செவ்வாய், 13 மே, 2014

தூணில் உதித்த தூயோனே போற்றி! -காரஞ்சன்(சேஷ்)


தூணில் உதித்த தூயோனே போற்றி! -
(200 ஆவது பதிவு)
காலைக் கதிரவனும்
கடலிடை எழுகின்றான்!

சோலை மலர்களெலாம்
மாலையாய்த் தோள்சேர
மலர்ந்தெங்கும் சிரிக்கிறதே!

அதிகாலைப் புள்ளினங்கள்
துதிபாடித் துயிலெழுப்ப 
திருவடி தொழுதிடவே
தேடிவந்து தினந்தோறும்
நின்ஆலய வாசலிலே
நிற்கின்றோம் அனைவருமே!

ஆணவத்தை அழிக்க
அவதரித்த திரு உருவே!
தாமரைக் கண்திறந்து
தயை புரிவாய் எங்களுக்கே!

ஒருகண்ணால் உனைநோக்கும்
உத்தமியின் திருவிழிகள்
நித்தமும் எங்களுக்கு
நிம்மதியை அருளாதோ?

நாளை என்பதே
நரசிம்ம ரிடமில்லை!
எங்கும் உறைபவன் நீ!
இல்லாத இடமில்லை!

காண்பவர் கவலையெலாம்
களைந்திடும் மாமணியே!
நான்காம் அவதாரமே!
நாங்களெலாம் நின்பிள்ளை!

என்ன பிழை யாம் செய்தோம்?
ஏனிந்த பெரும் துயரம்!
நாடிவந்தோம் நின்னருளை
நல்கிடுவாய் நரசிம்மா!
  
சேயாம் எங்களுக்கு
தாயாய் அருள்பவன் நீ!

எந்தை முன்னோரும்
ஏத்திட்ட தந்தை நீ!

வேள்வித் தீயினிலே
விளைந்தெழும் உருவில் நீ!

எங்கும் நிறைந்தவன் நீ!
எதிலும் உறைபவன் நீ!

வரத்தில் அடங்காத
வடிவம் பெற்றவன் நீ!

கருணைக் கடலும் நீ!
காப்பாற்ற வந்தவன் நீ!

சரணாகதி யென்றோர்க்கு
சகலுமும் அருள்பவன் நீ!

நின்திருவிழிகள் அருளாலே
தீவினைகள் அகலாதோ?

விண்ணளந்த பெருமாளே!
விழைந்தெமக்கு அருள்செய்வாய்! 

-காரஞ்சன்(சேஷ்)


 படம்: பூவரசங்குப்பம் அருள்மிகு அமிர்தவல்லி நாயிகா சமேத ஶ்ரீ லக்‌ஷ்மி நரசிம்மர்.

ஞாயிறு, 11 மே, 2014

அன்னையர் தின வாழ்த்து! -காரஞ்சன்(சேஷ்)


                                                 அன்னையர் தின வாழ்த்து!


'அ" வை அறியுமுன்னே
அம்மாவை அறிந்திட்டோம்!

பத்துமாதம் சுமந்தெடுத்து
பாலூட்டி, தாலாட்டி
காலூன்றி நடப்பதை
களிப்புடன் பாராட்டி
தேவை அறிந்து
சேவை செய்வதிலே
அன்னையைப் போல்
ஆரிருப்பார் அவனியிலே!

செவிக்குணவாக
சிறந்த கதை பல சொல்லி
சீரிய சிந்தனைகள் நம்
சிந்தையில்  விதைத்திடுவாள்!
வீரத்தை ஊட்டுவதில்
விஞ்சிநிற்பாள் அன்னையுமே!

வளர்த்து ஆளாக்கி
வாழவைத்த அன்னைக்கு
அன்னையர் தினமான
இந்நாளில் வாழ்த்துரைப்போம்!


-காரஞ்சன்(சேஷ்)

ஓவிய உதவி: கூகிளுக்கு நன்றி!

சனி, 10 மே, 2014

கதைகேளூ! கதைகேளூ! -காரஞ்சன்(சேஷ்)


கதைகேளூ! கதைகேளூ!



கடந்தகாலமெல்லாம்
கண்முன்னே நிக்குதய்யா!
நடந்தகதை நான்சொல்ல
நாட்கள் பல ஆகுமய்யா!

சேத்து வயல்களிலே
நாத்து நடப்போவோம்!
சிறப்பாநெல் விளைய
சேர்ந்து உழைச்சிடுவோம்!

இலைதழை புண்ணாக்கு
இயற்கை உரமிடுவோம்!
மருந்தடிக்கும் இந்நாளில்
மருந்தே உணவாகுதய்யா!

நாலெழுத்துப் படிச்சிருந்தா
நல்லா இருந்திருக்கும்!
பேரெழுதத் தெரிஞ்சுகிட்டேன்!
பெரிசா ஏதுமில்லை!
 
கட்டாயக் கல்விக்கு
சட்டம் அப்ப இல்லை!
காலணா காசுக்கு
காலைமுதல் உழைச்சிருப்போம்!

கூத்தும் நாடகமும்
கும்பலா பார்த்திடுவோம்!
நல்ல சில விஷயங்கள்
நானறிஞ்சேன்  அப்படிதான்!

படிப்பும் அவசியந்தான்
பட்டபின்னே உணர்ந்துகிட்டேன்!
இந்நாளில் படிக்கவைக்க
எம்மாஞ் செலவாகுதய்யா!

காலம் மாறிடுச்சி!
காடுநெலம் கொறைஞ்சிடுச்சி!
மாறி வரும் மழை போல
மனுஷ மனம் மாறிடுச்சி!

கம்ப்யூட்டர் வழியாவும்
கல்யாணம் நடக்குதுங்க!
ஆன சிலநாளில்
அதுக இரண்டும் பிரியுதுங்க!

புதுவாழ்க்க தொடங்கிப்புட்டா
புரிஞ்சுக்க வேணுமுங்க!
விட்டுக் கொடுப்பதிலே
வெளையும் பல நன்மையுங்க!

இலையெல்லாம் சருகாகும்
இயற்கை விதி இதுவாகும்!
இளக்காரம் செய்யாம
எம்பேச்சைக் கேட்டுக்கோங்க!

படிச்ச புள்ளைகளா-ஒரு
பாடம் சொல்லித்தாரேன்!

பெத்து வளத்தவங்க
பேசும் தெய்வமுங்க!
கடைசி காலம்வர
காப்பாத்த வேணுமுங்க!

கம்ப்யூட்டர் உள்ளாற –என்
கதையக் கொஞ்சம் போட்டுடுங்க!
கதையப் படிச்சவங்க
கருத்த கொஞ்சம் போடுங்களேன் !
 -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

வெள்ளி, 9 மே, 2014

பூத்தமலர் காத்திருக்க! -காரஞ்சன்(சேஷ்)


பூத்தமலர் காத்திருக்க!


கதவருகில் காத்திருந்து
கண்ணிரண்டும் பூத்ததய்யா!
தொடுத்த மலர்ச்சரமும்
துவளுதய்யா கூடையிலே!
கொடியிடையாள் பாரமதை
கொள்ளையன் நீ அறியாயோ?
மனக்கதவை திறந்தவன் நீ!
மாலையிட வாராயோ?
விரும்பிய சேதியொடு
விரைவில் நீ வந்துவிடு!
அரும்பிய புன்னகையின்
அர்த்த’மது’ கண்டுவிடு!
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

வியாழன், 8 மே, 2014

தூக்கணாங் குருவிக்கூடு! -காரஞ்சன்(சேஷ்)



தூக்கணாங் குருவிக்கூடு

ஏட்டுப் படிப்பின்றி
கூட்டைஅமைத்தாயோ?

பசுமை வீடமைக்க
பாடம் தந்தாயோ?


உல்லாச ஊஞ்சலென
உன்கூட்டில் அமர்ந்தாயோ? 


அறைகள்பல பிரித்து
அதற்குள் வைத்தாயோ?

வாய்ப்பந்தல் நபர்களையும்
வாய்பிளக்க வைத்தாயோ?

பிறவிஞானம் இயற்கையின் கூறு!
சிறப்பாய் விளக்குது உந்தன் கூடு!

-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

புதன், 7 மே, 2014

வரை!- காரஞ்சன்(சேஷ்)


வரை!

வரையறுத்த தொகை   
வரைவதால் கிடைக்குமெனில்
வரையளவு உயரங்கள்
வரைபவர்க்குப் பொருட்டல்ல!
 
பார்ப்பவர் கண்களை
ஈர்த்திட வேண்டி
பாவையின் கண்களை
பாங்காய் வரைகின்றார்! 

தொங்கி வரைந்தாலும்
தொய்வில்லை ஓவியத்தில்!
எங்கிருந்து பார்த்தாலும்
பார்ப்பவரைப் பார்ப்பதுபோல்
பாவையவள் தோற்றம்!

 நாலடி உயரத்தை
நாற்பதாக்கி வரைந்தாலும்
ஏற்ற இறக்கங்கள்      
என்றும் இவர்வாழ்வில்!

 வரைதலில் சிகரம்
தொட்ட இவர்-தம்
வாழ்வில் உயர்ந்திட
வாழ்த்துரைப்போமே!
-காரஞ்சன்(சேஷ்)
 
பட உதவி: மாயவரத்தான் எம்.ஜி.ஆர். வலைப்பூ

செவ்வாய், 6 மே, 2014

வாயில்லாப் பூச்சி!…-காரஞ்சன்(சேஷ்)




 வாயில்லாப் பூச்சி!

வண்ண மலரென்று

வாயருகே சென்றாயோ?

உண்ண முயன்றிடுதே

வண்ணப் பறவை உனை!

வலியோர் முன் எளியோர்

வாயில்லாப் பூச்சிகளோ?

எளியோரின் வலியதனை

வலியோர் அறியாரோ?

 -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!