கதைகேளூ! கதைகேளூ!

கடந்தகாலமெல்லாம்
கண்முன்னே நிக்குதய்யா!
நடந்தகதை நான்சொல்ல
நாட்கள் பல ஆகுமய்யா!
சேத்து வயல்களிலே
நாத்து நடப்போவோம்!
சிறப்பாநெல் விளைய
சேர்ந்து உழைச்சிடுவோம்!
இலைதழை புண்ணாக்கு
இயற்கை உரமிடுவோம்!
மருந்தடிக்கும்
இந்நாளில்
மருந்தே உணவாகுதய்யா!
நாலெழுத்துப் படிச்சிருந்தா
நல்லா இருந்திருக்கும்!
பேரெழுதத் தெரிஞ்சுகிட்டேன்!
பெரிசா ஏதுமில்லை!
கட்டாயக் கல்விக்கு
சட்டம் அப்ப இல்லை!
காலணா காசுக்கு
காலைமுதல் உழைச்சிருப்போம்!
கூத்தும் நாடகமும்
கும்பலா பார்த்திடுவோம்!
நல்ல சில விஷயங்கள்
நானறிஞ்சேன் அப்படிதான்!
படிப்பும் அவசியந்தான்
பட்டபின்னே உணர்ந்துகிட்டேன்!
இந்நாளில் படிக்கவைக்க
எம்மாஞ் செலவாகுதய்யா!
காலம் மாறிடுச்சி!
காடுநெலம் கொறைஞ்சிடுச்சி!
மாறி வரும் மழை
போல
மனுஷ மனம் மாறிடுச்சி!
கம்ப்யூட்டர் வழியாவும்
கல்யாணம் நடக்குதுங்க!
ஆன சிலநாளில்
அதுக இரண்டும்
பிரியுதுங்க!
புதுவாழ்க்க தொடங்கிப்புட்டா
புரிஞ்சுக்க வேணுமுங்க!
விட்டுக் கொடுப்பதிலே
வெளையும் பல நன்மையுங்க!
இலையெல்லாம் சருகாகும்
இயற்கை விதி இதுவாகும்!
இளக்காரம் செய்யாம
எம்பேச்சைக் கேட்டுக்கோங்க!
படிச்ச புள்ளைகளா-ஒரு
பாடம் சொல்லித்தாரேன்!
பெத்து வளத்தவங்க
பேசும் தெய்வமுங்க!
கடைசி காலம்வர
காப்பாத்த வேணுமுங்க!
கம்ப்யூட்டர் உள்ளாற
–என்
கதையக் கொஞ்சம்
போட்டுடுங்க!
கதையப் படிச்சவங்க
கருத்த கொஞ்சம்
போடுங்களேன் !
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!