சனி, 18 அக்டோபர், 2014

வரிக்கு வரி! -காரஞ்சன்(சேஷ்)


வரிக்கு வரி!

முகவரி தேடிவந்து
அகம்கவர்ந்த சுகவரிகள்!

புரிதலின் வெளிப்பாடு
விரிகிறதோ வரிகளிலே!

சரியான புரிதலுக்கு
வரிவிலக்கில் இடமுண்டு!

வரிவடிவில் வந்திங்கு
வாரி அணைக்கின்றார்!

பிரிவின் துயரத்தைப் 
பரிவால் தணிக்கின்றார்!

-காரஞ்சன்(சேஷ்)
பட உதவிக்கு நன்றி: மாயவரத்தான் MGR அவர்களின் வலைப்பூ

புதன், 15 அக்டோபர், 2014

இதயத்தில் ஓர் உதயம்! -காரஞ்சன்(சேஷ்)


 
இதயத்தில் ஓர் உதயம்!


படிந்த புழுதியை
எப்போதாவது வரும் மழை
கழுவிக் களைவதைக்
கண்டு களிக்கையில்.....
 
முகமறியா மனிதர்களை
சுகமான குரலால்
துதிபாடித் துயிலெழுப்பும்
குயிலோசையைக் கேட்கையில்..
 
குரைத்துத் துரத்தும்
நாய்களுக்கிடையில்
எனைப் பார்த்து
வாலாட்டும் நாயினைக் காணநேர்கையில்.....
 
விரிந்த வானில்
இருளும் வேளையில்
தனித்துப் பறக்கும்
பறவையைப் பார்த்து வியக்கையில்....
 
ஒடுங்கிய தேகமும்
இடுங்கிய கண்களுமாய்
"இரட்டை மல்லி" எனக்கூவி
விற்கும் கிழவியை வியந்து பார்க்கையில்...
 
கடந்து செல்லும் ஊர்தியில்
கையசைத்துச் செல்லும்
மழலைச் செல்வங்களின்
மலர்ந்த புன்னகை மகிழ்வளிக்கையில்....


இன்னும் பல்லாண்டு
இவ்வுலகில் வாழ
ஆசை என்மனத்துள்
அன்றாடம் மலர்கிறது!
                                                  -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

துவளாமல் துணிந்து செல்!-காரஞ்சன்(சேஷ்)


        












ஒவ்வொருவருக்குள்ளும்
ஒளிந்திருக்கும் ஒரு திறமை!
உன்னை நீ அறிந்தால்
உயர்வது நிச்சயமே!

தன் திறனைக் கண்டறிந்து
தருணத்தே வெளிப்படுத்த
உயர்வொடு பெரும்புகழும்
உண்டாகும் உலகினிலே!

குறையிலா மனிதர்கள்
குவலயத்தில் யாருமில்லை!
நிறைகளைக் காண்பவர்கள்
நிச்சயம் உயர்ந்தவர்தாம்!

உயர்வினைப் பெற்றிடவே
ஊக்குவித்தல் அவசியமே!
உறவொடு நட்பிற்கும்
உண்டதிலே பெரும்பங்கு!

நண்பர்களாய் நாமிருப்போம்!
நட்பினை வளர்த்திடுவோம்!
நல்லதோர் நட்பிற்கு

நானிலத்தில் மறைவில்லை!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு நடத்தப்படும் கவிதைப்போட்டிக்கான ஓவியக்கவிதை! -காரஞ்சன்(சேஷ்)



 

பூத்தமலர் காத்திருக்க!..
 

நெஞ்சத் திரையினிலே நிறைந்தவளின் ஓவியத்தைக்
கொஞ்சும் எழிலுடனே குறையின்றி வரைந்தாரோ?
பிறைநிலவோ புருவங்கள்! கருவண்டோ இருவிழிகள்!
அரும்பிடுதே புன்னகையும் அழகான பூவிதழில்!          
 
அலைபாயும் மனதுடனே கலையழகுச் சிலைஅவளும்
வலைவீசிச் சென்றவனின் வரவுக்குக் காத்திருப்போ?
நிலைவாசல்  படிமீது அடிவைத்து நிற்குமவள்
பலகவிகள் படைத்திடவே அடியெடுத்துக் கொடுக்கின்றாள்!
 
கொடியிடை தாங்கிடுதே கூடையிலே மலர்ச்சரங்கள்!
விடைதேடிக் காத்திருப்போ? விழிமலர்கள் பூத்திருப்போ?
கொடிமலரில் தேனருந்த கூப்பிட்டா வண்டு வரும்?
வடிவழகாய் மலரொன்று வண்டிற்காய் காத்திருப்போ?
 
நீங்காத நினைவுகளால் நெஞ்சம் நிறைத்தவனால்
தூங்காது இரவுகளில் துடித்திருப்ப தறியானோ?
எங்கும் அவனுருவே! எந்நாளும் அவன் நினைவே!
ஏங்கும் அவள்துயரை அன்னவனும் அறியானோ?
 
தென்றலே! தீந்தமிழே! தேன்நிலவே! நீங்களெலாம்
மங்கையவள் துயர்தனையே மன்னவனுக் குரைப்பீரா?
நங்கையை மணமுடித்து நல்லின்பம் நல்கிடவே
செங்கமலக் கண்ணனிடம் சென்றுரைக்க மாட்டீரோ?
 
புன்னகை அழகினிலே பொன்நகையும் தோற்குதிங்கே!
கன்னியை மணமுடிக்க காளையவன் தேதிசொன்னால்
அரும்பிய புன்னகையின் அர்த்தமதுபுரிந்துவிடும்!
நறுமண மலர்மஞ்சம் நாளுமின்பம் சேர்த்துவிடும்! 
-காரஞ்சன்(சேஷ்)

இரண்டாவது கவிதை இதோ:


 

தீபாவளித் திருநாளை முன்னிட்டு நடத்தப்படும் கவிதைப்போட்டிக்கான இரண்டாவது கவிதை! -காரஞ்சன்(சேஷ்)












மலருமுன்னே பறிப்பதற்கா ?! உலகோரே சிந்திப்பீர்!

நதியைப்  பெண்ணென்பார்!  நாட்டைப் பெண்ணென்பார்!
கருவில்  பெண்ணென்றால்  கலைத்திடஏன் முயல்கின்றார்?
ஆழ்துளைக் கிணறுகளை   அலட்சியமாய் விடுகின்றார்!
குழிக்குள்   பலியெனவே    குழந்தைகளே  வீழ்கின்றார்!


 பேருந்தின் ஓட்டைகளும் பெருந்தீ விபத்துகளும்
கருணையின்றி மழலைகளைக் காலனிடம் சேர்த்திடுதே!
வாங்கிய   கடன்தொகையை   வட்டி       வளர்த்துவிட
தாங்க முடியாதோர்   தற்கொலையாம்---  குழந்தையுடன்!

வறுமையின்  பிடியில்    வாழ்வோரின்  குழந்தைகளோ
சரிவிகித   உணவின்றி    சாகின்றார்    நோயாலே!
கள்ளக் காதலுக்கு  பிள்ளைகள் தடையெனவே
கொல்கின்றாள் பெற்றவளே! கொடுஞ்செயல் இதுவன்றோ?

பள்ளிக்குச்  செல்லும்   பெண்பிள்ளை   பலருக்கு
பாலியல் தொந்தரவு பண்பில்லா ஆசானால்!
 அறுபதைக் கடந்தாலும் அடங்காத காமத்தால்
சிறுமிகளைச் சீரழிக்கும் சிற்சில மிருகங்கள்!

கடத்தி முடமாக்கும் கருணையிலாக் கயவர்கள்
இடங்களைத் தேர்ந்தெடுத்து  விடுகின்றார் கையேந்த!
பணம்பறிக்கக் கடத்துகிறார்  பச்சிளம் குழந்தைகளை!
இணங்கிட வில்லையெனில் எடுக்கின்றார் இன்னுயிரை!

 ஒன்றுமறியாச் சிறுவர்களை ஒழிக்கின்றார் போராலே!
அன்றாடச் செய்திகளில் அவலங்கள் இவையெல்லாம்!
தனிமனிதன் ஒழுக்கத்தில் தவறாத நிலைகாண
இனியேனும் இயற்றிடுவோம் இதற்கான கடும்சட்டம்!





படங்கள் உதவி: கூகிளுக்கு நன்றி!
-காரஞ்சன்(சேஷ்) 

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்! -காரஞ்சன் (சேஷ்)


வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்! தாயின் மணிக்கொடியை தாழ்ந்து பணிந்திடுவோம் வாரீர்!


சுதந்திரத் திருநாள் -

என்னுடைய கவிதைகளுக்கான இணைப்பு:

இதுவோ சுதந்திரம்?

http://www.esseshadri.blogspot.com/2012/08/blog-post_14.html

ஏற்றிப் போற்று!-

http://www.esseshadri.blogspot.com/2013/08/blog-post_14.html


என் மகளின் கவிதைக்கான இணைப்பு:

http://www.supriyasesh.blogspot.in/2014/08/blog-post.html

 வாழிய பாரத மணித்திருநாடு! ஜெய்ஹிந்த்!

நன்றி!

காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி.

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

சிறுகதை விமர்சனத்திற்குப் பரிசு!- காரஞ்சன்(சேஷ்)

VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில் ஹாட்ரிக் பரிசு!

மதிப்பிற்குரிய திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதை விமர்சனப் போட்டியில் VGK-25, VGK-26,VGK-27 ஆகிய மூன்று கதைகளுக்கான என் விமர்சனத்திற்குப் பரிசு கிடைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!
 
 VGK 25 - தேடிவந்த தேவதை!

http://gopu1949.blogspot.in/2014/07/vgk-25.html



இரண்டாம் பரிசு பெற்ற என் விமர்சனத்திற்கான இணைப்பு இதோ:


http://gopu1949.blogspot.in/2014/07/vgk-25-02-03-second-prize-winners.html

-------------------------------
VGK 26 - பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?


http://gopu1949.blogspot.in/2014/07/vgk-26.html


இரண்டாம் பரிசு பெற்ற என் விமர்சனத்திற்கான இணைப்பு இதோ:


http://gopu1949.blogspot.in/2014/07/vgk-26-02-03-second-prize-winners_26.html
------------------------------------------------

VGK 27 - அவன் போட்ட கணக்கு!

http://gopu1949.blogspot.in/2014/07/vgk-27.html
 
மூன்றாம் பரிசு பெற்ற என் விமர்சனத்திற்கான இணைப்பு இதோ:
 
 
-----------------------------------
 
வாய்ப்பளித்த திரு வை.கோ சார் அவர்களுக்கும், எனது  விமர்சனத்தைப்   பரிசுக்கு தெரிவு செய்த நடுவர் அவர்களுக்கும்  எனது மனமார்ந்த நன்றிகள்!

-காரஞ்சன்(சேஷ்)