரும்
மருந்தாய் விளங்கிடுவோம்!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

திங்கள், 5 நவம்பர், 2012

முதியோர் இல்லம்!-காரஞ்சன்(சேஷ்)

 
முதியோர் இல்லம்!

முதியோர் இருக்கும்
இல்லங்கள் பெருகட்டும்
முதியோர் இல்லங்கள்
பெருகாமலிருக்க!

-காரஞ்சன்(சேஷ்)


பட உதவி:கூகிளுக்கு நன்றி!

ஞாயிறு, 4 நவம்பர், 2012

வாரீரோ குருவிகளே!=காரஞ்சன்(சேஷ்)


வாரீரோ குருவிகளே! 
 
ஓலைகளில் கூடுகட்டி
ஒலியெழுப்பும் குருவிகளே!
எட்டாத பனைமரத்தில்
கட்டிவைத்தீர் பலகூடு!
 
வறுமையின் வரவுக்கு
வாசல்கள் திறந்திருக்கும்
வட்டக் குழாயொன்றே
வசித்திடும் எம்வீடு!
 
சிறகடிக்கும் பருவத்தில்
வறுமையெனும் சுமையை
வைத்திட்டார் எந்தலையில்
உந்தலையில் பனங்காய்போல்!
 
பள்ளிச்  சீருடைதான்
பண்டிகைக்கு உடையென்பார்!
ஆடையுடன் பிறந்தநீர்
அறிவீரோ எம்துயரை?
 
இருந்தவை இல்லையெனில்
இருப்போர்க்குப் பெருந்துயரம்!
இல்லை யென்பதொன்றே
இல்லாதார் படும்துயரம்!
 
வாழ்க்கை வரைபடத்தில்
வறுமைக்கும் கோடு உண்டு!
இல்லாதோர்க்கு- அது
எட்டிடா உயரத்தில்!
 
இருப்பவர் கண்களுக்கோ
இ(ர)றக்கக் கோணத்திலும்-அது
எட்டாத தூரத்தில்!
 
வறுமைத் தளையறுந்து-எம்
வாழ்வுநிலை உயர்ந்திடவே
வாழ்த்திப் பாடிட இங்கு
வாரீரோ குருவிகளே!
 
-காரஞ்சன்(சேஷ்)
 
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
 


வெள்ளி, 2 நவம்பர், 2012

விட்டுப் பிரியாதே சிட்டுக்குருவியே!-காரஞ்சன்(சேஷ்)

விட்டுப் பிரியாதே சிட்டுக்குருவியே!             

கதவினைத் திறந்துவைத்து
காத்திருப்பேன் அனுதினமும்
உதிக்கின்ற கதிரவனொடு
உன்னையும் காண்பதற்காய்! 

காத்திருந்தாயோ?- நீயும்
கதவுகள் திறந்திடவே!
விரைந்து நுழைகிறாய்
வீட்டிற்குள் துணிவுடனே!
  
 
தரையில் இரைத்துவைத்தேன் 
தானியங்கள் சிலவற்றை!
தத்திநடந்தே அவற்றைக்
கொத்தித் தின்கிறாய்! 
 
              ஓரமாய் நான்
              உட்கார்ந்திருந்தாலும்
             விர்ரென்று எனைச்சுற்றி
              விரைந்து பறக்கின்றாய்!

மின்விசிறி ஓரமாய்
               மேலேநீ பறப்பதனால்
புழுக்கத்தையும் உனக்காகப்
பொறுத்துக் கொள்கிறேன்!

கண்ணாடியில் உன்முகத்தைக்
கண்டுஏன் கொத்துகின்றாய்!
துணையைக் கவர்ந்ததாய்
தோன்றியதோ உந்தனுக்கு! 
                
                 சுற்றும் உன்னுடனே
சுற்றவைத்தாய் என்மனதை!
அலைபேசி கதிர்வீச்சால்
அருகிடுதாம் உந்தன் இனம்!          
                                                                                
விழிப்புணர்வு ஏற்படுத்த      
விழைந்த சிறுவர்கள்             
ஒருங்கிணைந்து நின்று
உண்டாக்கினர் உன்னுருவம்!
 
வாழையடி வாழையாய்
வாழ வகைசெய்வோம்!
உன்குரல் ஒலிப்பினிலே--நாளும்
உலகம் விழிக்கட்டும்  !     
                                     -காரஞ்சன்(சேஷ்)
 
படங்கள்: காரஞ்சன்(சேஷ்) மற்றும்தினமலர்

வியாழன், 1 நவம்பர், 2012

ஆதலின் மழையே!-காரஞ்சன்(சேஷ்)



 
ஆதலின் மழையே!


பெய்யாமல் பொய்த்த
பருவழை-இவ்வாண்டு
பொய்க்காமல் பெய்ய
புயலொடு வந்ததுவோ?

நீலமெனும் பெயர்பெற்று
நிலைகொண்டது புயலொன்று!

 “நீலம்” தீண்டியதால்
நிறம் மாறிய வானம்
ஓயாமல் மழையென
உகுத்தது கண்ணீரை!

 கார்மேகம் முழுவதையும்
கடத்தியது சுழற்காற்று!
உடைந்தழுத மேகத்தால்
உண்டாச்சு அடைமழையும்!

சூழ்ந்த மழைநீரால்
பாழாகும் பயிர்கள்பல!
வீழ்ந்த கம்பங்களால்
விடைபெற்றது மின்சாரம்!

சாலைகளை அடைத்தன
சாய்ந்த பெருமரங்கள்!
அல்லலுடன் மக்கள்
அடைந்தனர் வீட்டிற்குள்!
 
"தானே" அளவிற்குத்-துயர்
தரவில்லை என்றாலும்
கரைகடக்கும் வரையில்
கலக்கமுற வைத்த புயல்!

மண்ணுக்கு அமுதம்
மழைத்துளி யாகும்!
விண்பொய்த்தாலோ
வியனுல கில்லை!
அளவில் மிகுந்திடின்
அமுதமும் நஞ்சே!
 
ஆதலின் மழையே....
அளவுடன் நல்கி-புவி
வளம்பெறச் செய்வாய்!
                                            -காரஞ்சன்(சேஷ்)