வியாழன், 8 நவம்பர், 2012

அந்த மஞ்சள் நிறத்தவள்!....


இந்தச் சிறுவீட்டில்
இனிநனைய இடமுமில்லை.!
எவ்வளவு நேரம்தான்
அடுப்படியில் நான்
அடைந்து கிடப்பது?

அடுப்படியில் இருந்தால்
அடிவயிறு பசிக்காதா?
கடித்த துணி கிடக்க-எலி
காணாமற் போனதெங்கே?
கிடைத்தால் ஒரேஅடிதான்!
 
கிளியை வளர்த்தா
என் கையில் கொடுப்பார்கள்
என வெறுத்து வெளிவந்து
மரத்தடியில் பதுங்கிற்று-அந்த
 மஞ்சள் நிறப் பூனை!
          






-காரஞ்சன்(சேஷ்)

புதன், 7 நவம்பர், 2012

மாற்றம் தரும் மருந்தாவோம்! -காரஞ்சன்(சேஷ்)




மாற்றம் தரும் மருந்தாவோம்!


வாழ்விக்கும் மருந்திற்கும்
வாழ்நாள் வரையறுத்தோம்!

காலனின் ஓய்வினில்
கழிகிறது நம்வாழ்வு!

நற்சிந்தனைகளை
நாளும் விதைத்து
ஏற்றம் பெருக்கிட-மன
மாற்றம் தரும்
மருந்தாய் விளங்கிடுவோம்!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

திங்கள், 5 நவம்பர், 2012

முதியோர் இல்லம்!-காரஞ்சன்(சேஷ்)

 
முதியோர் இல்லம்!

முதியோர் இருக்கும்
இல்லங்கள் பெருகட்டும்
முதியோர் இல்லங்கள்
பெருகாமலிருக்க!

-காரஞ்சன்(சேஷ்)


பட உதவி:கூகிளுக்கு நன்றி!

ஞாயிறு, 4 நவம்பர், 2012

வாரீரோ குருவிகளே!=காரஞ்சன்(சேஷ்)


வாரீரோ குருவிகளே! 
 
ஓலைகளில் கூடுகட்டி
ஒலியெழுப்பும் குருவிகளே!
எட்டாத பனைமரத்தில்
கட்டிவைத்தீர் பலகூடு!
 
வறுமையின் வரவுக்கு
வாசல்கள் திறந்திருக்கும்
வட்டக் குழாயொன்றே
வசித்திடும் எம்வீடு!
 
சிறகடிக்கும் பருவத்தில்
வறுமையெனும் சுமையை
வைத்திட்டார் எந்தலையில்
உந்தலையில் பனங்காய்போல்!
 
பள்ளிச்  சீருடைதான்
பண்டிகைக்கு உடையென்பார்!
ஆடையுடன் பிறந்தநீர்
அறிவீரோ எம்துயரை?
 
இருந்தவை இல்லையெனில்
இருப்போர்க்குப் பெருந்துயரம்!
இல்லை யென்பதொன்றே
இல்லாதார் படும்துயரம்!
 
வாழ்க்கை வரைபடத்தில்
வறுமைக்கும் கோடு உண்டு!
இல்லாதோர்க்கு- அது
எட்டிடா உயரத்தில்!
 
இருப்பவர் கண்களுக்கோ
இ(ர)றக்கக் கோணத்திலும்-அது
எட்டாத தூரத்தில்!
 
வறுமைத் தளையறுந்து-எம்
வாழ்வுநிலை உயர்ந்திடவே
வாழ்த்திப் பாடிட இங்கு
வாரீரோ குருவிகளே!
 
-காரஞ்சன்(சேஷ்)
 
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
 


வெள்ளி, 2 நவம்பர், 2012

விட்டுப் பிரியாதே சிட்டுக்குருவியே!-காரஞ்சன்(சேஷ்)

விட்டுப் பிரியாதே சிட்டுக்குருவியே!             

கதவினைத் திறந்துவைத்து
காத்திருப்பேன் அனுதினமும்
உதிக்கின்ற கதிரவனொடு
உன்னையும் காண்பதற்காய்! 

காத்திருந்தாயோ?- நீயும்
கதவுகள் திறந்திடவே!
விரைந்து நுழைகிறாய்
வீட்டிற்குள் துணிவுடனே!
  
 
தரையில் இரைத்துவைத்தேன் 
தானியங்கள் சிலவற்றை!
தத்திநடந்தே அவற்றைக்
கொத்தித் தின்கிறாய்! 
 
              ஓரமாய் நான்
              உட்கார்ந்திருந்தாலும்
             விர்ரென்று எனைச்சுற்றி
              விரைந்து பறக்கின்றாய்!

மின்விசிறி ஓரமாய்
               மேலேநீ பறப்பதனால்
புழுக்கத்தையும் உனக்காகப்
பொறுத்துக் கொள்கிறேன்!

கண்ணாடியில் உன்முகத்தைக்
கண்டுஏன் கொத்துகின்றாய்!
துணையைக் கவர்ந்ததாய்
தோன்றியதோ உந்தனுக்கு! 
                
                 சுற்றும் உன்னுடனே
சுற்றவைத்தாய் என்மனதை!
அலைபேசி கதிர்வீச்சால்
அருகிடுதாம் உந்தன் இனம்!          
                                                                                
விழிப்புணர்வு ஏற்படுத்த      
விழைந்த சிறுவர்கள்             
ஒருங்கிணைந்து நின்று
உண்டாக்கினர் உன்னுருவம்!
 
வாழையடி வாழையாய்
வாழ வகைசெய்வோம்!
உன்குரல் ஒலிப்பினிலே--நாளும்
உலகம் விழிக்கட்டும்  !     
                                     -காரஞ்சன்(சேஷ்)
 
படங்கள்: காரஞ்சன்(சேஷ்) மற்றும்தினமலர்

வியாழன், 1 நவம்பர், 2012

ஆதலின் மழையே!-காரஞ்சன்(சேஷ்)



 
ஆதலின் மழையே!


பெய்யாமல் பொய்த்த
பருவழை-இவ்வாண்டு
பொய்க்காமல் பெய்ய
புயலொடு வந்ததுவோ?

நீலமெனும் பெயர்பெற்று
நிலைகொண்டது புயலொன்று!

 “நீலம்” தீண்டியதால்
நிறம் மாறிய வானம்
ஓயாமல் மழையென
உகுத்தது கண்ணீரை!

 கார்மேகம் முழுவதையும்
கடத்தியது சுழற்காற்று!
உடைந்தழுத மேகத்தால்
உண்டாச்சு அடைமழையும்!

சூழ்ந்த மழைநீரால்
பாழாகும் பயிர்கள்பல!
வீழ்ந்த கம்பங்களால்
விடைபெற்றது மின்சாரம்!

சாலைகளை அடைத்தன
சாய்ந்த பெருமரங்கள்!
அல்லலுடன் மக்கள்
அடைந்தனர் வீட்டிற்குள்!
 
"தானே" அளவிற்குத்-துயர்
தரவில்லை என்றாலும்
கரைகடக்கும் வரையில்
கலக்கமுற வைத்த புயல்!

மண்ணுக்கு அமுதம்
மழைத்துளி யாகும்!
விண்பொய்த்தாலோ
வியனுல கில்லை!
அளவில் மிகுந்திடின்
அமுதமும் நஞ்சே!
 
ஆதலின் மழையே....
அளவுடன் நல்கி-புவி
வளம்பெறச் செய்வாய்!
                                            -காரஞ்சன்(சேஷ்)

செவ்வாய், 30 அக்டோபர், 2012

தளர்ந்த வயதில் மலர்ந்த நினைவுகள்!-காரஞ்சன்(சேஷ்)


 

தளர்ந்த வயதில் மலர்ந்த நினைவுகள்!

சிறுவயதுப் பருவங்கள் 
சிந்தையில் மலர்ந்தனவோ?

விடுமுறை நாட்களில்
விளையாடி மகிழ்ந்தகதை
நீங்காது இன்னும்
நினைவலையில் இருக்குதடி!

பூவரச இலைசுருட்டி
ப்பூ .ப்பூ ஊதிநின்றோம்!
முதிர்ந்தநுணாக் காய்களிலே
முக்கோணம் சதுரமென
தென்னங் குச்சிகளை
தேர்செய்யக் கோர்த்திட்டோம்!

உண்டாக்கிய தேரை
உவகையுடன் இழுத்திட்டோம்!
 
கல்லா? மண்ணா?வொடு
கண்ணாமூச்சி, பாண்டியென
களிப்புடன் விளையாடிக்
களைத்துத் திரும்பிடுவோம்!

 மணலில் வீடுகட்டி
மாளிகை என்றுரைத்தோம்!
எண்ணம்போல் கிறுக்கலுக்கு
ஏதேதோ பேர்வைத்தோம்!
 
காய்ந்த பனைஓலையிலே
கருவேல முள்ளிணைத்து
காற்றாடி சுற்றிடவே
கால்வலிக்க ஓடிநிற்போம்!

 பல்லாங்குழி, பரமபதம்
தாயம் இவையெல்லாம்
வெயில் மிகும்வேளை
வீட்டிற்குள் விளையாட்டு!

 திருவிழா நாட்களில்
தின்பண்டம் மட்டுமன்றி
வண்ணக் கண்ணாடியும்
வாங்கிட அடம்பிடிப்போம்!

வெள்ளரிப் பழத்தினிலே
வெல்லமும் சேர்த்துண்போம்!
வெண்ணிற நுங்குகளை
விரல்வழி உறிஞ்சிடுவோம்!

 கலந்த சோற்றிற்கு
கைநீட்டிக் காத்திருப்போம்!
வழங்கிடுவாள் அன்னை
வரிசையில் அமரவைத்து!

தும்பைப் பூத்தொடுத்து
துவளும் முறுக்குசெய்தோம்!
இந்தத் தலைமுறையில்
இவையனைத்தும் இல்லையடி!     
 
 -காரஞ்சன்(சேஷ்)
படங்கள் உதவி: கூகிளுக்கு நன்றி