திங்கள், 3 டிசம்பர், 2012

எது ஊனம்? -காரஞ்சன்(சேஷ்)

                                                             
                                                                எது ஊனம்?
03-12-2012

உலகமெங்கும் அனுசரிக்கும்
ஊனமுற்றோர் தினம் இன்று!

அவர்படு துயரம்
அடுத்தவர் உணர்ந்து
அரவணைத்திடவே
அமைந்த தினமிது!

உலகளவில்
 ஊனமுற்றோர்
மொத்த மக்கள் தொகையில்
பத்து சதவீதமாம்!

ஆனால் உண்மையில்...

கண்ணிருந்தும் கல்லாதோர்
கண்ணிழந்தோரே!

செல்வம் நிறைந்திருந்தும்
எள்ளளவும் ஈயாதார்
கையிழந்தோரே!

உடல் ஊனம்
 ஒரு பொருட்டல்ல என
உழைப்பவர் மத்தியில்
உடல் பலமிருந்தும்
உழைக்க மறுத்து
முடங்கிக் கிடப்பவர்
முடவரன்றோ!

அடுத்தவர் படுதுயர்-செவி
மடுத்திட மறுப்பவர்
செவிடரன்றோ?

நாடி வந்தோர்க்கு
ஓடி உதவாக்
கால்களும் ஊனமன்றோ?

வாய்மை உரைக்காத
வாயும் ஊமையன்றோ?

பிறர் உயர்வைப்
பொறுக்காத பலரின்
மனமும் ஊனமன்றோ?

இத்தனை ஊனம்
நம்மிடம் இருப்பதை
இனியேனும் உணர்ந்து
உதவிக்கரம் நீட்டுவோம்
ஊனமுற்றோர்க்கு!

முடங்கிக் கிடக்கும்
முக்கியத் திட்டங்கள்
விரைந்து செயல்பட
வேண்டியன செய்வோம்!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

 

வியாழன், 29 நவம்பர், 2012

நீர் கொண்டுவா வெண்மேகமே!-காரஞ்சன்(சேஷ்)

                                       
                                                நீர் கொண்டுவா வெண்மேகமே!

நீசென்று  நீருண்டு

வேருண்ணத் தருவாயா

வெண்மேகமே!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி:  கூகிளுக்கு நன்றி!

புதன், 28 நவம்பர், 2012

நடந்ததும் நடப்பதும்! காரஞ்சன்(சேஷ்)




நடை திறந்ததும்……

நினைத்து நடந்தார்!
நினைத்தபடி நடந்ததும்
நினைத்தபடி நடந்தார்!
நடப்பதை மறந்தார்!

நடத்துவதும் நீ!
நடத்தப்போவதும் நீ!
நினைத்தது(ம்) நடப்பது
நின்னருளா லன்றோ?
நடந்ததை நினைப்பது
நம் கடனன்றோ?

                     -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

செவ்வாய், 27 நவம்பர், 2012

குழப்பமென்ன?- காரஞ்சன்(சேஷ்)




                                                         குழப்பமென்ன?



நகமும் சதையுமாய்
நாமிருப்போம் என்கிறதோ? 

சமாதானத் தூதாக
சம்மதிக்க வேண்டியதோ? 

குரங்கின் தலையில்
குழப்பமென்ன வெண்புறாவே? 

நிம்மதி நாடிவந்து
நின்மேல் சாய்கிறதோ?

                                   -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி:கூகிளுக்கு நன்றி!

ஞாயிறு, 25 நவம்பர், 2012

இனிக்கட்டும் எம்வாழ்வும்!


 
வளைந்த கரும்புகளே நீர்
வாயிற் காவலரோ?
வாய்க்கால்வழி நீர்ப்பாய்ச்ச
வழிவிடு செங்கரும்பே!

 
இனிப்பொடு கசப்பும் -உன்னில்
இருப்பதாய்ப் பாடலுண்டு!
உறிஞ்சிநீ நீர்குடித்தால்
உண்டாகும் நற்சாறும்!


விளைந்தபின் உனக்குரிய
விலையும் கிடைத்தால்தான்
இனிக்கும்  உன்னாலே
இனித்திடும் எம்வாழ்வும்!

                        -காரஞ்சன்(சேஷ்)
 
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

வியாழன், 15 நவம்பர், 2012

வாழவை! -காரஞ்சன்(சேஷ்)

                                                     
                                                                  வாழவை!


     விளைந்திடும் பயிருக்கு
     வேண்டிய நீரில்லை!
     களையான நெல்வயலைக்
     களையாக விடலாமோ?
     களைந்திடு துயரென்று
     கரம்நீட்டி வேண்டுகிறேன்!
 
     இப்புவியின் பரப்பினிலே
     முப்பங்கு நீர்படைத்தாய்!
     எப்(ம்)பங்கும் இல்லையெனில்
     முப்போகம் விளைவதெங்கே?
      இப்போகம் விளைந்திடவே
     இன்னருள் புரியாயோ?

     பெருகிடும் கண்ணீரில்
     உருகாதோ உந்தனுள்ளம்?
     நெல்விளையும் நிலங்களிலே
      கல்லறுக்கும் நிலைதகுமோ?
      கரையட்டும் கல்நெஞ்சம்-நின்
     கருணை மழையாலே!


                            -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி:கூகிளுக்கு நன்றி!

சனி, 10 நவம்பர், 2012

நலம் தருவாய் நரசிம்மா!-காரஞ்சன்(சேஷ்)



 நலம் தருவாய் நரசிம்மா!

அகந்தைக்கிழங்கை அழித்திடவோ
நகத்துடனும், சிங்கமுகத்துடனும்
நான்காம் அவதாரமென
நரசிம்மா நீ உதித்தாய்!

அகத் தாமரையில்
அமரவைத் துன்னை
அனுதினம் துதித்தவனின்
துயரினைக் களைந்திட
வானளந்த திருவுருவே
தூணினுள்நீ உதித்தனையோ!

தோன்றிய நாள்முதலாய்
தொடர்ந்து வரும் துயரம்
‘மா’வினுள் வண்டினைப்போல்
மனதுள்ளே வளருதப்பா!
பாதமலர் பற்றிநின்றேன்
பரந்தாமா துயர் களைவாய்!

வேதநெறி அறியேன்!
ஓதும் விதியறியேன்!
சாத்திரம் அறியேன்!
சாற்றுமுறை நானறியேன்!
அரிநாமமொன்றேதான்
அறுதுயர் களையுமென
போற்றித் துதிக்க வந்தேன்
ஏற்று எமக்கருள்வாய்!

நாவால் நின்திருநாமம்
நம்பி நவில்பவர்க்கு
நல்வினைகள் சூழ்ந்தென்றும்
நலம்பலவும் பெருகாதோ?
 
உதிக்கின்ற கதிரொத்த
உன்பார்வை பட்டாலே
பனிவிலகல் போலெந்தன்
பாபங்கள் விலகாதோ?
சங்கொடு சக்கரமும்
என்றுமிடர் அகற்றாதோ?
 
மன்னுபுகழ் மாயவனின்
மனங்குளிரச் செய்பவளே!
உலகளந்த திருவடியின்
உயர்மடியில் அமர்ந்தவளே!
செங்கமலக் கண்களினால்
சினம்தணியச் செய்பவளின்
அருட்பார்வை பட்டாலே
அகலாத துயருமுண்டோ?
 
அகிலத்தைக் காத்திட
ஆராய்ந்து அருள்பவனே!
படைப்புகள் அனைத்துள்ளும்
படைத்தநீ உறைகின்றாய்!
பிறவித்துயர் களைய-நின்
அருட்பார்வை அருளாயோ?
 
நரசிங்கா நின்நாமம்
நாவால் துதிப்பவர்தம்
எண்ணத்தில் உறைந்து
ஏற்றம் அருள்பவனே!
வாடி வருவோர்க்கு
ஈடில்லா பெருமகிழ்வை
என்றும் அருள்வாயே! 

தேரேறும் நின்னருளால்
நீரேறி நெல்விளையும்
பூவரசங் குப்பமுறை
புண்ணியன் நின்நாமத்தை
எண்ணித் துதிப்போர்க்கு
என்றுமினி துயருமிலை!

-காரஞ்சன்(சேஷ்)