கிளிப்பேச்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிளிப்பேச்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 ஏப்ரல், 2013

"கேட்போமே கிளிப்பேச்சை!"-காரஞ்சன் (சேஷ்)



 
 

கேட்போமே கிளிப்பேச்சை!

பாடிப்பறந்தெங்கும்
தேடிப்பழந்தின்று
கூடி மகிழும்கிளியே!
குற்றம் என்செய்தாய்?
கூண்டில் உனைஅடைத்தார்!

 வட்டமிட்டுத் திரிந்தஎனை
திட்டமிட்டுப் பிடித்துவந்தார்!
சோலையில் திரிந்தஎனை
சோதிடம் சொல்லவைத்தார்!
கோவைப்பழம் விடுத்து
கொடுக்கின்றார்- நெல்மணிகள்!

 சொன்னதைச் சொல்லும் நீ
சோதிடம் அறிவாயோ?
அடுக்கிய அட்டைக்குள்
அனைவருக்கும் பலன்உண்டோ?

 ஈராறு இராசிகளில்
இவ்வுலகம் அடங்குமென்பார்!
பார்ப்பவர் பெயருரைத்துத்
தீர்ப்பினைத் தேர்ந்தெடுக்க
கூண்டைத் திறந்துவிட்டு
கூப்பிடுவார் என்னையுமே!

 உழைப்பவர் ஊக்கம்பெற
ஒருசீட்டு அதிலுண்டா?
ஏமாற்றிப் பிழைப்போரை
எச்சரிக்கும் சீட்டுண்டா?
எதிர்காலம், வளமாக
ஏதெனும் வழியுண்டா? 

எழுதிவைத்த சீட்டிலொன்றை
எடுத்துத் தருவதொன்றே
எமக்கிங்கு இட்டபணி! 

மாற்றம் விளைவித்து
ஏற்றம் காண்பதெல்லாம்
உங்களின் கைகளில்
உள்ளதை அறிவீரா?

 திருத்துவதும் திருந்துவதும்
மானிடரின் கையிலென்று
இனியேனும் உணர்வீரா?

 (சோ) திடமாய் நம்பிஇதை
தினமும் உழைத்திடுக!
விடுதலை அளித்திடுக
விருப்பம்போல் நான்வாழ!

-காரஞ்சன்(சேஷ்)

படங்கள்  உதவி: கூகிளுக்கு நன்றி!