செவ்வாய், 30 அக்டோபர், 2012

தளர்ந்த வயதில் மலர்ந்த நினைவுகள்!-காரஞ்சன்(சேஷ்)


 

தளர்ந்த வயதில் மலர்ந்த நினைவுகள்!

சிறுவயதுப் பருவங்கள் 
சிந்தையில் மலர்ந்தனவோ?

விடுமுறை நாட்களில்
விளையாடி மகிழ்ந்தகதை
நீங்காது இன்னும்
நினைவலையில் இருக்குதடி!

பூவரச இலைசுருட்டி
ப்பூ .ப்பூ ஊதிநின்றோம்!
முதிர்ந்தநுணாக் காய்களிலே
முக்கோணம் சதுரமென
தென்னங் குச்சிகளை
தேர்செய்யக் கோர்த்திட்டோம்!

உண்டாக்கிய தேரை
உவகையுடன் இழுத்திட்டோம்!
 
கல்லா? மண்ணா?வொடு
கண்ணாமூச்சி, பாண்டியென
களிப்புடன் விளையாடிக்
களைத்துத் திரும்பிடுவோம்!

 மணலில் வீடுகட்டி
மாளிகை என்றுரைத்தோம்!
எண்ணம்போல் கிறுக்கலுக்கு
ஏதேதோ பேர்வைத்தோம்!
 
காய்ந்த பனைஓலையிலே
கருவேல முள்ளிணைத்து
காற்றாடி சுற்றிடவே
கால்வலிக்க ஓடிநிற்போம்!

 பல்லாங்குழி, பரமபதம்
தாயம் இவையெல்லாம்
வெயில் மிகும்வேளை
வீட்டிற்குள் விளையாட்டு!

 திருவிழா நாட்களில்
தின்பண்டம் மட்டுமன்றி
வண்ணக் கண்ணாடியும்
வாங்கிட அடம்பிடிப்போம்!

வெள்ளரிப் பழத்தினிலே
வெல்லமும் சேர்த்துண்போம்!
வெண்ணிற நுங்குகளை
விரல்வழி உறிஞ்சிடுவோம்!

 கலந்த சோற்றிற்கு
கைநீட்டிக் காத்திருப்போம்!
வழங்கிடுவாள் அன்னை
வரிசையில் அமரவைத்து!

தும்பைப் பூத்தொடுத்து
துவளும் முறுக்குசெய்தோம்!
இந்தத் தலைமுறையில்
இவையனைத்தும் இல்லையடி!     
 
 -காரஞ்சன்(சேஷ்)
படங்கள் உதவி: கூகிளுக்கு நன்றி

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

தா! வரம்- காரஞ்சன்(சேஷ்)


                                                                          தா! வரம்!
  

தா! வரம்  தா! வரமென

வேண்டிடும் தாவரமே!

வேருக்கு நீர்பாய

வெயில் உன் கரம்பிடிக்க

பச்சையம் நிச்சயமே!


                                   -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி:கூகிளுக்கு நன்றி!

வெள்ளி, 26 அக்டோபர், 2012

த(ப)னித்தன்மை!-காரஞ்சன்(சேஷ்)





விண்ணில் மழைத்துளி
வண்ணம் காட்டும்
வானவில்லாகி
மழையெனப் பொழிந்து
வழிந்தோடி மறைகிறது!

மழையிலா மாதத்தில்
பிழையாமல் வரும்
பனித்துளியோ
தாவரங்களின் மேல்
தவழ்ந்து விளையாடி
தனித்தன்மை காட்டி
தாள் சேர்கிறது!

-காரஞ்சன்(சேஷ்)


பட உதவி: கூகிளுக்கு நன்றி!

வியாழன், 25 அக்டோபர், 2012

சுட்ட ரொட்டி!-காரஞ்சன்(சேஷ்)

                                                    
                                                             சுட்ட ரொட்டி!

அழகு மலரொன்று
அடுப்பருகில் அமர்ந்ததென்ன?
 
வாடாமலர் இங்கு
வாட்டிடுதே ரொட்டிதனை!

சொப்பு விளையாட்டில்
ஒப்புக்குச் சமையலுண்டு!
 
உண்மைச் சமையல்தான்
உந்தன் விளையாட்டோ?

எதிர்பாரா அதிர்வலைகள்
ஏன் உந்தன் கண்களிலே?
 
எரிவாயு விலையேற்றம்
இதற்குள் அறிந்தாயோ?
 
எதிர்காலந்தனை ஏற்று
எதிர்கொள்ளத் துணிந்தாயோ?
                                                  -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி:  இணையம்

புதன், 24 அக்டோபர், 2012

படைப்பு!- காரஞ்சன்(சேஷ்)

                                                       
                                                                         படைப்பு!


படைத்தவனோ….
கொடியிடைதாளா
வடிவு தந்தெம்மை
உருளவிட்டான்
தரையினிலே! 

படைப்பவனோ …
பூசை முடிவினிலே
ஓசைவர ஓங்கிஎமை
உடைக்கின்றான்
சாலையிலே!

 உடைந்தழும் என்னாலே
உருளுகின்றார் பலர்தரையில்!
உருளுகிறது எம்தலைதான்
உருள்பவரின் மத்தியிலும்!

உடைபடவா பிறந்தோம்?
உரிய இடமளித்தால்
இடருண்டோ எம்மாலே?
இக்கணமே சிந்திப்பீர்!
                                        -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி:  கூகிளுக்கு நன்றி!

உறவுகள் தொடர்கதை!- காரஞ்சன்(சேஷ்)

                                                உறவுகள் தொடர்கதை!


ஏதோ ஒரு பறவையின்
எச்சம்வழி  வீழ்ந்தவித்தில்
விளைவனதான் விருட்சங்கள்!

பரந்தடர்ந்த கிளைகளிலே
பழங்கள் நிறைந்திருக்க
பறவைகளை வரவேற்று
பசிதீர்க்கும் நன்றியொடு!

பசிதீர்ந்த பறவைகளால்
பல்கட்டும் நல்விருட்சம்!

-காரஞ்சன்(சேஷ்)

திங்கள், 22 அக்டோபர், 2012

வாய்திறவாய்! -காரஞ்சன்(சேஷ்)

                                                                 
                                                                 வாய் திறவாய்!

மரப்பொந்தே மாளிகையோ?

வாயிலில் காத்திருக்கும்
வாய்திறந்து சேய்ப்பறவை!

சேயின் பசித்துயரை
தாயன்றி யாரறிவார்?

இரையெடுத்துப் பறந்து
விரைகின்றாய் பசிபோக்க!

ஊட்டிடும் காட்சி- தாய்
உள்ளத்தின் சாட்சி!

கொண்டை அழகியே!-நீ
கொத்திச் செல்கிறாய்
மரத்தோடு மனத்தையும்!

-காரஞ்சன்(சேஷ்)

 பட உதவி: கூகிளுக்கு நன்றி!

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

நீ வருவாயென!-காரஞ்சன்(சேஷ்)

        
                                                         நீ வருவாயென!-


உறுமீன் வருமளவும்

காத்திருக்கும் கொக்கைப்போல்

உற்றதுணை நீதானென்று

உறுதியாய் நிற்கின்றேன்

ஒற்றைக்காலில்  !                                             


                               -காரஞ்சன்(சேஷ்)

வெள்ளி, 19 அக்டோபர், 2012

'ஆ' வோ! ஆவோ.. காரஞ்சன்(சேஷ்)


‘ஆ’ வோ?    ஆவோ!..
 



நடைமேடை மீதினிலே நடைபழகும் உந்தன்
அழகிய படம் கண்டு “ஆ”வென்று ரைத்தேன்!
 
வழிதவறி வந்தனையோ? வரவேற்க வந்தனையோ?
ஊட்டி உறவாடும் உன்கன்றின் சிந்தனையோ?
 
மொழியறியாத் துன்பநிலை முற்றிலும் உனக்கில்லை!
விரைவு இரயிலேற விதிஉன்னை ஏற்பதில்லை!
 
விட்டுப் பிரிந்தானோ? உனைவிற்கத் துணிந்தானோ?
கட்டிய கயிறுடனே கால்நடையாய் வந்திங்கு
எட்டிய மட்டில் யாரை நீ தேடுகிறாய்?


                                                            -காரஞ்சன்(சேஷ்)

 

வியாழன், 18 அக்டோபர், 2012

விழிப்பு!-காரஞ்சன்(சேஷ்)



விழிப்பு!



சேவலின் கூவலை
செவிமடுத்து
எழுந்தோம் அன்று!

சேவலின் கூவல்
"செல்"லில் ஒலிக்க
எழுகிறோம் இன்று!

-காரஞ்சன்(சேஷ்)

புதன், 17 அக்டோபர், 2012

இடஒதுக்கீடு!-காரஞ்சன்(சேஷ்)

                   இடஒதுக்கீடு!




மிரட்டிய  மின்னலையும்
இடித்துரைத்த இடியையும்
பொருட் படுத்தவில்லை
பூமிக்கு வந்தமழை!

இறங்கும் மழைநீர்க்கு
இடஒதுக்கீடு கோரி
அடைமழை வந்திங்கு
அடைக்கிறதோ சாலைகளை?

வந்தடையும் மழைநீர்க்கு
தந்திடுவோம் த(ங்)க்க இடம் !
வாழ்த்தி வளம்கொழித்து
வாழ்விக்கும் நம்மையெல்லாம்!

படம்: நன்றி மாலைமலர்.

செவ்வாய், 16 அக்டோபர், 2012

ஆயுள்!- காரஞ்சன்(சேஷ்)



                                                                              ஆயுள்!




ஆயுள் நீட்டிப்போ?
அடைத்திட்டார்
உனைக் கூண்டில்!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

திங்கள், 15 அக்டோபர், 2012

சங்கீதம்! -காரஞ்சன்(சேஷ்)



சங்கீதம்!





தம்மைக் காண்பவரை
தாம்காணாக் கண்களொடு
கம்பீரக் குரலுடனே
கானம் இசைக்கின்றார்!

வாழ்க்கையின் சோகம்
வழிகிறது அவர்பாட்டில்!
இளகிய உள்ளங்கள்
இடுகின்றார் சில்லரைகள்!

கைத்தட்டில் விழும்காசு
கைத்தட்டல் ஒலியாக!
அந்தகனின் செவிகுளிர
அதுதானே சங்கீதம்?


 -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

சனி, 13 அக்டோபர், 2012

வழிமேல் விழிவைத்து! -காரஞ்சன்(சேஷ்)

                                 
                                                          வழிமேல் விழிவைத்து!


ஆறுகளில் நீருமில்லை!
அதனூடே மீனுமில்லை!
ஏரிகுளம் குட்டையெல்லாம்
இருந்த இடம் தெரியவில்லை!

ஓடுகிற  மீன்களிலே
உறுமீன் வருமெனவே
காத்திருந்த காலமெலாம்
கனவாகிப் போனதிங்கே!

குறுக்குவழி இதுவென்று
கொக்குக்கும் தெரியுமய்யா!
கூடைக்கு ஒருமீனு
கொக்குக்கு மாமூலாய்
எடுத்துக் கொள்வதற்கு
ஏற்றவழி இதுதானே?

                                                      -காரஞ்சன்(சேஷ்)

பட உதவிக்கு நன்றி : இணையம்

வானும் நிலவும்! -காரஞ்சன்(சேஷ்)

வானும் நிலவும்!

 
 

வானும் நிலவுமாய்
வாழ்ந்திடுவோம்
நாம் என்றாய்!
நான் ஓடாய்த்
தேய்கையில்தான்
உண்மை புரிகிறது!

-காரஞ்சன்(சேஷ்)

Photo courtesy: Jyotsna Ramanan

வெள்ளி, 12 அக்டோபர், 2012

பனிக்கொடை -காரஞ்சன்(சேஷ்)


                                                        
                                                         
                                                              பனிக்கொடை!

காலைப்பனி என்ன
கர்ண பரம்பரையோ?

மறைகின்ற தருணத்தும்
தன்துளிகள் அனைத்தையும்
தாவரங்களின் வழியே
தாரைவார்க்கிறதே பூமிக்கு!

                                     -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

வியாழன், 11 அக்டோபர், 2012

இதயத்தில் நீ !- காரஞ்சன்(சேஷ்)

                                                       
                                                                      இதயத்தில் நீ!

முதியவளின் முகத்தினிலே
உவகைபொங்கும் காட்சி
ஊற்றெடுத்த அன்புள்ளம்
உள்ளதற்கு சாட்சி!

இருக்கின்றாய் இங்கென்று
வலக்கரத்தால் காட்டும்
இளைஞர்போல் இருக்கிறதே
முதியவரின் தோற்றம்!

அகம் குளிர்விப்பவரின்
அங்கம் குளிர்விக்க
அகழ்கிணற்றின் நீர்முகந்து
ஊற்று நீர் ஊற்று!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

செவ்வாய், 9 அக்டோபர், 2012

வீதி விளக்கு-விதிவிலக்கு! -காரஞ்சன்(சேஷ்)



விதிவிலக்கு!

இரவெலாம் விழித்து
பகலெலாம் உறங்கிடும்
தெருவிளக்கு!

இரவோடு பகலிலும்
எரிந்திடும் விளக்கோ
விதிவிலக்கு!

                                   -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி

தனிமை! -காரஞ்சன்(சேஷ்)

                                                             
                                                                    தனிமை!

எனக்குள் நீயும்
உனக்குள் நானும்
இருப்பதை உணர்ந்(த்)திடும்
தனிமை!

இருகிளி இணைந்து
பேசிடும் மொழிதனில்
எத்தனை எத்தனை
இனிமை!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: மாயவரத்தான் எம்ஜிஆர் வலைப்பூ

திங்கள், 8 அக்டோபர், 2012

நம்பிக்கைக் கீற்று! -காரஞ்சன்(சேஷ்)


                                                                 நம்பிக்கைக் கீற்று!


நாற்றங்கால் சேற்றினில்
நாற்றின் கைகளிலே நாற்று!

வறுமை வாட்டிடினும்
வற்றாது அன்பெனும் ஊற்று!

விளைநிலங்களை எல்லாம்
வீடாக்க விற்பவரைத் தூற்று!

நிலமகள் அருளென்றும்
உழவுக்கு உண்டென்று தேற்று!

வரப்புயரந்தால்  நாட்டின்
வளமுயரும்! ஓளவையின் கூற்று!

உழவன் பசியொடு
உலகிற்குச் சோறிடும் நிலை மாற்று!

உழவின் பெருமையை
உலகம் உணர்ந்திடப் பறைசாற்று!

வளம்பெறும் உழவென
உணர்த்திடும் நீயொரு நம்பிக்கைக்கீற்று!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: திருமதி சசிகலா அவர்களின் வலைப்பூ!

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

பாசமழை! -காரஞ்சன்(சேஷ்)

 
 
    விளைகின்ற நற்பயிரை 
    வெள்ளம் கொள்ளுமென
                 தோளில் சுமக்கின்ற -தாயுள்ளம்
       அன்பு வெள்ளத்தில்-அவன்
      நனைவதை அறியாதோ?
 
 

  ஊட்டி வளர்த்த உயிர்
       உறுதியாய் உள்ளவரை
   வாட்டிடும் முதுமை   
    வந்தென் செய்யுமென
    சுகமான சுமையாக   
                       சுமக்கின்றான்- சுமந்தவளை!

                                                                                                               -காரஞ்சன்(சேஷ்)

பட உதவிக்கு நன்றி:
திரு. வெங்கட் நாகராஜ் அவர்களே!
                                            
 

கற்காலம்! -காரஞ்சன்(சேஷ்)

கற்காலம்!





கால மாற்றத்தில்
கைவிடப்பட்ட
ஆட்டுரலும் அம்மியும்
மீண்டும் வீட்டிற்குள்!
மின்வெட்டு மிகுந்ததனால்!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

பட்டாபிசார் கருத்துரையால் இந்தப் பாடல் பிறக்குது!


பாட்டிக்கால  ஆட்டுக்கல்லும்
வீட்டிலிருக்குது! அதை
காட்சிப்பொருளாய் காணும்போது
நெஞ்சம் வலிக்குது!
போட்டி போட்டு அரைத்த காலம்- நினை
வேட்டிலிருக்குது!
கூட்டி அரைத்த  கரங்களிலோ –முதுமை
கூடிநிற்குது!
ஆடிக்களைத்த அவர்களுள்ளம்- ஓய்வை
நாடிநிற்குது!

அரைத்த மாவும் பொட்டலமாய்
இங்கே கிடைக்குது!
வாங்கிவந்து வார்த்துவைக்க-
வயிறு நிறையுது! 

இரைச்சலோடு அரைக்கும் மிக்ஸி
எரிச்சல் கூட்டுது!
இயந்திர வாழ்க்கையிலே- இதுவே
இயல்பாய்ப் போனது!

 -காரஞ்சன்(சேஷ்)

வெள்ளி, 5 அக்டோபர், 2012

உதயம்! காரஞ்சன்(சேஷ்)




உதயம்!



உலகைச் சுற்றுவதால்
உண்டான களைப்போ?
                                                         விழிகள் சிவக்க
                                                         விழித்தெழுகின்றாய்!

              
                                                 
                                                         அலைக்கரங்களில்
                                                         அகப்பட்ட பந்தோ?
                                                          கடலிடைக் கதிரவன்!

-காரஞ்சன்(சேஷ்)
(படங்களும் கவிதையும்)

வியாழன், 4 அக்டோபர், 2012

மீட்டிட வருவானோ? - காரஞ்சன்(சேஷ்)

                                             
                                                              மீட்டிட வருவானோ?

விண்ணிலே  ஒளிவீசும்
வெண்ணிலாவே!-இந்தப்
பெண்ணின் துயரினை
 நீ அறிவாயோ?

பாடித்திரியும் பறவைகளாய்
மாறிட மனமும் ஏங்குதடி!
கவலைமேகம் சூழ்வதனால்
கண்ணீர்த் திவலைகள் தோன்றுதடி!

என்னுள் வளரும் அவன் நினைவால்
நானோ தேய்பிறை யாகின்றேன்!
தேயும்  நிலையினை நீகடந்து
காயும் நிலவாய்த் தவழுகின்றாய்!

உனக்கென ஒருவன் ஒளிதர உள்ளதை
வெளிச்சம் போட்டு நீ காட்டுகிறாய்!
பிரிவினில் வாடும் பேதையின் துயரதை
ஏனோ இன்னும் கூட்டுகிறாய்?

மீட்டிடச்சொல்லி
கேட்டு மகிழ்ந்தவன்- எனை
மீட்டிட இங்கு வருவானோ?
வாட்டிடும் மனத்துயர்
ஓட்டி மகிழ்வினைக்
கூட்டிடும் இன்பம் தருவானோ?
-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

செவ்வாய், 2 அக்டோபர், 2012

காந்தி! -காரஞ்சன்(சேஷ்)


காந்தி! 
தேசத் தந்தையே!
வாராக் கடனிற்கும்
வைக்கின்றார் உன் பெயரை!
சிரித்த உன்முகம்தான்
செலவழியும் பணத்திலெல்லாம்!
அதனால்..
பாவ புண்ணியங்களில்
பங்குண்டு உந்தனுக்கும்!
 
நீட்டிய கரங்களிலே
நின்முகம் தவழ்ந்தால்தான் 
கடமை ஆற்றுவதில் சிலர்
காட்டுகிறார் வேகத்தை!

எண்ணும் வேளையிலே-உமை
எண்ணி அவர் பார்த்திட்டால்
இந்நிலை மாறிடலாம்!

இவையொரு புறமிருக்க....

இன்று நான் கண்ட காட்சி!

குடிசை வாசலொன்றில்
சிரித்த உன் படம்வைத்து
நறுமண மலர்தூவி
சிறுவர்கள் வணங்கி நின்றார்!

நீ பிறந்த இந்நாளில்
நம்பிக்கை ஒளிவெள்ளம்
நாடெங்கும் பரவட்டும்!

-காரஞ்சன்(சேஷ்)