2015 கவிதைப்போட்டி முதற்பரிசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2015 கவிதைப்போட்டி முதற்பரிசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 ஜூலை, 2015

கவிதைப்போட்டியில் முதற்பரிசு! -காரஞ்சன் (சேஷ்)

வணக்கம் நண்பர்களே!

திருவாளர்கள் ரூபன் மற்றும் யாழ்பாவாணன் அவர்கள் இணைந்து நடத்திய “உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி 2015”ல் எனக்கு முதற் பரிசு கிடைத்துள்ளது என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இருவருக்கும், மற்றும் எனது கவிதையை பரிசுக்கு தெரிவுசெய்த நடுவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்! பரிசினை வென்றுள்ளவர்களுக்கும், கலந்துகொண்டோர்க்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!


பரிசு அறிவிற்பிற்கான இணைப்பு இதோ
http://www.trtamilkkavithaikal.com/2015/06/2015.html

பரிசிற்குத் தெரிவுசெய்யப்பட்ட எனது கவிதை கீழே!
 
இணையத் தமிழே இனி!
தொட்டில் பருவத்தே தொடங்கியதே தமிழுணர்வு!
மட்டிலா மகிழ்வுடனே மழலைக்குத் தமிழமுதை
ஊட்டிடுவாள் அன்னையவள் ஊற்றெடுக்கும் தாலாட்டால்!
எம்மொழிகள் செம்மொழியாம் என்றாய்ந்து பார்க்கையிலே
எம்மொழிதான் செம்மொழியே-- ஏற்புடைத்த பழமையினால்!
 
மூவேந்தர் காலத்தை முத்தமிழால் உணர்ந்தோம் நாம்!
ஐம்பெரும் காப்பியங்கள் அணிந்திட்டாள் தமிழன்னை!
தோய்ந்ததமிழ்ப் புலவரெலாம் தொண்டாற்றி தமிழ்வளர்த்தார்!
தேய்கின்ற திங்களுமே திரும்பிடுதே முழுநிலவாய்!
தேயாமல் தீந்தமிழை திக்கெட்டும் வளர்த்திடுவோம்!
 
ஒற்றெழுத்துப் பிழையாலே உருக்குலையும் தமிழ்ச்சொல்போல்
ஒற்றுமை குன்றியதால் உருவிழந்தோம் தமிழினமே!
தாய்மொழியைக் கற்றிடவே தயங்குவதும் சரிதானோ?
சேய்களின் நாவெல்லாம் செந்தமிழும் தவழாதோ?
 
பைந்தமிழைப் பயிற்றிட பற்பல வழி செய்வோம்!
 
தேன்தமிழ்ப் பாடல்கள் திரையிசையில் நாம்கேட்டோம்!
இன்றைய தலைமுறைக்கு இல்லையந்த பேரின்பம்!
இன்றைய கவிஞர்களே! இயற்றுங்கள் நற்பாடல்!
சேய்களின் செவிகளிலே செந்தமிழைச் சேர்த்திட்டால்
தாய்மொழியும் வளராதோ? தமிழரினம் மகிழாதோ
 
கணிணிகளில் பல்வகையும் கைப்பேசி வகைகளுமே
பிணையத்தில் இணைந்து இணையமான இந்நாளில்
அனைத்திலும் தமிழ்தவழ ஆக்கிடுவோம் மென்பொருட்கள்!
இணையத்தில் தமிழ்வளர்த்து இசைபட வாழ்ந்திடுவோம்!
இணைத்திடுமே தமிழர்களை- இணையத்தமிழே இனி!
                                                              -காரஞ்சன்(சேஷ்)