திங்கள், 30 ஜனவரி, 2012

காத்திருப்பு! -காரஞ்சன்(சேஷ்)


காத்திருப்பு!

வாழ்வில் மனிதருக்கு
வகைவகையாய்க் காத்திருப்பு!

ஐயிரண்டு மாதங்கள்
அன்னையாகக் காத்திருப்பு!

பிஞ்சுமொழி கேட்க
பெற்றவர்கள் காத்திருப்பு!

சிறந்த பள்ளி சேர
சிறுவர்கள் காத்திருப்பு!

முடிவடைந்த தேர்வின்
முடிவுக்குக் காத்திருப்பு!

தொடர்ந்து பயின்றிட
துறைதேடிக் காத்திருப்பு!

உற்ற பணிதேடி
கற்றவர்கள் காத்திருப்பு!

வாய்த்த பணியில்
உயர்வுபெறக் காத்திருப்பு!

கடமையில் தவறினால்
கட்டாயக் காத்திருப்பு!

விருப்ப ஓய்வுபெற
விண்ணப்பித்துக் காத்திருப்பு!

பணிப்பெண்ணின் வருகைக்கு
பாவையர்கள் காத்திருப்பு!

வளர்ந்த மக்கட்கு
வரன் தேடிக் காத்திருப்பு!

வஞ்சி நெஞ்சம்புக
வாலிபர்கள் காத்திருப்பு!

கண்டு களிப்படைய
காதலர்கள் காத்திருப்பு!

அரசியல்வாதி பலர்
அணிமாறக் காத்திருப்பு!

எதிர்வரும் தேர்தலுக்காய்
எதிர்க்கட்சி காத்திருப்பு!

வறியவர்கள் வாழ்வில்
விடியலுக்குக் காத்திருப்பு!

வெளிநாடு செல்ல
'விசா' வரக் காத்திருப்பு!

ஆடல் மகளிர்
அரங்கேறக் காத்திருப்பு!

தொடுத்த வழக்குகள்
துவக்கம் பெறக் காத்திருப்பு!

நிறைவுற்ற வாதத்தின்
நீதிபெறக் காத்திருப்பு!

விருப்பத்திற்கேற்ற
வீடமையக் காத்திருப்பு!

வாகான வானிலைக்கு
வலைஞர்கள் காத்திருப்பு!

விளையும் நெல்லறுக்க
விவசாயி காத்திருப்பு!

படைப்புகளை வெளியிடவே
படைப்பாளி காத்திருப்பு!

திருநாளைக் கொண்டாட
திட்டமிட்டுக் காத்திருப்பு!

வாழ்ந்து முடித்தவர்கள்
வான்செல்லக் காத்திருப்பு!

காத்திருந்து காத்திருந்து
காலம் பலகழித்தோம்

காலமும் கடலலையும்
காத்திருப்பதில்லை-ஏனோ?

                                                             -காரஞ்சன்(சேஷ்)

பட உதவிக்கு தினமலருக்கு நன்றி

ஞாயிறு, 29 ஜனவரி, 2012

பாகிஸ்தானின் உலக சாதனையை முறியடித்த நெல்லை பெண்!!!

நண்பர்களே! உலக சாதனை நிகழ்த்திய இப்பெண்ணைப் பற்றி என் நண்பர் தன் முக நூலில் தெரிவித்திருந்தார்! அதை அப்படியே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.நாமும் பாராட்டலாமே!

ฬђเรtlє ๒l๏ฬєг
 
பாகிஸ்தானின் உலக சாதனையை முறியடித்த நெல்லை பெண்!!!

ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சாதனைக்குத் தயாராகும் விசாலினி - சந்தேகமின்றி இந்தியாவின் விடிவெள்ளிதான்!

வயது பதினொன்று(பிறந்த தேதி:23.05.2000). IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை.கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இந்தியாவென்பதால்தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லை. இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.

வயதிற்கேற்றார்போல் சைக்கிள் ஓட்டுவதும், கார்ட்டூன் பார்ப்பதும் இவள் பொழுதுபோக்கென்றாலும், இவள் படைத்துள்ளது இமாலய சாதனை. கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெற இவள் வயது காணாதாம். ஆம், பதினான்கு வயது நிறைவடைந்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெறுமாம். இந்த வயதிலேயே, பள்ளிப்படிப்பிலும் இருமுறை இவள் தாவியுள்ளாள். ஆமாம், இரண்டுமுறை இவளுக்கு கிடைத்துள்ளது டபுள் புரமோசன்.

கல்லூரியில் பயிலும் B.E., B.TECH மாணவர்களுக்கு கணினிப்பிரிவில் உரையாற்றும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ளாள். சமீபத்தில் மங்களூரிலுள்ள NITMல் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் (INTERNATIONAL CONFERENCE), விசாலினிதான் சிறப்பு அழைப்பாளர். அதில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்களும் விசாலினியின் அறிவுத்திறனைக் கண்டு வியப்புற்றுள்ள்னர்.

15.12.2011 அன்று ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட்ட பாராட்டு சான்றுடன் விசாலினியின் பாட்டி,அம்மா மற்றும் விசாலினி. இத்தனை சாதனைகள் படைத்துள்ள இந்தக் குழந்தை சிறு வயதில் பேச, சற்றே சிரமப்பட்டிருக்கிறது. அக்குழந்தையின் தாய் திருமதி.சேதுராகமாலிகா, மருத்துவர் ஒருவர் அளித்த ஆலோசனையின்படி, அந்தக் குழந்தையுடன் இடைவிடாது அளவளாவியதின் பலன், அடுத்த ஒன்பது மாதங்களில் விசாலினியின் பேசும் திறனை பெருகச்செய்தது. இன்று உலகமே விசாலினியின் திறனைக்கண்டு வியந்துகொண்டிருக்கிறது.

உலக சாதனை படைத்துள்ள இந்த குழந்தையின் தந்தை திரு.கல்யாண குமாரசாமி ஒரு எலக்ட்ரிசியன். அவரது குழந்தை படைத்துள்ள சாதனைகள் இதோ:

MCP (Microsoft Certified Professional)
CCNA (Cisco Certified Network Associate),
CCNA Security(Cisco Certified Network Associate Security),
OCJP (Oracle Certified Java Professional).

CCNAவில் இவள் பெற்ற மதிப்பெண் 90 சதவிகிதம். இதுவும் ஒரு உலக சாதனைதான்.மங்களூரிலுள்ள NITயும், திருவில்லிபுத்தூரிலுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றும் விசாலினியை தங்கள் கல்லூரியில் சேர அழைத்தும் இவர் பெற்றோர்கள், இன்னும் சில ஆண்டுகளுக்கு, இந்த இளம் அறிவாளியை, கல்லூரி வாழ்க்கைக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடவில்லை.பாகிஸ்தானில் உள்ள பன்னிரண்டு வயது மாணவர் இரிடிசா ஹைதரின் சாதனையை பத்து வயதில் முறியடித்து THE YOUNGEST CCNA WORLD RECORD HOLDER என்ற உலக சாதனை படைத்துள்ளார்.

உலகமே இந்தக் குழந்தையின் சாதனைகளை உற்றுப்பார்க்கும் இந்த நேரத்திலும்,உள்ளூரில் இன்னும் இந்த குழந்தையை உச்சி முகர்ந்து பார்க்கவில்லையென்பதே இவள் பெற்றோரின் ஆதங்கம். ஆம் நம் மத்திய, மாநில அரசுகளின் பார்வை இந்த உலக சாதனையாளர் மீது இன்னும் படவில்லை.பதிவுலகில் குவியும் பாராட்டுக்களாவது, இந்தத் தெய்வக்குழந்தையை உலக அரங்கிலும், உள்ளூரிலும் உச்சத்திற்குக் கொண்டு செல்லட்டும்.

வேண்டுகோள்:1) ஒரு இந்திய்ர்,அதிலும் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்த சிறுமியின் சாதனை உலகறியச் செய்திட, முடிந்தவரை

2)விசாலினியின் இ-மெயில் ஐ.டி: visalini2000@gmail.com. இதற்கு நம்மாலானது, ஒரு பாராட்டு மெயிலை அனுப்பி அப்பெண்ணை ஊக்குவிக்கலாமே!

பாராட்டுமடல்- காரஞ்சன்(சேஷ்)
வியக்கவைக்கும்
விசாலஅறிவு-விசாலினிக்கு!
 பதினோரே வயதில்
உலகச் சாதனையை
ஓசையின்றி நிகழ்த்தியுள்ளாய்!

பேசும் திறன் வளர
பெற்றவள் முயன்றாள்!
கற்றோர் உன்திறம் புகழ
கண்டுளம் குளிர்ந்தாள்!

தமிழ்மண் உன்னால்
தலைநிமிர்ந்து நிற்கிறது!
உயர்ந்த மதியோரை
உலகறிய நாளாகும்!
ஊக்கமுடனே
உன்முயற்சி
தொடரட்டும்!

ஈரெழு வய்தில்தான்
ஏற்றிடுமாம் கின்னஸ்!
சாதிக்க வயதில்லை
சான்றாய் நிற்பவள்-நீ!
சாதிக்கப் பிறந்தவளின்
சாதனைகள் வளரட்டும்!
பெற்றோர் நெஞ்சம்
பெருமகிழ்வு அடையட்டும்!
ஈடில்லாப் புகழோடு
நீடுவாழ வாழ்த்தும்
                                              -காரஞ்சன்(சேஷ்)

வியாழன், 26 ஜனவரி, 2012

விழுந்ததும் எழுந்திரு!-காரஞ்சன் (சேஷ்)

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல
விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

வீழ்ச்சி என்பது
எழுச்சியின் தொடக்கமே!

சரித்திரம் சொல்லும்
சான்றுகள் உண்டு!

ஒவ்வொரு சுற்றிலும்
விழுந்ததும் எழுந்தே
காலம் காட்டும்
கடிகார முட்கள்!

வீழ்ந்தெழும் அருவியால்
விளைவது மின்சாரம்!

வீழ்ந்ததும் எழுந்திடும்
விரிகடல் அலையும்!

வீழ்ந்த வித்தும்
விளைந்தெழும் விருட்சமாய்!

குறுநடை பயில்கையில்
குழவிகள் விழுந்தெழும்!

இரவின் வீழ்ச்சி
எழுந்திடும் விடியலாய்!

மற்போர் புரிகையில்
வீழ்ந்தவர் விரைந்தெழ
வெற்றி கிட்டிடும்!

வலையைப் பின்ன
விழுந்து பலமுறை
எழுந்த சிலந்தியின்
வீழ்ச்சியும் எழுச்சியும்
வித்தாய் அமைந்தது
வீரன் புரூசுக்கே!

செவிவழி வீழ்ந்த
கருப்பொருள் இன்று
சிந்தையில் எழுந்தது
சிறிய கவிதையாய்!

எனவே மனிதா!
வீழ்த்தியோர் வியக்க
விரைந்தெழுந்திடுவாய்!

                                                    -காரஞ்சன்(சேஷ்)

வெள்ளி, 20 ஜனவரி, 2012

"தானே"...உன்னால்தானே!- காரஞ்சன்(சேஷ்)

நண்பர்களே!
புதுவையும், கடலூர் மாவட்டமும் "தானே" புயலால் பாதிக்கப்பட்டுள்ளன.  பாதிக்கப் பட்டவர்களின் வேதனையின் வெளிப்பாடே இக்கவிதை.

வருஷ முடிவினிலே
வந்தடிச்ச புயக்காத்தால்
பச்சைப் பசும்போர்வை
பாழாகப் போயிடுச்சே!

வாழ்விலும் புயலாகி
வளங்களை அழிச்சிடுச்சே!

இராவிலே வந்தடிச்ச 
இராட்சச புயலாலே
குடிசைகளில் கூரையில்ல!
குந்த இடமுமில்ல!


ஒட்டி ஒட்டி சேர்த்து
ஓட்டு வீடாக்கிவச்சா
எட்டி உதைச்சு அதை
ஏன் நொறுக்கிப் போட்டிருச்சோ?

காத்து நின்னுபோனா- மனுசன்
கதைமுடிவு எம்பாங்க!
காத்தே வந்து எங்க
கதைமுடிச்ச தென்னசொல்ல!

பல தலைமுறைகள்
பார்த்த மரங்களெல்லாம்
ஆணி வேரறுந்து
அடியோடு சாய்ந்திடுச்சே!

முன்னோர்கள்வச்ச தென்னை
முன்னேற வைத்ததென்னை!
தானேவின் தாண்டவத்தால்
தரைமீது வீழ்ந்ததென்ன!

தப்பிய மரங்களின்
தலையெல்லாம் தென்மேற்காய்
திருப்பி விட்ட புயல்
திசைகாட்ட செய்ததுவோ?

முப்பது வருஷத்துக்கு
முந்திரி பலனளிக்கும்!
முந்திரிக்கொட்டை புயல்
அத்தனை மரங்களையும்
அடியோடு அழிச்சுடுச்சே!
எந்திரிக்க விடாமல்
எங்களை அடிச்சுடிச்சே!

அழிந்த மரங்களை
அப்புறப் படுத்திடவே
ஆயிடும் பல இலட்சம்!

இப்பவே மரம் வச்சும்
எங்களுக்கு பலனில்லே!
அடுத்த தலைமுறைதான்
அதனால பயனடையும்!

பணப்பயிர்கள் பாழாகி
மணவாழ்வும் தடையாச்சு!
மரங்களை மட்டுமல்ல
மனசொடிச்சும் போட்டுடுச்சி!

முக்கனி மரங்களெல்லாம்
முழுவதும் வளர்த்து
எக்காலத்துல இனி
எம்மூர் புகழ்பெறுமோ?

ஊற்று நீராலே
ஊர்க்கிணறு நிறைஞ்சகதை
பார்த்து மகிழ்ந்தே
பல வருஷம் ஆயிடுச்சி!

 நிலத்தடி நீர்மட்டம்
நெடுந்தொலைவு போனதனால்
நீர்மூழ்கி மோட்டரினால்
நீரெடுத்து குடிக்கும்நிலை!

மின்சாரத் தேவைகளும்
மிகவாச்சி இல்வாழ்வில்!
அரை இலட்சம் கம்பங்கள்
அடியோடு சாய்ஞ்சதனால்
தடையாச்சு மின்சாரம்

குடிக்க நீர் தேடி
பட்ட துன்பம் பலமடங்கு!

சாலை வழிகளையும்
சாய்ந்தமரம் அடைச்சிருச்சி!
இப்படியொரு புயல்காத்த
இதுவரைக்கும் பாத்ததில்லை!

வாழ்க்கைமுறை மாறி
சூழல் கெடுவதினால்
கண்டிக்க இயற்கை
காட்டியதில் ஒருமுகமோ
ஆட்டிவைத்த பேய்க்காத்து?

இயற்கையே உன்முனனே
எள்ளளவு நாங்களெலாம்!
அடிக்கடி நீ அடித்தால்
ஆரிடம் போய் அழுவோம்?
மாறிவிட்டோம் மனதளவில்
மன்னித்து அருளிவிடு!

அள்ளி அரவணத்து
ஆறுதலைத் தந்துவிடு!
வளங்களை அளித்து -இனி
வாழவகை செய்துவிடு!
     
                                                  -காரஞ்சன்(சேஷ்)
பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி

வியாழன், 12 ஜனவரி, 2012

பொங்குக பொங்கல்! -காரஞ்சன்(சேஷ்)

 பொங்குக பொங்கல்!

சுழலும் உலகிற்கு
உழவே அச்சாணி!

தலையாய உழவர்க்கு
தைத்திங்கள் திருநாள்!

தென்னகத்து உழவன்
தன்னகத்தே கொண்ட
நன்றியெனும் உணர்வை
நவிலும் நாள்-பொங்கல்!

அறுவடைத் திருநாளாய்
அமைந்திடுமே பொங்கல்!

கதிரால் கதிர் விளைக்கும்
கதிரவனின் கருணைக்கு
புத்தரிசிப் பொங்கலிட்டு
புகன்றிடுவான்- நன்றி!

மெழுகிய முற்றந்தனில்

மாவிலைத் தோரணங்கள்!
மாக்கோல ஓவியங்கள்!

செங்கற்கள் அடுப்பாக
செங்கரும்பு உடன் நிற்க
பொன்மஞ்சள் கழுத்தோடு
புதுப்பானை- பொங்கலிட!

பொங்கிவரும் பாலுடனே
புத்தரிசி பானைபுக
புதுவெல்லம் உடன்சேர

பொங்கி வரும் வேளை
"பொங்கலோ பொங்கல்!"என
மங்கல ஒலிஎழுப்பி
மகிழ்ந்திடுவீர் அனைவருமே!

மங்கலம் பொங்கி
மனைநலம் சிறக்கட்டும்!

நம்பிக்கை மெய்யாகி
நற்பயன்கள் நல்கட்டும்!

விளைந்த பொருளனைத்தும்
விலையாகிப் பயன்தரட்டும்!

இயற்கையின் சீற்றம் இனி
இல்லை யென்றாகட்டும்!

காளையரும் கன்னியரும்- மண
நாளை எதிர் காணட்டும்!

உழவர்தம் வாழ்வு
ஒளிமயமாய்த் திகழட்டும்!

இனிவரும் நாளெல்லாம்
இன்பமாய் அமையட்டும்!

                      பொங்கலோ பொங்கல்!
                  -காரஞ்சன்(சேஷ்)
        படங்கள்: உதவிக்கு கூகிளுக்கு நன்றி                     

திங்கள், 9 ஜனவரி, 2012

புகையிலா போகி - காரஞ்சன்(சேஷ்)

 புகையிலா போகி!
பழையன போக்குதலை
பகர்கின்றோம்  'போகி'யென!

தேவையற்ற பொருட்களே- தன்
தேவையென ஒரு தொட்டி
தெருக்களில் இருக்கையிலே
இருளகலும் வேளையிலே
எரிப்பதனால் எழும்புகையால்
ஏன் சூழல் கெடவேண்டும்?

மனிதருக்குப் பலநோய்கள்
மாசடைந்த காற்றாலே!
புவிவெப்பம் அதிகரிக்கும்
புகைநஞ்சே நம்பகையாம்!

வருங்கால வாழ்வு
வளமாக அமைந்திடவே
புகையற்ற போகிதனை
புவிகாண ஒத்துழைப்போம்!
                                                           -காரஞ்சன் (சேஷ்)

பொங்கல் திருநாளின் முதல்நாளை போகி என்றழைக்கிறார்கள். இந்நாளில் பழைய பொருட்களை தீயிட்டு எரிக்கிறார்கள். பெரு நகரங்களில் கூட பழைய துணிமணிகள், டயர்கள்,பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை அதிகாலைப் பொழுதில் எரித்து, காற்று மண்டலத்தை மேலும் மாசடையச் செய்கிறார்கள். மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வளமான சூழலை உருவாக்க முயல்வோம். புகையிலா போகியைக் கொண்டாடி மகிழ்வோம்!

அன்புடன்
காரஞ்சன்(சேஷ்)

பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி

புதன், 4 ஜனவரி, 2012

"தானே" வும் தாத்தாவும்- சிறுகதை-காரஞ்சன்(சேஷ்)

                                                   "தானே" வும் தாத்தாவும் - சிறுகதை
தொலைக்காட்சியும் வானொலியும் தானே புயலின் வருகை பற்றி மாலை முதலே செய்தி வெளியிட்ட வண்ணம் இருந்தன. கடந்த இரு நாட்களாகக் குளிர்க் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த என் தாத்தா தனக்குத் தானே ஏதோ கூறிய வண்ணம் பேண்ட்டை எடுத்து அணிந்துகொண்டார். குளிரின் தாக்குதலிலிருந்து தப்பிக்க, பனியன் அதன்மேல் ஒரு டி-ஷர்ட், அதன்மேல் ஒரு முழுக்கை சட்டை என அணிந்து கொண்டார். மப்ளர் ஒன்றை எடுத்து முண்டாசுக் கவியை நினைவு படுத்தும் விதமாகத் தலையில் கட்டிக் கொண்டார். எத்தனையோ கூட்டங்களில் போர்த்திய சால்வைகள் இப்போதாவது பயன் தருகின்றனவே என்றெண்ணியபடியே ஒன்றை எடுத்து தோளைச் சுற்றிப் போர்த்திக்கொண்டார்.

புயற்காற்று புறப்பட்டு வருவதற்குள் யாராவது ஒரு மருத்துவரைப் பார்த்து மருந்துகள் வாங்கிவரவே இத்தனை ஏற்பாடு. பழகிய ஆட்டோக்காரரை வரவழைத்து தாத்தாவும் நானும் கிளம்பினோம். பெரும்பாலான கடைகளும், கிளினிக்குகளும் அடைமழைக்கு அடைபட்டுப்போயிருந்தன. திறந்திருந்த கிளினிக் ஒன்றின் வாசலில் ஆட்டோ நின்றது. பத்துப் பதினைந்து பேர் உட்கார்ந்திருந்தார்கள். உதவியாளரிடம் , "தாத்தாவிற்கு குளிர் ஜுரம் அதிகமாக உள்ளது. டாக்டரைப் பார்க்க வேண்டும். டோக்கன் ஏதாவது வாங்கவேண்டுமா? " எனக் கேட்டேன். உதவியாளரோ, பத்து நாட்களுக்கு முன்பே பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்தவர்களே காத்திருக்கிறார்கள். அவர்கள் பார்த்து முடித்தவுடன்தான் நீங்கள் பார்க்கமுடியும் என்றார். தாத்தாவோ "சரிதான் குளிர் ஜுரம் என்ன நாள் குறித்துவிட்டா நம்மை வந்து தாக்குகிறது? தானே புயலுக்காவது வானிலை அறிக்கை வருகையை அறிவிக்கிறது" என வருத்தத்துடன் வரிசையில் அமர்ந்தார்.

ஒரு மணிநேரத்திற்குப் பிறகு டாக்டரைப் பார்த்து தன் உபாதைகளை வரிசைப் படுத்தினார் தாத்தா. ஒவ்வொரு உபாதைக்கு ஒரு மாத்திரை வீதம் எழுதி முடித்தவுடன் தும்மல், இருமல் இருக்கிறதா? எனக் கேட்டார் டாக்டர். இல்லை என்றவுடன் பட்டியல் நிறைவுற்றது. மருந்துகள், பிரட்பாக்கெட்களை வாங்கிக் கொண்டு,வந்த ஆட்டோவிலேயே திரும்பினோம். மழை வலுத்திருந்தது. காற்றின் வேகம் சற்றே கூடியிருந்தது. பாதாள சாக்கடைக்காகத் தோண்டிய பள்ளங்களில் ஏறி இறங்கி எல்லாவித நடனங்களையும் ஆடியபடி வழியில் செல்வோர் மீது சந்தனமாய் செம்மண் குழம்பைத் தெளித்தவண்ணம் வந்தது எங்கள் ஆட்டோ. இறங்கி வீட்டிற்குள் நுழைய விரித்த குடையைப் பறிக்க முயன்றது காற்று. ஆட்டோக்காரருக்கு நன்றி கூறி வீட்டிற்குள் நுழைந்தோம். ரொட்டித் துண்டுகளை உண்டு மாத்திரைகளை எடுத்துக்கொண்ட தாத்தா அதன் தாக்கத்தில், தூக்கத்தில் மூழ்கினார். வேகம் காட்டிய காற்றால் விடைபெற்றது மின்சாரம். நானும் சற்றுக் கண்ணயர்ந்தேன்.

நள்ளிரவு ஒருமணிக்குமேல் திகிலான காட்சிகள் அரங்கேறின.பாறைகளின் மீது கடலலைகள் வேகமாக மோதுவதுபோல் காற்றோடு மழையின் சத்தம் பயமுறுத்தியது. தாத்தாவும் கண்விழித்தார். பத்து வீட்டுப் பால் குக்கர்கள் ஒரே நேரத்தில் ஒலியெழுப்புவதுபோல் "உஷ்" என்றொரு பெரும் சத்தம். பல கதவுகள் தாழிடப்பட்ட போதிலும் தட் தட் என அடித்துக்கொண்டிருந்தன. ஜன்னல் கதவுகளிலும் பற்கள் கிட்டுவதுபோல் பட் பட் என்றொரு ஒலி!. படுக்கை அறை கடிகாரம் டிக் டிக் என்று ஒலிப்பதற்கு பதில் திக், திக் என ஒலிப்பது போலிருந்தது. தாழிட்ட ஜன்னல் ஒன்று "தானே"வின் தயவால் தானே திறந்து கொண்டது. மூச்சு விடாமல் கபடி விளையாடிய காற்று, மழையை  வேகமாக வீட்டிற்குள் விரட்டியது. சன்னல் ஓரத்தில் உலர்த்தியிருந்த குடை வேகமாக மேலெழும்பி வாமன அவதாரம் பாராசூட்டில் பறந்து வ்ந்திறங்குவதுபோல் ஏறி ஏறி இறங்கி வீட்டின் உயரத்தை அளக்க முயன்றது. கதவைச் சாத்து- காற்று வந்துவிட்டதே எனக் கத்தினார் தாத்தா. காற்றுக்கும் எனக்கும் கதவிழுக்கும் போட்டியில் ஒருவழியாக ஜெயித்து கதவை இழுத்துக் கயிற்றால் கட்டினேன். இந்த நேரத்தில் அக்கம் பக்கம் வீட்டிலிருந்த பொருட்கள் சில மார்கழியில் எங்கள் முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர்பாடி நின்றன.

காற்றின் வேகம் மேலும் கூடி கதவிடுக்குகள், உமிழ்நீரை உமிழ்வதுபோல் மழைநீரை உமிழ்ந்து வீட்டிற்குள் வழிந்தோடச் செய்தன. பழந்துணிகள் கொண்டு கதவிடுக்குகளை  அடைக்க பழந்த்துணிகளைக் கட்டி வைத்த மூட்டையைக் கண்டெடுத்துப் பிரித்தோம். பிரித்தவுடன், "விடுதலை, விடுதலை" என விரைந்த கரப்பான் பூச்சிகள் நள்ளிரவில் தாம்  பெற்ற சுதந்திரத்தை எங்கள் மீது ஏறி விளையாடி எழுச்சியுடன் கொண்டாடியதில்
திண்டாடி விட்டோம்.  ஒருவழியாக கதவிடுக்குகளை அடைத்து வீட்டிற்குள் அடைக்கலம் புகுந்த மழை நீருக்கு துணிப் போர்வைகள் போர்த்தி மேலும் ஈரமாக்காமல் காத்தோம்.

     தாத்தா இயற்கை உந்துதலைச் சமாளிக்க கழிப்பறைக்குள் சென்றதும் காற்று அதற்குள்ளேயே அவரை  சிறைபிடிக்க முயன்றது. மீண்டும் ஒரு கதவைத் திறக்கும் போராட்டம். ஜெயிலில் மாடடியவரை பெயிலில் எடுப்பது போல் ஒருவாறாய்த் தாத்தாவை மீட்ட திருப்தி.

    இனியும் உறக்கமோ? ஈதென்ன பேரிரைச்சல்?

   என்ன தாத்தா இது? இப்படிச் சுழன்றடிக்கிறதே காற்று எனக் கேட்டேன். இதுவரை இவ்வளவு வேகத்துடன் நீண்டநேரம் சுழன்றடிக்கும் காற்றை நான் பார்த்ததில்லை எனக் கூறிவிட்டு மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை சும்மா இருக்க விடுவதில்லை என எப்போதோ படித்த தத்துவத்தை நினைவூட்டினார்.

   பக்கத்திலேயே பல மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுகின்ற ஓசைகள் பயமுறுத்திய வண்ணம் இருந்தன. தகரக் கூரைகள் பெயர்ந்து பறக்க முற்பட்டு சிறகொடிந்து சிதறி பேரிரைச்சலை ஏற்படுத்தின. இடி இடித்தால் அர்ஜுனா, பல்குனா எனக் கூறுவீர்களே! இந்தப் பயமுறுத்தும் காற்றுக்கு என்ன சொல்வீர்களோ? என வினவி அவர் கைகளைப் பற்றினேன்.

  வேரோடு மரங்களைப் பிடுங்கி எறிவதால் "வீமன்" என்றழைப்பதா? வில்லொடிப்பதுபோல் வீடுகளை ஒடிப்பதால் இராமன் என்றழைப்பதா? எனச் சொல்லிக் கொண்டே புயல் பற்றிய செய்திகளை அறிய மின்கலத்தின் துணையுடன் இயங்கும் வானொலிப் பெட்டியில் பண்பலை ஒலிபரப்பை வைத்தோம். தன் பங்கிற்கு அதுவும் "உன்னைத்தானே.... தஞ்சம் என்று ..", காற்றில் எந்தன் கீதம் ... பாடல்களை ஒலிபரப்பி "தானே" புயலின் தாக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.

மன்னர்கள் காலத்தில் இது போன்ற பேரழிவுகள் ஏற்படும்போது மக்கள் என்ன செய்திருப்பார்கள்? என வினவினேன். அதற்கு தாத்தா, அன்ன சத்திரங்களிலும் ஆலயங்களிலும் மக்கள் தஞ்சம் புகுந்திருப்பார்கள் என்று கூறிவிட்டு உறுதியானக் கட்டிடத்திற்குள்ளே உறக்கமின்றித் தவிக்கிறோமே கூரை வீட்டிலிருப்பவர்களின் கதி என்ன ஆவது? என வேதனைப்பட்டார். நானும் வருந்தினேன்.

மாநிலச் செய்தியில் இன்னும் ஓரிரு மணிநேரத்தில் புயல் புதுவைப் பகுதியில் கரையைக் கடக்கும் என அறிவித்தார்கள். காற்றோ 140 கி.மீ வேகத்தில் சுழன்று அடித்து ஊரைப் போர்க்களமாக்கிக் கொண்டிருப்பதாகக் கூறினார்கள்.  மிகப் பலமான சேதம் இருக்கும் எனக் கூறிய தாத்தா நான் கூடப் புயல் தானே? என நினைத்தேன். தானே புயலோ கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறதே! தானாக அது இனிமேலாவது சீக்கிரம் கரையைக் கடக்கட்டும் எனக் கடவுளிடம்  வேண்டினார். அதை ஆமோதிப்பதுபோல் மணிகள் பொருத்தப்பட்ட பூஜை அறைக்கதவு காற்றில் பலமாக ஆடி ஒலி எழுப்பியது.

வறியவர்கள் விடியலுக்கு ஏங்குவதுபோல் நானும் தாத்தாவும் விடியலை எதிர்நோக்கிக் காத்திருக்கலானோம்!

                                               -காரஞ்சன்(சேஷ்)

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

வரம் தருவாய் புத்தாண்டே! - காரஞ்சன்(சேஷ்)

வலைப்பூ  நண்பர்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!.

                                               வரம் தருவாய் புத்தாண்டே!

ஈற்றினிலே ஈராறை
ஏந்தி வரும் புத்தாண்டே!

வாழ்த்தி உனை வரவேற்று
வரம்பெறவே விழைகின்றேன்!

இயற்கையின் சீற்றங்கள்
இனிஇல்லையென வரம்தருவாய்!

வாழ உலகினில்
வான்மழையும் வந்திற(ர)ங்கி
உறுதியான அணைகளிலே
உயர்ந்திடுக நீர்மட்டம்!

அண்டை மாநிலங்கள்
அமைதிநிலை அடைந்திடவே
உயர்த்(ந்)த உள்ளமதை
உவந்தளிப்பாய் புத்தாண்டே!

விண்ணை முட்டிட
விரையட்டும் விண்கலங்கள்!
விலைவாசிக்கும் ஏன்
விபரீத ஆசைஅதில்!
நிலையாகச் சில காலம்
நின்றிட நீயருள்வாய்!

வேடிக்கை காட்டி
விலையேறும் தங்கத்தை
ஏழையின் கரங்களையும்
எட்டிடச்செய் புத்தாண்டே!

எத்தனை முறைதான்
எரிபொருள் விலையேற்றம்?
சீரான நிலையடைய
சீக்கிரம் நீயருள்வாய்!


நித்தம் கவலையுறும்
நெஞ்சங்கள் நிறைந்திடவே
கரன்சியின் மதிப்புயர்த்திக்
காத்திடுவாய் புத்தாண்டே!

கூர்த்த மதியுடையோர்
கூறும் நல்வழியில்
அறிவியலின் ஆக்கத்தால்
அனைவரும் பயனுறவே
தடைகள் தகரும்வண்ணம்
தயைசெய்வாய் புத்தாண்டே!

நோயில் மீளப்போய்
தீயில் மாண்டகதை
திரும்பாமல் நீயருள்வாய்
திருப்பம்தரும் புத்தாண்டே!

விதிகளை மீறியதால்
விபத்துக்கள் எத்தனையோ!

உல்லாசப் படகினிலே
உயிரிழந்தோர் எத்தனைபேர்!

குடித்ததனால் பலருயிரை
குடியும் குடித்ததுவே!

தோளில் செல் அமர
காதைமேல் வைத்து
சாய்ந்த கழுத்துடனே
சாலையில் விரைகின்றார்!
கவனச் சிதறலினால்
கதைமுடிவைத் தேடுகின்றார்!

விதிமீறா மனநிலைக்கு
வித்திடுவாய் புத்தாண்டே!

பங்கு வர்த்தகத்தில்
பங்களிப்பை நீ ஆற்றி
வீழாத நிலையை
விரைந்தளிப்பாய் புத்தாண்டே!

ஊழல் ஒழிந்து
உயர்நிலை நாடடைய
ஆழ்ந்த மனத்திட்பம்
அனைவருக்கும் அருளிடுவாய்!

ஈராறு வரங்களையும்
இனிதே நிறைவேற்றி
அனைவருக்கும் நல்லாண்டாய்
அமைந்(த்)திடுக புத்தாண்டே!

                                      -காரஞ்சன்(சேஷ்)

பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி